புதன், 20 அக்டோபர், 2010

பாபரி பள்ளிவாசல் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியக் கூட்டத்தில் தீர்மானம்!

பாபரி பள்ளிவாசல் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியக் கூட்டத்தில் தீர்மானம்! தமிழகத்திலிருந்து தமுமுக தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் பங்கேற்றார்!



பாபரி பள்ளிவாசல் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு அனைத்திந்திய முஸ் லிம் தனியார் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.



உ.பி. மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள புகழ்பெற்ற நத்வத்துல் உலூம் அரபி பல்கலைக் கழகத்தில் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் செயற்குழுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 16) அன்று நடைபெற்றது. அனைத்திந் திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் இந்தியாவில் உள்ள பல்வேறு முஸ்லிம் அமைப் புகளின் பிரதிநிதித்துவ அமைப் பாகும். முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் தலைவரும் நத்வா பல்கலைக்கழகத்தின் தலை வருமான மவ்லவி ராபி ஹசன் நத்வி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தனியார் சட்ட வாரியத்தின் செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் 51 பேர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். தமிழகத்தில் இருந்து இக்கூட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கலந்து கொண்டார்.

முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் மவ்லவி நிஜாமுத்தின், துணைப் பொதுச் செயலாளர் அப்துர் ரஹீம் குறைஷி, வாரியத்தின் துணைத் தலைவரும் ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் தலைவருமான மவ்லவி ஜலாலுத்தீன் அன்சார் உமரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சைய்யது சஹாபுதீன், ஜம்மியத்துல் உலமா ஹிந்தின் தலைவர்கள் மஹ்மூத் மதனி எம்.பி. மற்றும் அர்ஷத் மதனி பிரபல மூத்த வழக்குரைஞர் யூசுப் முசாலா, தனியார் சட்ட வாரியத்தின் பாபரி பள்ளிவாசல் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் டாக்டர் எஸ்.கி.யூ.ஆர். இல்யாஸ், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான், கர்நாடக இமாஅரத்தே ஷரீஅத் அமைப்பின் தலைவர் முப்தி அஷ்ரப் அலி, இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பேரா.சுலைமான், மில்லி கவுன்சில் பொதுச் செயலாளர் டாக்டர் மன்சூர் ஆலம் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 2.30 வரை நீடித்தது. தொடக்கமாக பாபரி பள்ளிவாசல் வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து வழக்குரைஞர் ஜஃபர்யாப் ஜீலானி விவரித்தார். இதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் இக்கூட்டத்தில் தெரிவித்த கருத்துரையின் சுருக்கம் பின்வருமாறு:



“பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகு 1993ல் ஜெய்பூரில் நடைபெற்ற அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இங்கே குழுமியுள்ள உறுப்பினர் களுக்கு மீண்டும் நினைவூட் டுகிறேன். அந்தக் கூட்டத்தில் ஒரு இடம் பள்ளிவாசலாக இருந்தால் அது என்றைக்குமே பள்ளிவாசலாகத் தான் இருக்க முடியும் என்று ஷரீஅத்தின் விதிமுறைப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த அடிப்படையில் தான் நாம் இந்தப் பிரச்னையை அணுக வேண்டும். பாபரி பள்ளிவாசல் தீர்ப்பு வெளிவந்த பிறகு நமது உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று ஒரு சில வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுகின்றன. இதனை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அல்லாஹ்வின் ஆலயத்தை அன்பளிப்பாக அளிப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. பாபரி பள்ளிவாசல் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிகவும் ஆபத்தானது. உச்சநீதிமன்றத்தை நாடி இந்தத் தீர்ப்பை புதைக் குழிக்கு அனுப்புவதுதான் நமது முதன்மையான பணியாக இருக்க வேண்டும். இதற்காக சையது ஷஹாபுத்தீன் அவர்கள் குறிப்பிட்டது போல் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் இந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். தலைசிறந்த வழக்குரைஞர்களின் பட்டாளம் இதற்காக அமைக்கப்பட வேண் டும். இந்தத் தீர்ப்பு நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளுக்கு எதிராக அமைந்துள்ளது என்பதையும் நாம் அனைத்து மக்களுக்கும் விளக்க வேண்டும். இந்தத் தீர்ப்பு நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது மிகவும் ஆபத் தானது. தீண்டாமை ரீதியான கொடுங்கோன்மைகளைக் கூட இந்தத் தீர்ப்பை முன்னுதாரணமாக காட்டி நியாயப்படுத்தும் நிலை ஏற்படும். இவ்வாறு தமுமுக தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் பேசினார்.

சுமார் நான்கரை மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) பல்வேறு குழப்பங்களும், தவறுகளும் நிறைந்த அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது மிக அவசியமாகும். இந்த மேல்முறையீட்டின் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளங்களை சிதைக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப் பை திருத்தி எழுத முயற்சிகள் மேற்கொள்வது,

2) மேல்முறையீடு தொடர்பான நீதிமன்ற செலவுகளுக்காக பாபரி பள்ளிவாசல் சட்டநிதி உருவாக்குவது,

3) பாபரி பள்ளிவாசல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அபத்தங்களை விளக்குவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கருத்தரங்குகள் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செயற்குழுக் கூட்டத்தின் இறுதியில் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. பாபரி பள்ளிவாசல் பிரச்சனையில் பேச்சு வார்த்தைக்கு வழி இல்லையா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த வாரியத்தின் துணைப் பொதுச் செயலாளர் அப்துல் ரஹீம் குரைஷி, ‘நீதிமன்றத் திற்கு வெளியில் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை. எதிர்தரப்பு ஏதாவது திட்டத்தை முன்வைத்தால் அது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம், ஷரீஅத் நெறிமுறைகள் மற்றும் முஸ்லிம்களின் கண்ணியம் ஆகியவற்றின் வெளிச்சத்தில் பரிசீலிக்கப்படும்‘ என்று பதிலளித்தார்.

ஹாசிம் அன்சாரி நடத்தி வரும் சமாதான பேச்சு வார்த்தைகள் குறித்து கருத்து கேட்டபோது, “அது தனி நபர் எடுக்கும் முயற்சி என்றும் ஆனால் தனியார் சட்டவாரியம் எடுக்கும் முடிவிற்கு தான் கட்டுபட்டு நடப்பதாக அன்சாரி தன்னிடம் தெரிவித்தார்” என டாக்டர் இல்யாஸ் தெரிவித்தார்.

மிகுந்த பாதுகாப்பு வளையத் திற்குள் இந்தக் கூட்டம் நடைபெற்றது. வாரிய உறுப்பினர் கள் மத்தியில் கருத்து மோதல் இருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அக்கருத் துகளையெல்லாம் பொய்ப்பிப்பது போல் ஏகமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை: