வியாழன், 15 அக்டோபர், 2009

இஸ்ரேலிய இராணுவத்தில் சேர இஸ்ரேலிய மாணவர்கள் மறுப்பு



இஸ்ரேலில் 80 க்கும் மேலான மாணவர்கள் இஸ்ரேலிய இராணுவத்தில் தங்களை இணைத்துக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்கள் நாடு ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் அடக்குமுறையை கையாளுவதாகவும் அதனால் தாங்கள் இராணுவத்தில் சேர விரும்பவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இந்த மாணவர்கள் இதனை டெல் அவிவில் நடந்த ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

அந்த மாணவர்கள், "நாம் உண்மையை மறுக்க முடியாது, இந்த ஆக்கிரமிப்பு வன்முறையானது, இனவெறி பிடித்தது, மனித தன்மை இல்லாதது, சட்டத்திற்கு புறம்பானது, ஜனநாயகத்திற்கு எதிரானது, முறைகேடானது மற்றும் இது எல்லா வகையிலும் இரு நாடுகளுக்கும் இது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக்கூடியது" என்று கூறினர்.

"மேலும் சுதந்திரம், நீதி, நேர்மை, அமைதி ஆகியவற்றைப் பற்றி போதிக்கப்பட்ட நாங்கள் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த இராணுவ புறக்கணிப்பு கடிதமாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வழங்கப்பட்டது. இதில் 84 மாணவர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

இதில் நான்கு பேர், "இராணுவத்தில் தங்களை இணைத்துக்கொள்ளாதது தங்களை சிறையில் தள்ளக்கூடும் என்று தங்களுக்கு தெரியும் என்றும் தாங்கள் வாழும் சமுதாயத்திற்கும் அதன் கோட்பாடுகளுக்கும் உண்மையுள்ளவர்களாக இருந்ததினால் தான் இதனை மறுக்கிறோம்" என்று கூறினர்.

19 வயது நிரம்பிய பென் டேவிட் என்ற மாணவர் கூறுகையில், "நாங்கள் ஆக்கிரமிப்பின் போது தான் பிறந்தோம், இன்று எங்களில் பலர் இந்த ஆக்கிரமிப்பை இயற்கையான ஒன்று என்று பார்க்கப் பழகிவிட்டனர்" என்று கூறினார்.

பென் டேவிட் நவம்பர் தொடக்கத்திலிருந்து இராணுவத்தில் இணைய சட்டப்பூர்வமாக கட்டுப்பட்டு இருக்கிறார்.
ஆனால் அவர், "நான் என் கண்களை திறந்து விட்டேன், என்னை சுற்றியுள்ள இக்கட்டான இஸ்ரேலிய சமுதாயத்தை நான் கண்டேன். நான் மேற்குக் கரை சென்று பாலஸ்தீனியர்களை காணும் போது என்னுடைய பார்வையை நான் மாற்றிக்கொண்டேன்" என்று கூறினார்.

அமெலியா மார்கொவிச் என்ற மாணவியிடம், "அவர் வேறு விதமான சமூக சேவை ஏதும் செய்வாரா என்று கேட்டதற்கு, சமூக சேவையில் ஒருவர் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது என்பது வாழ்நாள் முழுவதும் செய்யக்கூடிய செயல். நாம் கட்டாயமாக செய்யவேண்டும் என்பதற்காக இரண்டு அல்லது மூன்று வருடங்கள் செய்வதின் பெயர் சமூக சேவையல்ல" என்று கூறினார்.

"சிறையில் இருப்பது, என்னுடைய சமூக சேவை செய்யும் எண்ணத்தை பாதிக்காது, நான் அதனை சிறையிலிருந்து வெளி வந்ததும் செய்து கொள்வேன்" என்று கூறினார்.

இராணுவத்தில் சேர மறுத்த மாணவர்களில் மற்றுமொருவரான எஃபியீ பிரேன்னேர் அவருடைய அனுபவத்தை கூறினார். "நான் இராணுவத்தில் சேரப்போவதில்லை என்று கூறிய போது என் பெற்றோர்கள் மோசமாக நடந்து கொண்டனர். என்னை வீட்டை விட்டு விரட்டியடிக்கப் போவதாக மிரட்டினர்" என்று அவர் கூறினார்.

எப்படியானாலும் மூன்று வருடகாலம் இராணுவத்தில் பணிபுரிவது இது போன்ற அறிக்கை விடுவதையும் சிறையில் அடைபடுவதையும் விட எளிதானது. நான் இராணுவத்தில் சேர மறுத்த காரணங்களுள் ஒன்று, "எல்லா இஸ்ரேலியர்களும் இந்த ஆக்கிரமிப்பிற்கு ஆதரவானவர்கள் இல்லை என்றும் சிலர் இந்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக தியாகம் செய்யவும் தயாராக இருக்கின்றார்கள் என்றும் பாலஸ்தீனிய மக்களுக்கு நான் தெரியப்படுத்த விரும்புகின்றேன்" என்று அவர் கூறினார்.

"நாங்கள் இங்கு செய்வதை அறிந்த பாலஸ்தீனியர்கள் எங்களுக்கு நன்றி தெரிவித்து எங்களை ஊக்கப்படுத்தியுள்ளனர்" என்று அவர் கூறினார்.

பிரேன்னேர், "மேலும் நாங்கள் இராணுவத்தின் விசாரணையை சந்திக்க தயாராக உள்ளோம் என்பதனை முன்னதாகவே சட்டப்பூர்வமாக அறிவித்துவிட்டோம்" என்று கூறினார்.

இது போன்ற கடிதங்கள் ஆண்டாண்டு காலமாக வெளியிடப்பட்டு வருகின்றன. இராணுவத்தில் பணிபுரிய மறுத்து வெளியிடப்பட்ட கடிதம் இஸ்ரேலில் முதன் முதலில் 1979 ஆம் வருடம் கொடுக்கப்பட்டது எனபது குறிப்பிடத்தக்கது.

நன்றி
அல் ஜசீரா.

கருத்துகள் இல்லை: