ஞாயிறு, 31 மே, 2009

பிரபல மலையாள எழுத்தாளர் கமலா சுரய்யா மரணமடைந்தார்.



பிரபல மலையாள எழுத்தாளர் கமலா சுரய்யா மரணமடைந்தார். 75 வயது நிரம்பிய அவர் புனேயிலுள்ள ஜஹாங்கீர் மருத்துவமனையில் அதிகாலை 2 மணிக்கு இறந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மாதவிக்குட்டி என்ற பெயரில் மலையாளத்திலும் கமலாதாஸ் என்ற பெயரில் ஆங்கிலத்திலும் பல நாவல்கள் எழுதியுள்ள கமலா சுரய்யாவுக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஏராளமான வாசகர்கள் உண்டு.

1934 மார்ச் 31 இல் கேரள மாநிலம் பாலக்காட்டில் நாலப்பாட்டு குடும்பத்தில் பிறந்த கமலாசுரய்யாவின் தாயார் பிரபல பெண்கவிஞர் பாலாமணியம்மா. தந்தை வி.எம். நாயர். கணவர் மாதவதாஸ். இவருக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர். பால்யகால ஸ்மரணகள், நிர்மாதளம் பூத்தகாலம், பக்ஷியுடைய மரணம், யா அல்லாஹ், என்ற கதா என்பவை இவருடைய பிரசித்திப்பெற்ற நாவல்கள். கேரள சாகித்ய அகாதமி விருது, வயலார் விருது, எழுத்தச்சன் விருது போன்ற விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

அவருக்கு 65 வயதானபோது 1999 இல் அவர் இஸ்லாம் மதத்தை தழுவினார். மாதவிக்குட்டி என்ற தனது பெயரையும் கமலா சுரய்யா என்று மாற்றிக் கொண்டார்.

அவரின் இறுதி மரியாதைகளைக் கேரளத்தில் வைத்து நிறைவேற்றுவதற்காக அவரது உடல் கொச்சி கொண்டு வரப்படும் என அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: