ஞாயிறு, 31 மே, 2009

வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய வாய்ப்பு உள்ளது சந்திரபாபு நாயுடு பேச்சு.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய வாய்ப்பு உள்ளது
தெலுங்கு தேச மாநாட்டில் சந்திரபாபு நாயுடு பேச்சு


ஐதராபாத், மே.30 வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய வாய்ப்பு இருப்பதாக தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு கூறினார்.

தெலுங்கு தேச கட்சியின் 2 நாள் மாநாடு ஐதராபாத் நகரில் நடைபெற்றது. இதில் சந்திரபாபு நாயுடு பேசுகையில் கூறியதாவது:

இயந்திரங்களில் மோசடி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அதனால்தான் தேர்தலில் தெலுங்கு தேசம் தோற்று விட்டதாக கருதுகிறேன். அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் கூட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உபயோகத்தில் இல்லை.

நான் வெற்றி பெற்ற குப்பம் தொகுதிக்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சென்ற போது, ஒரு மூதாட்டி என்னை கட்டிப் பிடித்துக் கொண்டு, "வாக்குச்சீட்டுகள் மூலம் ஓட்டுப் போடும் முறை வந்தால்தான் நீ ஆட்சியை பிடிப்பாய். எனவே அடுத்த தேர்தலிலாவது அந்த நிலைமையை ஏற்படுத்திக் கொள்" என்றார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதோ மோசடி இருப்பதாகவும் அவர் கூறினார்.

நிபுணர்கள் குழு
எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய தேசிய அளவில் நிபுணர்கள் குழு ஒன்றை அமைக்க வேண்டும். மறைந்த தலைவர் என்.டி.ராமராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இதற்காக மத்திய அரசை வற்புறுத்துவோம்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

கருத்துகள் இல்லை: