வியாழன், 28 அக்டோபர், 2010

சிறைக்குள் வேண்டாம் போலீஸ்! இப்படிக்கு குணங்குடி ஆர்.எம்.அனீபா! ஜீனியர் விகடனில் வெளிவந்தக் கட்டுரை

அரசியல் கைதிகளால் நிரம்பி வழிகிறது, அமைதிப் பூங்காவான தமிழகச் சிறைச்சாலைகள்!

கைதிகள், தாங்கள் செய்த குற்றங் களை உணர்ந்து, திருந்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்தச் சிறைகள், சித்ரவதைக் கூடங்களாக விளங்குவதை... அதனுள் 13 ஆண்டுகள் இருந்து அனுபவித்த நான், எந்த தவறும் செய்யவில்லை என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவன்.

வெள்ளைக்காரன் ஆண்ட 1894-லிலேயே சிறைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அவன் இந்த நாட்டைவிட்டுப் போன பிறகும், அந்த ஷரத்துகள் இன்று வரை அமலில் இருக்கின்றன. தன்னுடைய அரசாங்கத்தை எதிர்க்கும் அடிமைகளைத் துன்புறுத்தக் கொண்டுவரப்பட்ட சிறைச் சட்டம், சுதந்திர இந்தியாவில் 'விடுதலை' இந்தியனைப் பழிவாங்கவும் பயன்படுத்தப்படுவதுதான் கோரமானது!

பீகார் மாநிலம் பாகல்பூர் சிறையில், கைதிகளின் கண்களையே பிடுங்கி வீசினர். 1998-ல் சென்னை மத்திய சிறையில் நடந்த கலவரத் தில், 10-க்கும் மேற்பட்ட கைதிகள் கொலை செய்யப்பட்டார்கள். 1999-ல் பாளையங்கோட்டை சிறையில் இருந்து குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏழு நபர்கள் அதிரடியாக வேலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டு, அங்கு அவர்கள் மொட்டை அடிக்கப்பட்டு, 30 நாட்கள் நிர்வாணமாக வைக்கப்பட்டார்கள். அதே ஆண்டின் இறுதியில் மதுரை, பாளை மத்திய சிறை தவிர, மற்ற ஆறு மத்திய சிறைகளில் இஸ்லாமிய சிந்தனையாளர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, தனி செல்லில் 45 நாட்கள் சூரிய வெளிச்சம்கூட படாத வகையில் கொடுமைப்படுத்தப்பட்டனர்.

1990-களின் தொடக்கத்தில் இருந்து சிறைகளில் 'உயர் பாதுகாப்புத் தொகுதி' என்ற தனிப் பிரிவை உருவாக்கி சித்ரவதை செய்து வருகிறார்கள். இங்கே மனித வாடையும், இயற்கைக் காற்றும் மருந்துக்குக்கூட கிடைக்காது. இதில்தான் புரட்சியாளர்கள், தமிழ் தேசிய மற்றும் இஸ்லாமியப் போராளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அரசின் சட்டபூர்வ, சட்ட விரோத வன்முறைகள் இவர்கள் மீது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அரசியல் சாசன சட்டத்துக்கு எதிராக, மனித உரிமைகளை மீறுகிற வகையில் இவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். அரசியல் சிறைவாசிகள் முழுமையாக உளவுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் நடத்தப்படுகின்றனர். சிறை நிர்வாகம் என்பது பெயர் அளவில்தான். உளவுத் துறையே சர்வ அதிகாரம் கொண்டதாக செயல்படுகிறது.

சிறையில் 90 சதவிகிதம் பேர் ஏழை மற்றும் சாதாரண மக்கள். இவர்கள் அடிப்படையில் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். 'இவர்கள் இந்த அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் என்றால், சட்டபூர்வமான எந்தத் தண்டனையும் தரட்டும். ஆனால், சிறைக்கூடங்களில் சித்ர வதைகள் செய்வது என்ன நியாயம்?' என்பதுதான் எங்களது கேள்வி!

பணம் படைத்த அதிகாரத்தின் ஆராதனைக்கு உரிய ஒருவர், பல கோடி மோசடியில் மாட்டி, இதே சிறைக்குள் வந்தால், அவருக்கு ராஜ மரியாதை தரப்படுகிறது. சிறை வாசலில் நின்று அதிகாரிகள் வரவேற்று உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். நோயே இல்லை என்றாலும், சிறை மருத்துவ மனைகளில் அவர்கள் தங்கவைக்கப்படுகிறார்கள். சொகுசான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரப்படுகிறது. உள்ளே வருபவர் சாதாரணமானவர் என்றால், எல்லார் முன்னிலையிலும் அவமானப்படுத்தப்படுகிறார்.

'சிறைக் கட்டடத்தில் உள்ள ஒவ்வோர் தொகுதியிலும், தனித் தனி புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு, அவை மாவட்ட முதன்மை நீதிபதியின் நேரடிப் பராமரிப்பில் இருக்க வேண்டும். மாத ஆய்வுக்கு மாவட்ட நீதிபதி சிறைக்கு வரும்போது, சிறை அதிகாரிகளைத் தவிர்த்து சிறைவாசிகளிடம் நேரடியாகக் குறைகளைக் கேட்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் சொல்கின்றன. ஆனால், இவை எங்கும் நடைமுறையில் இல்லை.

இந்தக் குறைபாடுகள் அனைத்தை யும் ஒரேநாளில் முற்றிலுமாகத் தீர்த்துவிட முடியாதுதான். அவற்றைப் படிப்படியாகச் சரிப் படுத்தினாலும்கூடப் போதும். ஆனால், அதற்கும் வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. இருப்பினும் இது தொடர்பான ஒரு குறைந்தபட்சக் கோரிக்கை என்ன வென்றால், மனிதாபிமானம் உள்ள மனிதர்கள் சிறைத் துறையைக் கவனிக்கும் பொறுப்புக்கு வர வேண்டும் என்பதே.

'கைதிகள் தங்களின் அடிமைகள்!' என்று நினைக்கும் போலீஸார் கையில் இன்று சிறைகள் இருக் கின்றன. காவல் துறை இயக்குநர் ஆர்.நட்ராஜ் சிறைத் துறை இயக் குநராக இருந்தபோது... இந்தியாவில் முதன் முதலாக இந்து, முஸ்லிம், கிறிஸ்துவப் பண்டிகை நாட்களில் சிறைவாசிகளை அவர்களின் குடும்பத்தினர் சந்தித்து நலம் விசாரிக்க அனுமதி அளித்தார். ஒரே ஒரு அதிகாரி மட்டும் இப்படி இருந்தால் போதாது. போலீஸார் அனைவருக்குள் ளும் அந்த மன நிலை புகுத்தப்பட வேண்டும்.

காவல் துறையினரால்அடக்கு முறைக்கு ஆளாகி, சிறைப்பட்டு உள்ளவர்களைப் பராமரிக்கும் மனிதாபிமானம் சார்ந்த பொறுப் புக்கு, அதே காவல் துறையின் தலைவர்களை நியமனம் செய் வதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, இந்திய ஆட்சிப் பணி, சுகாதாரத் துறை அல்லது நீதித் துறையைச் சார்ந்தவர்களை சிறைத் தலைவராக நியமனம் செய்வதன் மூலம், மனித உரிமைகள் மீறலை பெருமளவுக்குக் கட்டுப் படுத்தலாம்!

படம்: அ.ரஞ்சித்

நன்றி ஜுனியர்விகடன்

கருத்துகள் இல்லை: