செவ்வாய், 5 அக்டோபர், 2010

ராமர் பிறந்த இடம் அயோத்தி என தீர்ப்பளித்த நீதிபதி சர்மாவுக்கு பாராட்டு விழா: ராமஜென்மபூமி அறக்கட்டளை முடிவு

அயோத்தி,அக்.5:அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி சர்மாவுக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அயோத்தியில் ராமஜென்மபூமி நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக மூன்று தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இதில் ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளையும் ஒன்றாகும். அறக்கட்டளையின் சாதுக்களும், சன்யாசிகளும் இணைந்து இந்த பாராட்டு விழாவை நடத்த முடிவு செய்துள்ளதாக அறக்கட்டளையின் உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தி தெரிவித்தார்.

ராமஜென்ம பூமி வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதைப் பாராட்டும் வகையில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் வேதாந்தி தெரிவித்தார். இது தொடர்பாக நீதிபதி சர்மாவுடன் பேசி, பாராட்டு விழாவுக்கான தேதி இறுதி செய்யப்படும் என்றார்.
பணியிலிருந்து ஓய்வு பெற்றதால் இவருக்கு முதலில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற இரண்டு நீதிபதிகளான எஸ்.யு. கான் மற்றும் சுதிர் அகர்வால் ஆகியோர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தப்படும் என்று வேதாந்தி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: