ஞாயிறு, 17 மே, 2009

மண்ணைக்கவ்வியதா மனிதநேயமக்கள் கட்சி..?

த.மு.மு.க மக்கள் மத்தியில் அறிமுகமான 1995 முதல் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்தி போராடி வந்தது. 2004 ல் பிளவு ஏற்பட்டு த.த.ஜ. உதயமானபின், இட ஒதுக்கீடுக்காக த.த.ஜ.வும் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இந்நிலையில் கடந்த சட்டமன்றதேர்தலின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று கருணாநிதி அறிவித்தார். அதனை ஏற்று முஸ்லிம்களின் வாக்குகளை, [உயிரைக்கொடுத்து] பாடுபட்டு தி.மு.கவுக்கு பெற்றுத்தந்தனர் த.மு.மு.கவினர்.
முஸ்லிம்களின் பெருவாரியான வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்ந்த கருணாநிதி, தான் அளித்த வாக்குறுதி அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தந்தார். அதாவது நம்மிடம் பெற்ற வாக்குகளுக்கு பகரமாகத்தான் இட ஒதுக்கீடு தந்தார். அதோடு இட ஒதுக்கீடு தந்ததற்காக த.மு.மு.க. அவருக்கு நன்றி அறிவிப்பு மாநாடும் நடத்தி கணக்கு பைசல் செய்யப்பட்டுவிட்டது.

இந்நிலையில் த.த.ஜ., முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தந்ததற்காக வரும் நாடாளுமன்றதேர்தலில்[2009 ] தி.மு.கவை ஆதரிப்போம் என்று கடிதம் தருகிறது. ஏற்கனவே கணக்கு நேர் செய்யப்பட்ட விஷயத்திற்கு மீண்டும் கட்டணம் தரும் முடிவை த.த.ஜ எடுத்து நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை ஆதரித்தது. ஆனால் அதே திமுக கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரசுக்கு ஆதரவில்லை என்ற முடிவையும் எடுத்தது. அதோடு பி.ஜே.பி மற்றும் ம.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் 'தீவிர' பணியாற்றி அவர்களை மண்ணை கவ்வவைப்போம் என்றும் சூளுரைத்தது. அதற்காக எந்த காங்கிரசை ஆதரிக்கமாட்டோம் என்று பொதுக்குழுவில் தீர்மானித்தார்களோ, அதற்கு மாற்றமாக மயிலாடுதுறையில் போட்டியிட்ட பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற மமதையில், காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர் அய்யரை ஆதரித்ததோடு களப்பணி என்ற பெயரில் ஒரு ஆலிமை தாக்கும் அளவுக்கு பணியாற்றினார்கள். ஆனால் மண்ணை கவ்வியது யார்? பேராசிரியரா? அல்லது த.த.ஜ. ஆதரித்த மணிசங்கர் அய்யரா? இவ்வளவுகாலம் தொடர்ந்து வென்றுவந்த மணிசங்கர் அய்யரை த.த.ஜ. ஆதரித்ததால் மக்கள் அய்யரை புறக்கணித்து அதிமுகவை வெற்றிபெற செய்துள்ளார்கள். அதோடு பேராசிரியருக்கு 19814 வாக்குகளை வழங்கி வரவேற்பும் அளித்துள்ளனர். த.த.ஜ. ஆதரிக்காத தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் காங்கிரஸ் வென்றுள்ளநிலையில் மயிலாடுதுறையில் மண்ணை கவ்வியதற்கு காரணம் வெற்றியையும் தோல்வியையும் தருபவன் இறைவன் என்பதை மறந்து பேராசிரியரை மண்ணை கவ்வவைப்போம் என்று ஆணவமாக கூறியதால், அல்லாஹ் அவர்கள் ஆதரித்த வேட்பாளரை மண்ணை கவ்வவைத்தான். [அல்ஹம்துலில்லாஹ்]

இந்த தேர்தல் முடிவை கண்டு ம.ம.க. துவண்டுவிடக்கூடாது. சோர்ந்துவிடக்கூடாது ஏனெனில் அதிகாரம்-பணபலம்-படைபலம்-குண்டர்கள்பலம் நிறைந்த கட்சிகளுக்கு மத்தியில் , நீங்கள் பெற்றிருப்பது உண்மையான வாக்காகும். இந்த தேர்தல் வெற்றிக்கு முதல்படிதான். பணிகளை தொடருங்கள். அந்தப்பணி இறையச்சத்தின் அடிப்படையில் இருக்கட்டும். இன்று நீங்கள் தோற்றாலும்,

*முஸ்லிம்கள் திராவிடக்கட்சிகளின் சவளை பிள்ளைகள் என்ற இமேஜை உடைத்தவர்கள்!
*ஒரு சீட்டு கலாச்சாரத்தை ஒழித்தவர்கள்!

*சமுதாயத்தின் மானம் காக்க தனித்து, தனி சின்னத்தில் நின்றவர்கள்!

*சமுதாயத்தின் கண்ணியமா? பதவியா என்று வரும்போது பதவியை தூக்கி எரிந்து சரித்திரம் படைத்தவர்கள்!

என்று வருங்காலாம் உங்களை போற்றும்!

இவை எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாம் வல்ல இறைவன் கூறுகின்றான்;
إِن تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ وَإِن تُصِبْكُمْ سَيِّئَةٌ يَفْرَحُواْ بِهَا وَإِن تَصْبِرُواْ وَتَتَّقُواْ لاَ يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا إِنَّ اللّهَ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ
ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது. உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன். (3:120)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اصْبِرُواْ وَصَابِرُواْ وَرَابِطُواْ وَاتَّقُواْ اللّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (3:200)

முகவை எஸ்.அப்பாஸ்

கருத்துகள் இல்லை: