சனி, 3 அக்டோபர், 2009

ஊருக்கு உபதேசம் செய்யும் ஒபாமா!


இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகளில் ஒருவரான காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கருத்துக்கூறியுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா,

  • காந்தியின் கொள்கைகளை பின்பற்றி வாழ நாம் உறுதி கொள்ளவேண்டும்
  • அனைவரையும் மதித்து போற்றவேண்டும்.
  • காந்தி போதித்த அஹிம்சை முறை இன்று உலகம் முழுவதும் பலரால் பின்பற்றப்படுகிறது.
  • பொறுமை-அகிம்சையை போதித்த அவரை இந்நாளில் நினைவு கூர்வோம்.

என்று கூறியுள்ளார்.

ஒபாமா அவர்கள் உலக மக்களுக்கு சொன்ன செய்தியை தான் கடைபிடிக்க முன்வருவாரா? காந்தி போதித்த அகிம்சையை சிலாகித்து பேசும் ஒபாமா, ஆப்கானிலும், இராக்கிலும் நேரடியாகவும்-லெபனானிலும், பாலஸ்தீனிலும் கள்ளக்குழந்தை இஸ்ரேல் மூலமாகவும் 'ஹிம்சை'யை கையாள்வது ஏன்? காந்தி போதித்த அஹிம்சை உலக அளவில் பலராலும் பின்பற்றப்படுகிறது என்று சொன்ன ஒபாமா, காந்தியின் அகிம்சையை அமெரிக்காவும் பின்பற்றும் என்று சொல்ல தயங்கியது ஏன்? அப்படி சொன்னால் ஆக்கிரமிப்பு போர் செய்யமுடியாது. ஆயுத வியாபாரமும் செய்யமுடியாது. அரபகங்களை அடக்கியாள முடியாது என்பதாலா?

காந்தியின்வழியில் அனைவரையும் மதிக்கவேண்டும் என்று கூறும் ஒபாமா, தான் மட்டும் ஆயுதங்களை குவித்துக்கொள்ளலாம், அடுத்த நாடு அதுவும் ஒரு முஸ்லீம் நாடு தனது நாட்டின் பாதுகாப்பு கருதி ஒரு தீக்குச்சியை தயாரித்தால் கூட அதை கழுகுப்பார்வை பார்ப்பது ஏன்? அப்போது மட்டும் அடுத்தவரின் மதிப்பு-உரிமை பறிக்கப்படுவது தெரியவில்லையா?

ஆக, காந்தியின் அகிம்சையை ஒபாமா மதிப்பவராக இருந்தால் தனது ஆக்கிரமிப்பு படைகளை முஸ்லீம் நாடுகளில் இருந்து வெளியேற்றிவிட்டு பின்பு அகிம்சையை பற்றி பேசட்டும். அங்கே தீவிரவாதிகளை ஒழிக்கிறேன் என்ற பெயரில் பாலை நிலம் அப்பாவிகளின் ரத்தத்தால் சிவப்பாக காட்சியளிக்க இன்றும் கோடிகணக்கான டாலர்களை ஒதுக்கும் ஒபாமா, மறுபுறம் அஹிம்சை பேசுவது வியப்பானது. சரி! ஒபாமா 'பீல்'பண்ணாதீங்க! இந்தியாவில் என்ன வாழுது..? அக்டோபர் 2 அன்று மட்டும் மதுக்கடைகளை மூட்டி விட்டு அன்று காந்தியின் சிலைக்கு மாலை போட்டுவிட்டு காந்தியின் கொள்கைகளை பின்பற்றுவோம் என்று வீர உரையாற்றிவிட்டு, அதே காந்தி பிறந்த குஜராத் மண்ணை காவியாக மாற்றிய கயவர்களை பத்திரமாக சுதந்திர காற்றை சுவாசிக்கச்செய்து வரும், எங்க அரசியல்வாதிகள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். எனவே எதைப்பத்தியும் கவலைப்படாதீங்க! ஈராக்கிலும்-ஆப்கானிலும் கேட்கும் மரண ஓலத்திற்கு நடுவிலும் நீங்கள் சொல்லுங்க 'காந்தியின் அகிம்சையை பின்பற்றுவோம்' என்று!

கருத்துகள் இல்லை: