புதன், 19 மே, 2010

மும்பைத் தாக்குதல்: விடைகாண முடியாத புதிர்கள்

மும்பை:மும்பை தீவிரவாதத் தாக்குதலின் போது கைதுச் செய்யப்பட்டதாக போலீஸ் கூறும் அஜ்மல் கஸாபிற்கெதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆர்தர் ரோடு சிறையில் சிறப்பு நீதிமன்றம் உறுதிச் செய்யும் பொழுது தேசத்தை உலுக்கிய தாக்குதலுடன் தொடர்பான ஏராளமான புதிர்களுக்கும், மர்மங்களுக்கும் விடைகள் காணப்படவில்லை.
•தாக்குதலுடன் தொடர்புடைய போலீசின் கூற்றுகளையும், நேரடி சாட்சிகளின் கூற்றும், பத்திரிகைகளின் அறிக்கையையும் குறித்து எவ்வித புலனாய்வும் அதிகாரிகளிடமிருந்து இதுவரை நடக்கவில்லை.

தாக்குதல் நடத்தியவர்களில் ஒரு பிரிவினர் தங்கியிருந்தது யூதர்களின் மையமான நரிமான் ஹவுசில் என்று துவக்கம் முதலே செய்திகள் வெளிவரத் துவங்கியிருந்தன. லியோபோர்ட் கஃபெயில் தாக்குதல் நடத்தியது யூத மையத்தில் தங்கியிருந்தவர்கள் என்று தாக்குதலுக்கு இலக்கானவர்களின் நேரில் கண்ட சாட்சி வாக்குமூலங்களில் காணப்படுகின்றன.

மும்பைத் தாக்குதலைக் குறித்த சரியான விபரங்கள் ‘ரா’ அதிகாரிகளுக்கு கிடைத்த பிறகும் தாக்குதலை தடுக்க அதிகாரிகளுக்கு இயலாமல் போனது மர்மமானதாகும்.

கராச்சியிலிருந்து வந்த கும்பல் குஜராத்தைச் சார்ந்தவரின் படகை பறித்தது தொடர்பான புலனாய்வின் முடிவும் என்னவென்று தெரியவில்லை.

தாக்குதல் நடத்தியவர்கள் பயன்படுத்திய சிம்கார்டுகள் குஜராத் மாநிலம் சூரத்திலிருந்து வாங்கியது உறுதியான பின்னரும் அதிகாரிகள் அதுகுறித்து புலனாய்வு நடத்த தயாரில்லை.

கடும் பாதுகாப்பு நிறைந்த தாஜ்-ட்ரைடண்ட் ஹோட்டல்களில் மிகப்பெரும் வெடிப்பொருட்களை எவ்வாறு கொண்டுச் செல்ல முடிந்தது?

பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களில் பெரும்பாலோனார் பர்தாவும், தொப்பியும் அணிந்த முஸ்லிம்களாவர் இது எவ்வாறு நிகழ்ந்தது?

தாக்குதல் நடத்தியவர்களில் சிலர் உள்ளூர் மராத்தி மொழியில் உரையாடியுள்ளனர் உள்ளிட்ட ஏராளமான சந்தேகங்களுக்கு தற்பொழுதும் விடை கிடைக்கவில்லை.

இவற்றையெல்லாம் விட முக்கியமானது ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரே உள்ளிட்ட மூன்று முக்கிய போலீஸ் அதிகாரிகள் மும்பை தாக்குதலுக்கிடையே மர்மமான முறையில் கொல்லப்பட்டதைக் குறித்து எழும் சந்தேகங்கள்.

மலேகான் உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்களின் தலைவர்களும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு புலனாய்வு முக்கிய நபர்களை நோக்கி நகர்ந்த சூழலில்தான் மும்பைத் தாக்குதல் நடைபெற்றது.

புலனாய்வு பொறுப்பை வகிக்கும் ஏ.டி.எஸ் தலைவரை சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணிக்கு அதுவும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளில்லாமல் அனுப்பியது யார் என்பது இப்பொழுதும் மர்மமாகவே உள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் தங்கியிருந்த காமா மருத்துவமனைக்கு சென்ற கர்காரேயும் அவரோடிருந்தவர்களும் கூடுதல் படையினரை அனுப்ப கோரிய செய்தி புறக்கணிக்கப்பட்டதாக கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் மனைவியர் உள்ளிட்டோர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

கர்காரே அணிந்திருந்த புல்லட் ப்ரூஃப் ஆடை தொடர்பான சந்தேகங்களுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இவ்வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பிலும் கர்காரேயைக் கொன்றது யார் என்பதுக் குறித்து தெரிவிக்கப்படவில்லை.

சி.எஸ்.டியிலும், கர்காரே கொல்லப்பட்ட காமா மருத்துவமனையிலும் கஸாபும், அபூ இஸ்மாயிலும் சேர்ந்து தாக்குதல் நடத்தினர் என போலீஸ் கூறுகிறது. ஆனால் நேரில் கண்ட சாட்சிகளோ காமா மருத்துவமனையிலும், சி.எஸ்.டி யிலும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடந்ததாக கூறுவதை போலீஸ் கண்டுக்கொள்ளவே இல்லை.

அமெரிக்காவில் கைதுச் செய்யப்பட்ட டேவிட் கோல்மென் ஹெட்லி மும்பை தாக்குதலில் தனது பங்கை ஒப்புக்கொண்டது இவையெல்லாவற்றையும் விட மர்மமாக உள்ளது.

லஷ்கர்-இ-தய்யிபா மற்றும் எஃப்.பி.ஐயின் ஏஜண்ட் ஹெட்லி என செய்திகள் வெளிவந்தன. ஹெட்லியை இந்தியாவிற்கு அமெரிக்கா ஒப்படைக்கா விட்டாலும் கூட விசாரனைச் செய்யக்கூட இந்திய அதிகாரிகளுக்கு இயலவில்லை.

மும்பை தாக்குதலில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹெட்லியை இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்காமலிருந்ததும் மர்மமாக உள்ளது.

மும்பை தாக்குதல் இந்தியாவில் ஹிந்துத்துவா சக்திகளும், மொஸாத்-சி.ஐ.ஏ உளவு நிறுவனங்களின் ஏற்பாடு என துவக்கம் முதலே குற்றஞ்சாட்டப்படுகிறது. மும்பை தாக்குதல் வழக்கில் தீர்ப்புக்கூறிய நீதிபதி எம்.எல்.தஹ்லியானி இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்து விசாரணைச் செய்யப்பட்ட இரண்டு இந்திய குடிமகன்களை குற்றமற்றவர்களாக்கி விடுதலைச் செய்திருப்பது ஆறுதலான செய்தியாகும்.

ஃபஹீம் அன்சாரி, ஸபாஉத்தீன் ஆகிய இருவரும் தீவிரவாதக் குழுவுடன் இணைந்து பணியாற்றினார்கள் என்ற போலீசின் கூற்று முற்றிலும் பொய்யானதும், இட்டுக்கட்டப்பட்டதும் என நீதிமன்றம் கண்டறிந்தது. மிகவும் கடுமையான வார்த்தைகளால் போலீசாரின் இத்தகைய நடவடிக்கையை நீதிபதி விமர்சித்துள்ளார். இவ்வழக்கில் மேற்கண்ட இருவரையும் குற்றவாளிகளாக்கி இந்தியாவிற்குள்ளும் ஒரு பிரிவினர் மும்பைத் தாக்குதலுக்கு துணை நின்றார்கள் என்று கூறி முஸ்லிம் சமுதாயத்தை குற்ற பரம்பரையாக்க போலீசார் போட்ட சதித்திட்டம் நீதிமன்றத்தில் தவிடு பொடியானது.

இதுபோல் முஸ்லிம் இளைஞர்கள் மீது சுமத்திய தீவிரவாதக் குற்றச்சாட்டுகள் ஏராளமான வழக்குகளில் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாமல் போன பிறகும் மீண்டும் மீண்டும் முஸ்லிம் சமூகத்தை குற்றவாளியாக சித்தரிக்கும் போலீசாரின் போக்கு தொடரவே செய்கிறது.

இந்தியாவின் எப்பகுதியில் குண்டுவெடிப்பு நடந்தாலும் போலீசும் சில பாசிச, வியாபார நோக்கங்கொண்ட மீடியாக்களும் புதிய புதிய பெயர்களில் அமைப்புகளை உருவாக்கி பரப்புரைச் செய்வதும், தீவிரவாத குற்றஞ் சுமத்தி அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை சிறையில் தள்ளி சித்திரவதைச் செய்து அவர்களின் வாழ்வை பாழாக்குவதும் போலீசாரின் ஸ்திரமான சடங்காகவே மாறிவருகிறது.

இந்தியாவின் பல பகுதிகளிலும் ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் போலீசாரின் பொய்க்குற்றச்சாட்டுகளால் ஜாமீனில் வெளியே வரமுடியாத சட்டப் பிரிவுகளில் கைதுச்செய்யப்பட்டு சிறைக் கொட்டகைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

அப்பாவிகளுக்கு வாதாடிய இரு முக்கிய வழக்கறிஞர்களான நவ்ஷாத் ஹாஷிம்ஜியும், ஷாஹித் ஆஸ்மியும் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஷாஹித் ஆஸ்மி மும்பை தாக்குதல் வழக்கில் நீதிமன்றத்தால் குற்றமற்றவர் எனக்கூறி விடுதலைச் செய்த ஃபஹீம் அன்சாரிக்காக வாதாடியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மும்பைத் தாக்குதலில் கைதுச்செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள ஃபஹீம் அன்சாரியும், ஸபாஉத்தீன் அஹ்மதும் ஒருவகையில் பார்த்தால் அதிர்ஷ்டசாலிகள் தான்.

இவ்வழக்கை விரைவு நீதிமன்றம் 17 மாதத்தில் விசாரணைச் செய்து தீர்ப்பு வழங்கியதால் இவ்விருவருக்கும் அவ்வளவு காலம் மட்டுமே சித்திரவதைகளை தாங்கவேண்டியிருந்தது என்பதை நினைத்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை: