சனி, 31 அக்டோபர், 2009

கடுமையான தண்ணீர் நெருக்கடியில் பாலஸ்தீன்

பாலஸ்தீனியர்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பது கனவாகிக் கொண்டிருக்கிறது. "பாலஸ்தீனின் பெரும்பகுதியை மக்களுக்கு குடிப்பதற்கு கூட சுத்தமான தண்ணீர் இல்லாமல் செய்த அதே வேளையில், இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு தடையில்லாத தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது இஸ்ரேல்.

மேலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நீச்சல் குளம், நன்றாக தண்ணீர் விடப்பட்ட புல் தரைகள், மேலும் விவசாய நிலங்கள் என்று தண்ணீர் கணக்கில்லாமல் செலவிடப்படும் நிலையில் பாலஸ்தீனியர்களுக்கு தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை" என்று அம்னெஸ்டி இண்டர்நேஷனல் என்ற மனித உரிமை அமைப்பு கூறுகின்றது.

"மேற்குக் கரையிலுள்ள 180,000 - 200,000 பாலஸ்தீனியர்கள் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள் என்றும் அந்த பகுதியில் உள்ள குழாய்களும் காய்ந்து கிடக்கின்றன" என்றும் அந்த மனித உரிமை அமைப்பு கூறுகின்றது.

மேற்கு கரை மற்றும் காசா பகுதியில் உள்ள ஒரு பாலஸ்தீனிய குடிமகன் ஒரு நாளைக்கு பயன் படுத்தும் 70 லிட்டர் தண்ணீரை விட ஒரு இஸ்ரேலிய குடிமகன் ஒரு நாளைக்கு பயன்படுத்தும் தண்ணீரின் அளவு நான்கு மடங்கு அதிகம்.



மேலும் மேற்குக்கரையின் பிரதான தண்ணீர் ஆதாரத்திலிருந்து இஸ்ரேல், தான் ஆக்கிரமித்த இடத்தில் குடியமர்த்திய யூதர்களுக்கு 80% தண்ணீரை உறிஞ்சி எடுக்கின்றது. இஸ்ரேலிற்கு இதை தவிர வேறு தண்ணீர் ஆதாரங்கள் இருந்த போதும் மேற்குக் கரையின் இந்த தண்ணீர் ஆதாரத்தை பயன்படுத்துவது அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

காசா பகுதியின் தண்ணீர் சுத்திகரிப்பை சீர்செய்யும் பணி 2007 இல் இஸ்ரேல் விதித்த தடையினால் பாதிக்கப்பட்டது. மேலும் இஸ்ரேல் அந்த சுத்திகரிப்பு பணியை சரி செய்வதற்கு தேவையான பொருட்களை காசாவிற்குள் அனுமதிக்காமல் தடை செய்து வருவது இந்த தண்ணீர் பிரச்னையை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

மேலும் காசா மீது இஸ்ரேல், இந்த வருட தொடக்கத்தில் தொடுத்த போரினால் கிணறுகள், குளங்கள், மற்றும் நீர் ஆதாரங்கள் பழுதடைந்துவிட்டன.

அம்னெஸ்டி இண்டர்நேஷனல் இது பற்றி கூறுகையில், "காசா பகுதியின் நீர் ஆதாரங்கள் 90 - 95 % தூய்மையற்ற நிலையில் உள்ளன" என்று கூறியுள்ளது.

இஸ்ரேல் இந்த குற்றச்சாட்டை வழக்கம் போல் மறுத்துள்ளது.

நன்றி,
அல்ஜசீரா.

கருத்துகள் இல்லை: