வியாழன், 14 மே, 2009

தலைமைத் தேர்தல் ஆணையரிடம் ம.மக. நேரில் புகார், மறு வாக்குப் பதிவு நடத்தவும் கோரிக்கை

மறு வாக்குப் பதிவு நடத்தவும் கோரிக்கை

மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி பகுதியில் இன்று காலை சுமார் 11.00 மணியளவில் திருவல்லிக்கேணியில் திமுக பகுதி செயலாளரும் மற்றும் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான காமராஜ், திமுகச் சேர்ந்த சேரன் ஆகியோர் தலைமையில் திமுக குண்டர்கள் 200க்கு மேற்பட்டோர் திருவல்லிக்கேணி என்.கே.டி. பள்ளி வாக்குச்சாவடி எண் 97, 98, 99, 100, 102, 104, 110 உட்பட்ட பத்து வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ள ஓட்டு போடுவதாக தகவல் வந்ததையடுத்து ம.ம.க. வேட்பாளர் ஹைதர் அலி அவர்கள் அங்கு சென்றுள்ளார்.

அப்போது திமுக குண்டர்கள் வீச்சரிவாள், கத்தி, கடப்பாரை, உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மனிதநேய மக்கள் கட்சியின் பிரமுகர்கள் பயணம் செய்த கார்களை (Safari Car (Ash Colour) No.PY01 AA 1977 & Bolero Car (White Colour) No. TN 21 AX 9001) துவம்சம் செய்துவிட்டு, கார்களில் இருந்த திரு. ஜாகிர் உசேன், ஹசன், மீரான் மொய்தீன், காஜா, பாரூக், சலாவுதீன், ஹைதர் அலி, வசீம், ஜாகிர் உசேன் மற்றும் மூஸா உள்ளிட்ட நபர்களை கொலை செய்யும் நோக்கத்துடன் கொலை வெறித் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது எமது கட்சி வேட்பாளரைக் கண்டவுடன் அவரையும் கொலை செய்யும் நோக்கத்துடன் மேற்கண்ட ஆயுதங்களுடன் அவரை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார்கள். உடனே கட்சிப் பிரமுகர்களின் உதவியுடன் அங்கிருந்து தப்பிச் சென்ற ஹைதர் அலி அவர்கள், மத்திய சென்னை தேர்தல் அதிகாரியிடம் மேற்கண்ட அசம்பாவிதங்கள் குறித்து எடுத்துக் கூறி நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்துள்ளார். மேலும் காவல்துறையிடமும் அவர் புகார் கொடுத்துள்ளார். ஆனால் ஆளுங்கட்சியினர் மீது காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.


இதனிடையே கலவரச் சூழலை தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட திமுக குண்டர்கள், மேற்கண்ட 10 வாக்குச் சாவடிகளிலும் எண்ணற்ற கள்ள ஓட்டுக்களை போட்டுள்ளனர். மேலும் கொடிய ஆயுதங்களுடன் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி பொதுமக்களை உள்ளே விடாமல் தடுத்து தொடர்ச்சியாக கள்ள ஓட்டுக்களைப் போட்டுள்ளார்கள். இதனால் பொதுமக்கள் வாக்குச் சாவடிக்குள் செல்ல பயந்து தங்களுடைய வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த முடியவில்லை.


இந்த அசம்பாவிதம் நடந்து கொண்டிருக்கும் போது அங்கிருந்த ஐஸ்'ஹவுஸ் காவல் நிலைய ஆய்வாளர் ரகுபதி உள்ளிட்ட காவல்துறையினர் மனிதநேய மக்கள் கட்சியினருக்கு எதிரான வன்முறையை கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தேர்தல் அதிகாரிகளும் அலுவலர்களும் திமுகவினருக்கு ஆதரவாகவே செயல்பட்டனர்.


இச்சூழ்நிலையில், மத்திய சென்னை தொகுதியில் வன்முறைகள் நடந்தேறிய வாக்குச் சாவடிகள் எண் 97, 98, 99, 100, 102, 104, 110 உட்பட பத்து வாக்குச் சாவடிகளில் மத்திய காவல் படை உதவியுடன் மறு தேர்தல் நடத்துமாறும், அதுவரை மத்திய சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்குமாறும், மேலும் திமுக குண்டர்களுக்கு ஆதரவாகவும், மனிதநேய மக்கள் கட்சிக்கு எதிராகவும் செயல்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட திமுக குண்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறும் மாநில தலைமைத் தேர்தல் ஆணையரிடம் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி அவர்கள் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: