வியாழன், 28 அக்டோபர், 2010

சிறையிலிருந்து போட்டியிட்டு வெற்றிப பெற்ற எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்

கொச்சி,அக்.28:தனது சொந்த வாக்கையே பதிவுச் செய்ய அனுமதியில்லாமல் விய்யூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எஸ்.டி.பி.ஐ வேட்பாளராக போட்டியிட்ட பேராசிரியர் அனஸ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.

எர்ணாகுளம் மாவட்டம் வாழைக்குளம் ப்ளாக் பஞ்சாயத்தில் வஞ்சிநாடு டிவிசனில் போட்டியிட்ட பேராசிரியர் அனஸ் 3992 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் எ.எம்.குஞ்சு முஹம்மது 2089 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இடதுசாரி வேட்பாளரான யு.எஸ்.குஞ்சு முஹம்மதிற்கு 1666 வாக்குகளே கிடைத்தன.

இத்தொகுதியில் பி.டி.பி, ஜமாஅத்தே இஸ்லாமி தலைமையிலான ஜனகீய விகசன முன்னணி, கேரள காங்கிரஸ் மாணி பிரிவு ஆகிய கட்சிகள் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள அரசியல் வரலாற்றில் சிறையிலிருந்து ஒரு வேட்பாளர் வெற்றிப் பெறுவது அபூர்வ சம்பவமாகும்.

முவாற்றுப்புழாவில் பேராசிரியர் ஜோசப் என்பவர் நபி(ஸல்...) அவர்களை அவமதிக்கும் விதமாக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி வினாத்தாள் தயாரித்த சம்பவத்தில் கோபமடைந்த இளைஞர்கள் யாரோ சிலர் அவருடைய கையை வெட்டினர். இதுத் தொடர்பாக போலீசாரால் பேராசிரியர் கைதுச் செய்யப்பட்டார்.

சிறைச் சட்டப்படி தண்டனைப் பெற்ற குற்றவாளிகளுக்கு வாக்களிக்க உரிமையில்லை. ஆனால், விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் சிறை அதிகாரிகள் மேற்கண்ட சட்டத்தையே நடைமுறைப்படுத்தியதால் பேராசிரியர் அனஸ் வாக்களிக்க இயலவில்லை.

பேராசிரியர் அனஸ் கைவெட்டி வழக்கில் நிரபராதி என இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளே கூறியதால் மக்களின் தீர்ப்பை எதிர்நோக்கி தேர்தலில் களமிறங்கினார் பேராசிரியர் அனஸ்.

முவாற்றுப்புழா நீதிமன்றத்தில் சிறப்பு மனு ஒன்றை தாக்கல் செய்து அனுமதி கிடைத்த பிறகுதான் பேராசிரியர் அனஸ் தேர்தலில் போட்டியிட்டார்.

கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி போலீஸ் அழைத்ததன் பேரில் முவாற்றுப்புழா காவல் நிலையத்தில் ஆஜரான அனஸை கைதை பதிவுச் செய்யாமலேயே இரண்டு நாட்கள் போலீஸ் கஸ்டடியில் வைத்தனர்.

சமூக-கலாச்சார களங்களில் தீவிர பணியாற்றிய முவாற்றுப்புழா இலாஹியா கல்லூரி பேராசிரியரான அனஸ் போட்டியின் துவக்கத்திலேயே தான் நிரபராதி என்பதை மக்கள் முன் விவரித்ததால் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார்.

போலீசார் சதித்திட்டம் தீட்டி கல்வியறிவுப் பெற்ற முஸ்லிம் இளைஞர்களை தேசிய நீரோட்டத்திலிருந்து அகற்றும் வகையில் செயல்பட்டதே தனது விவகாரத்திலும் நடந்ததாக பேராசிரியர் அனஸ் வாக்காளர்களை புரியவைத்ததன் பலனாக அனஸிற்கு உயரிய அங்கீகாரம் அளிக்கும் விதமாக அவரை தேர்தலில் வெற்றிப்பெற வைத்துள்ளனர் மக்கள்.

சிறையிலிருந்து தனது வெற்றியை அறிந்த பேராசிரியர் அனஸ் தனது நன்றியை வாக்காளர்களுக்கு தெரிவித்துக் கொண்டார். தான் நிரபராதி என்பதை நிரூபித்து சிறையிலிருந்து விடுதலையானால் உடனடியாக ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து நன்றி தெரிவிப்பதாகவும் அனஸ் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் அனஸை கைவெட்டிய வழக்கில் குற்றவாளியாக சேர்த்தைத் தொடர்ந்து இலாஹியா கல்லூரி நிர்வாகம் அவரை கல்லூரியிலிருந்து நீக்கியது. ஆனால் அக்கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் 21 இடங்களை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

கருத்துகள் இல்லை: