ஞாயிறு, 31 மே, 2009

சீக்கிய மதத்தில் ஜாதிப் பிரச்சனை

ஜாதியத்தில் கட்டுண்டு கிடக்கும் இந்து சமுதாயத்தின்மீது ஏற்பட்ட அதிருப்தியால் தோற்றுவிக்கப்பட்ட மதங்களில் ஒன்றுதான் சீக்கிய மதம்.

மனிதனை மனிதன் ஏற்றத்தாழ்வு கூறி பாகுபடுத்துவதை எதிர்த்து அனைவரும் எல்லாம் வல்ல இறைவனின் முன் சரிசமம் என்பதையும், எங்கும் நிறைந்த அந்தப் பரம்பொருளுக்கு உருவமில்லை என்பதையும் நிலைநாட்டும் விதத்தில் குருநானக்கால் உருவாக்கப்பட்ட சீக்கிய மதத்தின் அடிப்படை, ஆதாரம் எல்லாமே குருகிரந்த சாஹிப் என்கிற அவர்களது வேதம் மட்டுமே.

ஜாதியத்தின் தடைகளை உடைத்தெறிய மதம் மாறிய தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் எப்படி வேறு சில மதங்களில் பழைய ஜாதிய கண்ணோட்டத்துடன் நடத்தப்படுகிறார்களோ அதே அனுபவம் தான் சீக்கிய மதத்திலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

சந்த் ரவிதாஸ் என்பவர் 700 ஆண்டுகளுக்கு முன்பே தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் குரலை உயர்த்தியவர். இவரது பல உபதேசங்கள் குருகிரந்த சாஹிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

உயர் ஜாதி சீக்கியர்கள் சந்த் ரவிதாஸ் குருநானக்கின் சீடராகக் கருதுகிறார்கள். ஆனால் ரவிதாஸின் சீடர்களோ அவரையே குருவாகக் கருதுகிறார்கள்.

1920-ல் மங்குராம் என்கிற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஜாதி சீக்கியருக்கு எதிராக ரவிதாஸரை முன்னிறுத்தி ஓர் இயக்கத்தைத் தோற்றுவித்தார். அந்தக் காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் நில உடைமையாளர்களாவது கூடத் தடை செய்யப்பட்டிருந்தது.

மங்குராமைத் தொடர்ந்து பல தாழ்த்தப்பட்ட சமுதாய இயக்கங்கள் தோன்றி விட்டன. சச்கண்ட் என்று அழைக்கப்படும் இந்த இயக்கங்கள் தாழ்த்தப்பட்டவர்களை இணைப்பது மட்டுமல்லாமல், சீக்கிய மதத்திலேயே ஒரு தனி அமைப்பாகவும் கலந்துவிட்டிருக்கின்றன. சீக்கிய மதத்திலும் தேராசச்சா சௌதா, தேராசச்கண்ட் போன்ற பல அமைப்புகள் இருக்கின்றன.

ஜாதி சீக்கியர்களின் சபையாக இருப்பது எஸ்.ஜி.பி.சி. எனப்படும் சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டி. இதுதான் எல்லா சீக்கிய குருத்வாராக்களையும் இணைத்து மேலாண்மை செலுத்தும் அமைப்பு.

அமிருதசரஸ் பொற்கோவிலில் தான் இதன் தலைமையகம். ஏறத்தாழ, வாட்டிகனில் உள்ள ரோமன் கத்தோலிக்க சபையைப் போன்றது இது எனலாம். இதில் தங்களை இணைத்துக் கொள்ளாமல் தாழ்த்தப்பட்டவர்களின் அமைப்புகள் ஆங்காங்கே செயல்படுகின்றன.

அநேகமாக பஞ்சாபிலுள்ள எல்லா ஊர்களிலும் எஸ்.ஜி.பி.சி.யின் குருத்வாராவும் தாழ்த்தப்பட்டவர்களின் குருத்வாராவும் காணப்படுகின்றன.

இப்போது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சீக்கியர்கள் ஜாதி சீக்கியர்களைப்போலவே வசதி பெற்றவர்களாகி விட்டனர். உலகம் முழுவதும் பரந்து காணப்படுகின்றனர். இவர்களது வளர்ச்சி தங்களுக்குச் சவாலாக அமையும் என்று கருதுகிறது எஸ்.ஜி.பி.சி.

இத்தனை நாளும் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருந்த ஜாதிப் பிரச்னை இப்போது எரிமலையாக வெடித்திருக்கிறது என்பதுதான் உண்மை. அவ்வளவு எளிதாக இந்த எரிமலை அடங்கி விடாது. அரசியல் கட்சிகள் அடங்க அனுமதிக்கவும் மாட்டார்கள்.

நன்றி: தினமணி (தலையங்கத்தின் ஒரு பகுதி)

இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து.

கருத்துகள் இல்லை: