திங்கள், 26 அக்டோபர், 2009

பரிதாபத்திற்குரிய பால்தாக்கரே!

நடந்து முடிந்த மூன்று மாநில சட்டமன்ற தேர்தலில் வழக்கம்போல் பாரதீய ஜனதா கட்சி மண்ணை கவ்வியுள்ளது. அதிலும் குறிப்பாக அக்கட்சியுடன் கூட்டணி கண்டு களம்கண்ட இந்துத்துவா கட்சியான சிவசேனா மராட்டியத்தில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டு நாணப்பட்டு நிற்கிறது. அவரது கட்சியின் இந்த படுதோல்விக்கும் காங்கிரஸ் பலதொகுதிகளில் வெல்வதற்கும், பால்தாக்கரேயின் கொள்கை வாரிசான ராஜ்தாக்கரே கட்சியான நவநிர்மான் கட்சியே காரணம் என்பதால் பால்தாக்கரேயை இந்த தோல்வி பெரிதும் பாதித்துள்ளது.'மராட்டியம் மராட்டியர்களுக்கே' என்ற கொள்கையுடைய பால்தாக்கரே, இன்று மராட்டியம் கைவிட்டதால் மனமுடைந்து புலம்புகிறார். அவரது 'சாம்னா' பத்திரிக்கையின் தலையங்கத்தில் அவர் தீட்டியுள்ள விஷயங்கள் அவரது நிலையை தெளிவுபடுத்துகிறது.

'மராட்டியர்கள் தான் என் முதுகில் குத்தி விட்டனர். வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் இல்லை. ஒரு தீய சக்தியானது மராத்தி மக்களிடம் இருந்து என்னை பிரித்து விட்டது. நம்முடைய மனங்கள் சேராமல் தடுத்து விட்டது.எனக்கு மராத்தியர்கள் மீதும், கடவுள் மீதும்... ஏன் எல்லாவற்றிலுமே நம்பிக்கை போய் விட்டது. இதைச் சொல்வதற்காக மிகுந்த வேதனைப்படுகிறேன். அதேசமயம் உண்மையை மறைக்கவோ, அல்லது தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்துவதையோ நான் விரும்பவில்லை.சிந்தனைகள் செத்து விட்டதுஎன்னுடைய வாழ்க்கையில் உங்களுக்காக (மராத்தியர்கள்) 44 வருடங்கள் அர்ப்பணித்து இருக்கிறேன். நான் எங்காவது தவறாக நடந்து இருக்கிறேனா? அல்லது நான் செய்த தவறு என்ன? என்று தெரியவில்லை. மராத்தி மக்களுக்காக அனைத்து வழிகளிலும் பாடுபட்டு வரும் சிவசேனாவுக்கு மண்ணின் மைந்தர்கள் ஏன் ஓட்டுப் போடவில்லை? என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. என்று கூறியுள்ளார் பால்தாக்ரே!

இந்த தோல்வியின் மூலம் பால்தாக்கரே பல படிப்பினை பெற வேண்டியுள்ளது. வெறுமனே மதவாதம்-இனவாதம்-மொழிவாதம்-மாநிலவாதம் பேசுவது மட்டும் மக்களிடம் எல்லாகாலகட்டத்திலும் வெற்றியை பெற்றுத்தந்துவிடும் என்ற எண்ணம் தவறானது என்பதை முதலில் புரியவேண்டும். மக்களின் உணர்ச்சி தீயை தூண்டிவிட்டு அதில் நாற்காலி சுகம் காணும் கனவு கானல் நீராகவே முடியும் என்பதை பால்தாக்கரே மட்டுமன்றி, அத்வானி வகையறாக்களும் உணர்வது அவர்களுக்கு நல்லது.

அடுத்து தோல்வியை சந்தித்தவுடன் மராட்டியர்கள் மீது மட்டுமல்ல. கடவுள் மீதே நம்பிக்கை இழந்துவிட்டதாக கூறுகிறார் பால்தாக்கரே! ஆக அவர் ஒருவரையோ-அல்லது கடவுளையோ நம்புவது அவர்கள் மூலம் தனக்கு ஆதாயம் வரும்வரை தான் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். இந்தநேரத்தில் பால்தாக்கரே முஸ்லிம்களின் நிலையை எண்ணிப்பார்க்கவேண்டும். ஒரு முஸ்லீம் தனது வெற்றிக்குரிய எல்லா காரியங்களையும் [மார்க்க வரையறைக்குட்பட்டு]செய்வான். அதே நேரத்தில் அவனது காரியம் தோல்வியில் முடியுமானால் துவண்டுவிடமாட்டான். ஒரு உண்மையான முஸ்லீம் தனக்கு தோல்வியோ, இழப்போ ஏற்ப்பட்டதற்காக தனது இறைவனை ஒரு போதும் நிராகரிக்கமட்டான். இறைவன் மீது நான் நம்பிக்கை இழந்துவிட்டேன் என்று கூறமாட்டான். காரணம் அவன் ஏற்றுக்கொண்டிருக்கும் இறைவன்தான் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவன் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை அவனுடைய உள்ளத்தில் இருப்பதால், அவனுக்கு வெற்றி கிடைத்தால் அது மமதையை தராது; அவனுக்கு தோல்வி கிடைத்தால் அது அவனுக்கு வெறுப்பையும் தராது. காரணம் அகிலத்தை படைத்த அல்லாஹ் தன் அருள்மறையில் இப்படி கூறுகின்றான்;

[நபியே] நீர் கூறுவீராக; அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ நாடியவர்களுக்கு ஆட்சியை வழங்குகின்றாய்; நாடியவர்களிடமிருந்து பறித்தும் விடுகின்றாய். நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியோரை இழிவு படுத்தவும் செய்கின்றாய். நன்மைகள் யாவும் உன் கைவசமே உள்ளன. அனைத்து பொருட்களின் மீதும் நிச்சயமாக ஆற்றல் உடையவனாக இருக்கின்றாய்.
[அல் குர்ஆண்-3 ;26 ]

இந்த வசனம்தான் முஸ்லிம்களை வெற்றியின் போதும், தோல்வியின் போதும் நிலைதடுமாறாமல் நிலைத்திருக்க செய்கிறது. எனவே பால்தாக்கரே உண்மையான கடவுளை நோக்கி, அதாவது சத்திய இஸ்லாத்தை நோக்கி வருமாறு சகோதர வாஞ்சையுடன் அழைக்கிறோம்.

கருத்துகள் இல்லை: