வியாழன், 28 மே, 2009

அசத்தும் அசதுத்தீன் உவைசி!


ஹைதராபாத் மக்களவைத் தொகுதியை மீண்டும் ஒரு முறை கைப்பற்றியுள்ளது மஜ்லீலிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி. இக்கட்சியின் தலை வரான அசதுத்தீன் உவைசி வெற்றி பெற்றார். ஹைதராபாத்மக்களவைத் தொகுதியை மஜ்லீலிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி கைப்பற்றியிருப்பது எட்டாவது முறை என்பது குறிப்பிடத் தக்கது. அசதுத்தீன் உவைசி இரண்டாவது தடவையாக வெற்றி பெற்றிருக்கிறார்.


ஆறுதடவை அசதுத்தீனின் தந்தை சலாஹுதீன் உவைசி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


2009 மக்களவைத் தேர்தலில் உவைசி தன்னை எதிர்த்துக் போட்டியிட்ட தெலுங்கு தேச வேட்பாளர் ஜாகித் அலிகானை தோற்கடித்தார். இவர் சியாசத் என்ற உர்து செய்தி ஏட்டின் ஆசிரியராவார். தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவுடன் போட்டியிட்டார். இவரை அசதுத்தீன் உவைசி ஒருலட்சத்து 13 ஆயிரத்து 865 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.


தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு ஹைதராபாத் நாடாளுமன்ற தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகியது. 50லிருந்து 70 சதவீதம் வரை முஸ்லிம் வாக்காளர்களின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த காலத்தில் இந்த தொகுதியில் பாரதீய ஜனதா போட்டியிட்டது. பாஜக வின் மூத்த தலைவரான வெங்கையா நாயுடுவை 1996ல் அசதுத்தீன் தோற்கடித்திருக்கிறார்.


தற்போதைய மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றது மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலிலும் அசதுத்தீன் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது. இதுவரை ஐந்து சட்டமன்ற தொகுதி களைக் கைப்பற்றிவந்த மஜ்லீலிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி தற்போது ஏழு சட்டமன்ற தொகுதிகளை கைப் பற்றியுள்ளது.


அசதுத்தீனின் தம்பியான அக்பருத்தீன் உவைசி சந்திராயன் குட்டா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இங்கு அக்பருத்தீன் மூன்றாவது முறை யாக வெற்றி பெற்றிருக்கிறார்.


கட்சியின் செல்வாக்கு மிகுந்த சார் மினார் தொகுதியையும் தக்க வைத்துக் கொண்டது. யாகுத், புரா மற்றும் கர்வான் சட்டமன்ற தொகுதிகள் புதிதாக உருவாக்கப் பட்ட பஹதூர்புரா மற்றும் நம்பள்ள தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.


10 சதவீதம் முஸ்லிம்கள் உள்ள ஆந்திரப்பிரதேசத்தில் 294 சட்டமன்ற உறுப்பினர்களில் வெறும் பதினொரு பேரே முஸ்லிம்களாவார். இதில் ஏழு பேர் மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்­மீன் கட்சியிலிருந்தும், மூவர் காங்கிரஸிலிருந்தும் ஒருவர் தெலுங்கு தேசத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காங்கிரஸின் இரண்டு முஸ்லிம் அமைச்சர்கள், முஹம்மது அலி ஷப்பீரும், முஹம்மது பரீத்தீனும் தோல்வியைத் தழுவியுள்ளனர். ஆந்திரா மாநிலத்தில் முஸ்லிம் எம்பிக்களின் எண்ணிக்கை இரண்டிலிருந்து ஒன்றாக குறைந்தது. அசதுத்தீன் மட்டுமே ஒரே முஸ்லிம் மக்களவை உறுப்பினர்.

கருத்துகள் இல்லை: