ஞாயிறு, 28 ஜூன், 2009

தேனி பாமக சிறுபான்மை பிரமுகர் மாயம்-ஐகோர்டில் மனு

மதுரை: தேனியில் மாயமான பாமக சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் ஷேக் அப்துல்லாவை இரு வாரங்களுக்குள் கண்டுபிடித்து ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

தேனி அருகே கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த ரியாசூதீன் சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனுவில் கூறியுள்ளதாவது,

என் சகோதரர் ஷேக் அப்துல்லா ஹோமியோபதி டாக்டராக பணியாற்றி வருகிறார். பாமக சிறுபான்மை பிரிவு செயலாளராக உள்ளார். இவரின் மகள் கஜீரா. வேறு பள்ளியில் பயின்ற இவரை தேனி நாடார் சரஸ்வதி துவக்கப் பள்ளியில் சேர்க்க சேக் அப்துல்லா திட்டமிட்டார்.

அப்பள்ளியின் செயலாளர் வெங்கடேசன் கூறியபடி ஏற்கனவே படித்த பள்ளியிலிருந்து மாற்று சான்றிதழையும் வாங்கி விட்டார். தற்போது கஜீராவை பள்ளியில் சேர்க்காமல் பள்ளி செயலாளர் இழுத்தடித்துள்ளார்.

இதில் ஏற்பட்ட தகராறில் கஜீராவின் மாற்று சான்றிதழை பள்ளி செயலாளர் கிழித்து விட்டார். இது குறித்து ஷேக் அப்துல்லா தேனி காவல் நிலையத்தில் புகார் செய்தார். தேனி மாவட்ட பாமகவினர் பள்ளி நிர்வாகம் குறித்து போஸ்டர் அச்சிட்டு ஒட்டினர்.

இதனால் ஷே அப்துல்லாவை வெங்கடேசன் மிரட்டினார். இந்த நிலையில், கடந்த 20ம் தேதி வெளியே சென்ற ஷேக் அப்துல்லா இதுவரை வீடு திரும்பவில்லை.

பள்ளி செயலாளர், தலைவர் ஜெயசீலன், துணை தலைவர் பாலகிருஷ்ணன், நிர்வாக குழு உறுப்பினர் திருப்பதி ஆகியோர் இதற்கு பின்னணியில் உள்ளனர். அவரை போலீசார் கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பானுமதி, மாலா கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், ஷேக் அப்துல்லாவை இரு வாரங்களுக்குள் போலீசார் கண்டுபிடித்து ஆஜர்படுத்த வேண்டும் என்று இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை: