வியாழன், 14 ஜனவரி, 2010

பர்தா தேவையில்லை என்போர் பிகினி அல்லது டூ பீஸில் வாதிடுவதுதானே நேர்மையான விவாதமாகும்?

கோவில் சிலைகளில் பெண்கடவுள் சிலைகளுக்கு உயர்ரகப் பட்டுத் துணி போர்த்தியிருப்பார்கள். அம்மண கோலத்தில் செதுக்கப்பட்ட சிலைகளுக்கு பட்டுத்துணி போர்த்தி, அம்மன் என்று மரியாதை செய்கிறார்கள். கடவுளை வழிபடும்போது மனம் அலைபாய்வதைத் தடுக்கவே சிலைகளுக்கும் ஆடை அணிவிக்கிறார்கள். சிலையே ஆனாலும் அங்கிருக்கும் சிற்பத்தில் கடவுள் தெரிவதைவிட அதன் பாலினமும் அங்கத்திரட்சியுமே கண்ணில்படுகிறது. தீவிர தெய்வ பக்தனுக்கும் சபலமுண்டு!

களைத்துத் திரும்பும் கணவனுக்காக தலைசீவி காத்திருக்கும் மனைவியால் கணவன் புத்துணர்வு பெறுகிறான். ஆபாசப் படங்களில் அங்கம் தெரியக் காட்சிப்படுத்தப்படுபவர்கள் பெண்களே! துரிதமாக பாலியல் வசப்படுத்தும் ரசாயன மாற்றம் பெண்ணைவிட ஆணுக்கே அதிகம் என்று மருத்துவம் சொல்கிறது. கன்னிப் பெண்களின் அங்கக் கவர்ச்சியில் தன்னிலை மறந்து தாடிவைத்தலையும் காதலர்களே இதற்குச் சான்று!

ஆணுக்குப் பெண் கவர்ச்சி - பெண்ணுக்கு ஆண் கவர்ச்சி என்றாலும் இறுதி வீழ்ச்சி ஆண்களுக்கே! இடுப்புச்சேலை மடிப்புல நான் கிறங்கிப்போனேனே! என்பதிலிருந்து பெண்ணின் சிறு அங்கமும் ஆணுக்கு பாலியல் உணர்வை தூண்டுகிறது என்பது மறைக்கமுடியாத உண்மை!

முஸ்லிம் பெண்கள் பர்தா எனும் மேலங்கி அணிவதை பெண்ணடிமைத் தனத்தின் வெளிப்பாடாகக் குற்றம்சொல்கிறார்கள். பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணியக்கூடாதென்ற தடை பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற நாடுகளில் சட்டமாக்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலும் பர்தா தடைசெய்யப்பட வேண்டுமா என்ற கருத்துக்கணிப்பை பிரபல பிபிசி நிறுவனம் நடத்துகிறது. தமிழ் வலைப்பதிவுகளிலும்கூட பர்தா குறித்த விமர்சனங்கள் அவ்வப்போது வைக்கப்படுகிறது.

முஸ்லிம் பெண்கள் தங்கள் புறஅழகை கணவன், மாமனார், தந்தை,மகன் சகோதரன் உறவுமுறை தவிர்த்த யாரிடமும் வெளிப்படுத்தக்கூடாதென்ற கட்டுப்பாடு உள்ளது. மேற்சொன்ன உறவுமுறையற்ற ஆண்களின் பார்வை முஸ்லிமல்லாத பெண்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும். இஸ்லாம் தவிர யூத, கிறிஸ்தவ,சீக்கியப் பெண்களும்கூட தமது உடலழகை மற்றவர்களிடம் மறைக்கவே விரும்பிகின்றனர்.

நம் இந்தியாவிலும் வடமாநிலப் பெண்கள் பர்தாவையொத்த மேலங்கியை அணிகிறார்கள். பெண்களின் அங்கங்களை மறைப்பது மத மற்றும் கலாச்சார ரீதியில் சரியென்று ஒப்புக்கொள்பவர்கள்,முஸ்லிம்கள் விசயத்தில் மட்டும் குறைகாண்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

ஜனாதிபதியாக பதவியேற்கும் சில நாட்களுக்கு முன்பு பர்தாவைப் பற்றி விமர்சித்த திருமதி.பிரதீபா பாட்டீல் இன்றுவரை முக்காடிட்டு, கைகளை மறைக்கும் பர்தாவுக்கிணையான உடையணிகிறார். முஸ்லிம் பெண்களை பர்தா அணியச்செய்து அவர்களின் உரிமையை இஸ்லாம் பறிக்கிறதெனில் இந்திராகாந்தி முதல் ப்ரதீபா பாட்டீல்வரை முக்காடுடிட்டுக்கொள்வதற்கும் இஸ்லாம்தான் காரணமா?

விஜய் டிவியில் நீயா- நானா? என்ற நிகழ்ச்சியில் பர்தா குறித்த கருத்தாடல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.பர்தா அவசியமே என்று ஒரு பிரிவினரும் தேவையில்லை என்று இன்னொரு பிரிவினரும் வாதிடுவார்களாம்! நிகழ்ச்சி நடத்துபவர் இறுதியில் தீர்ப்பளிப்பாராம்! தீர்ப்பு என்னவாக இருக்குமென்று சொல்ல வேண்டியதில்லை. கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல்லெறிந்தால் யாருக்கு நஷ்டம்?

இஸ்லாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டமார்க்கமல்ல என்கிறீர்கள்?ஆனால் அத்தகைய விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் முற்றுகைப் போராட்டம், ஆர்ப்பாடம் நடத்தி இதுபோன்ற சுதந்திரமான கருத்தாடலை தடுக்கிறீர்களே என்று சிலர் கேட்கலாம். எது சார் சுதந்திரம்? ஒருபக்கம் ஆபாச போஸ்டரை கிழிக்கும் போராட்டங்களை நடத்திக்கொண்டு இன்னொரு பக்கம் பர்தாவை விமர்சிப்பது நேர்மையான கருத்தாடலா? பர்தா தேவையில்லை என்போர் பிகினி அல்லது டூ பீஸில் வாதிடுவதுதானே நேர்மையான விவாதமாகும்?

ஆணும் பெண்ணும் சமம் என்பவர்கள் போராட்டம் நடத்த வேண்டிய இடம் பொதுக் கழிப்பிடங்கள்தான். ஏனென்றால் அங்குதான் ஆண்கள்-பெண்கள் என தனித்தனி படம்போட்டு பாகுபாட்டை வலியுறுத்துகிறார்கள். என்ன கொடுமைசார் இது!