ஞாயிறு, 10 ஜனவரி, 2010

மகிழ்வுடன் என்னை திருத்திக் கொள்கிறேன் - தமுமுக தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் கடிதம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமையகம் வெளியிடும

ஜிஹாதும் பயங்கரவாதமும் ஒன்று என்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவற்றை திரும்பப்பெற வேண்டும் என தமுமுக தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கடிதம் எழுதினார். இதனைத் தொடர்ந்து முஸ்லிம்களின் மன உணர்வை புண்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்று உள்துறை அமைச்சர் தமுமுக தலைவருக்கு பதில் அளித்துள்ளார்.



உள்துறை அமைச்சரின் கடிதத்திற்கு தமுமுக சார்பாக பாராட்டும் நன்றியும் தெரிவித்து தமுமுக தலைவர் கடிதம் எழுதியிருக்கிறார். இது தொடர்பாக முன்னதாக பேரா.டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் விடுத்த அறிக்கையில் ஜிஹாத் குறித்த தவறான பொருள்படும் படி உள்துறை அமைச்சர் ஆற்றிய உரை நாட்டின் நடுநிலையாளர்களை உண்மையிலேயே அதிர்ச்சி கொள்ள வைத்தது.

மதசார்பற்ற தேசிய பாரம்பரியத்தில் வந்த உள்துறை அமைச்சரா? இத்தகைய கருத்துகளை உதிர்த்தார் என அனைவரும் வியப்படைந்த வேளையில் தமுமுகவின் சார்பில் முஸ்pலிம்களின் மன உளைச்சலை அகற்றி தெளிவுபடுத்துமாறும் தாங்கள் கூறிய கருத்துக்களை திரும்பப்பெற்று நீங்கள் நியாயவான் என்பதை உறுதி செய்யவேண்டும் என தமுமுக தலைவர் கடிதம் மூலமாக கேட்டுக் கொண்டிருந்தார். இதற்கு இணங்க உள்துறை அமைச்சர் தமுமுக தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில ஜிஹாத் என்ற வார்த்தை பேச்சுவழக்கில் பிரயோகிக்கப் பட்டதைப் போன்று தானும் பயன்படுத்தியதாகவும் அதனை திருத்தும் வாய்ப்புக்காக மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்திருந்தார்;. முஸ்லிம் சமுதாயத்தின் எந்த ஒரு மனிதரின் மார்க்க உணர்வுகளையும் புண்படுத்தும் உள்நோக்கம் தனக்கு இல்லை என்பதை தனது கடிதத்தில் உறுதிபட தெரிவித்ததின் மூலம் தான் ஒரு நியாயவான் என்பதை நிரூபித்து இருப்பதாகவும் தமுமுக தலைவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

டாக்டர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் கடந்த ஜனவரி 1ம் தேதி உள்துறை அமைச்சருக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதினார். இந்த கடிதத்திற்கு உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் ஜனவரி 8 அன்று பதில் அனுப்பினார். அவரது பதிலின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

அன்புள்ள திரு. ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு

ஜனவரி 1, 2010 தேதியிட்ட உங்கள் கடிதத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு பக்தி நிறைந்த முஸ்லிம் என்ற அடிப்படையில் இஸ்லாத்தின் போதனைகளையும், ஜிஹாத் என்ற சொல்லின் உண்மையான பொருளையும் நீங்கள் நன்கு அறிந்திருக்கிறீர்கள் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. எனவே உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன். முஸ்லிம் சமுதாயத்தின் உள்ள எவரது உணர்வையும் புண்படுத்த வேண்டும் என்பது எனது எண்ணம் அல்ல என்பதையும் நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் இந்தியாவிலும் ஜிஹாது மற்றும் ஜிஹாதிகள் என்ற சொல் தீவிரவாத நடவடிக்கைகளையும் தீவிரவாதிகளையும் குறிப்பிடுவதற்காக பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. செய்தி ஊடகங்களும் இந்த சொல்லை வழக்கமாக பயன்படுத்தி வருகின்றன. ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் குறுகிய படிப்பில் ஜிஹாத் என்ற சொல்லின் பொருள் நம்பிக்கையில்லாதோர் மீதான போர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்காயிதா, ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் லஸ்கர் இ தொய்பாவின் தலைவர்களும் பல முறை இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்கள். நவம்பர் 26, 2008ல் மும்பையை தாக்கிய பயங்கரவாதிகளில் ஒருவன் பாகிஸ்தானில் இருந்து அவனை இயக்கிய ஒருவனுடன் நடத்திய பேச்சுகளின்; போதும் ஜிஹாத் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் அப்துல் முத்தலிப் (விமானத்தை குண்டுவைத்து தாக்கும் நிலையில் இருந்தவன்) உடைய தந்தை, 'என்னால் அங்கீகரிக்க முடியாத ஜிஹாதிய இஸ்லாத்தின் வடிவத்தின் தாக்கத்திற்கு எனது சொந்த மகன் இழக்காகிவிட்டான்' என்று சொன்னாதாக தகவல்கள் வந்துள்ளன.

நீங்கள் சுட்டிகாட்டியுள்ளது போல் பொதுவான பயன்பாட்டில் ஜிஹாதிற்கு தவறான அர்த்தம் கற்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களைப் போல் நானும் பொதுவாக கூறப்படும் பொருளில் அந்த வார்த்தையை பயன்படுத்தி விட்டேன். நான் மகிழ்ச்சியுடன் என்னை திருத்திக் கொள்கிறேன்.

உங்கள் உண்மையுள்ள (ஒ-ம்) ப. சிதம்பரம்

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: