திங்கள், 18 அக்டோபர், 2010

இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதிக்குத் தடைவிதிக்குமாறு பிரிட்டிஷ் தூதுவர் கோரிக்கை

பலஸ்தீனர்களுக்குச் சொந்தமான நிலத்தில் தொடர்ந்தும் சட்டவிரோத யூதக் குடியேற்றங்களை நிறுவிவரும் இஸ்ரேலுடனான அனைத்து இராணுவ ஒப்பந்தங்களையும் ரத்துச் செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் முன்னாள் பிரித்தானியத் தூதுவர் லோர்ட் ரைட் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிரியா மற்றும் சவூதி அரேபியாவுக்கான பிரித்தானியத் தூதுவராகப் பணிபுரிந்த லோர்ட் ரைட் கடந்த வெள்ளிக்கிழமை (15.10.2010) வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில், பலஸ்தீன் நிலத்தில் தொடர்ந்தும் சட்டவிரோதமான குடியேற்றங்களை எத்தகைய தயக்கமும் இன்றி நிறுவிவரும் இஸ்ரேலின் அடாவடித்தனமான போக்கை மிக வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இஸ்ரேலின் இத்தகைய அத்துமீறிய செயற்பாடுகள் மிக மோசமான விளைவுகளையே தோற்றுவிக்கும் எனக் கூறியுள்ள அவர், 'இஸ்ரேல் தொடர்ந்தும் சட்டவிரோத யூதக் குடியேற்றங்கள் நிறுவுவதை வழக்கமாக்கிக் கொண்டால், அதன் இந்தப் போக்கு மத்திய கிழக்குப் பிராந்திய அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைவது உறுதி' என்று எச்சரித்துள்ளார்.

அவர் தமது கட்டுரையில், இஸ்ரேல் கடந்த வருடமும் சட்டவிரோதமான யூதக் குடியேற்றங்கள் பலவற்றை நிறுவியுள்ளது என்பதை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டியுள்ளார். மேற்குக் கரை, ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரங்களில் வாழும் பலஸ்தீனர்களைத் தத்தமது சொந்த இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றி, அங்கு யூத ஆக்கிரமிப்பாளர்களைக் கொண்டுவந்து நிரப்பும் நிலைப்பாட்டை இஸ்ரேல் இனியும் மாற்றிக்கொள்ளாத பட்சத்தில், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்து தடுத்துநிறுத்த வேண்டும் என்று லோர்ட் ரைட் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: