புதன், 20 அக்டோபர், 2010

பாப்ரி மஸ்ஜித் நில விவகாரம்:ஜெயேந்திர,விஜேந்திரருடன் இணைந்து வக்பு வாரியத்துடன் பேச்சு நடத்த இந்து மகாசபை முடிவு

சென்னை,அக்.20:அயோத்தி நிலவிவகாரம் குறித்து வக்பு வாரியத் தலைவர்களுடன் வரும் 28-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக இந்து மகா சபை தேசிய தலைவர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

ராம ஜென்மபூமி இந்துக்களுக்கு உரியது. 1949-ம் ஆண்டு இந்த விவகாரம் தொடர்பாக முதன் முதலாக வழக்கு தொடர்ந்ததும் இந்து மகாசபை தான்.

அயோத்தி இடத்தை மூன்றாகப் பிரித்திருப்பதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த இடத்தை முழுமையாக இந்து மகா சபையிடம் ஒப்படைத்திருந்திருக்க வேண்டும். இந்த தீர்ப்பு எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. எனவே, இதை எதிர்த்து நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவிருக்கிறோம்.

ராமஜென்மபூமி முழுவதுமாக எங்களுக்கு கிடைத்தவுடனே ராமர் கோவில் கட்டும் பணியை துவங்குவோம். அங்கு ராமர் கோவில் கட்டுவது உறுதி.

இந்த விவகாரம் குறித்து வரும் 28-ம் தேதி வக்பு வாரியத் தலைவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறோம். இதற்காக ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் நானும் டெல்லி செல்கிறேன். அங்குள்ள மீனாட்சி கோவிலில் வைத்து தான் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறோம்.

இதில் ஏற்படும் உடன்பாட்டை பொருத்தே எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும், என்றார்.

கருத்துகள் இல்லை: