வெள்ளி, 14 மே, 2010

இந்திய பிரிவினையை முதலில் தூண்டியது சாவர்கர்- மணி சங்கர் அய்யர் பேச்சு.


புதுடெல்லி:காங்கிரஸ் கட்சி துவங்கப்பட்டு 125 ஆண்டுகள் முடிவடைவதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.அதில் ஒரு பகுதியாக டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பாக, 'சமூக நல்லிணக்கமும், இந்திய தேசிய காங்கிரஸும்’ என்ற தலைப்பில் டெல்லியில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் மணி சங்கர் அய்யர், ஆனந்த் சர்மா, கிருஷ்ணா தீராத் மற்றும் காங்கிரஸ் எம்.பிக்களும் கலந்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய ராஜ்யசபா உறுப்பினரான மணிசங்கர் அய்யர் கூறியதாவது: "பாரதீய ஜனதா கட்சியும், ராஷ்ட்ரிய சுயம் சேவக்கும்(R.S.S) இந்தியாவை துண்டாட முயல்கின்றன. 16-ஆம் நூற்றாண்டில் பாபர் தனது மகன் ஹிமாயூனுக்கு எழுதிய கடிதத்தில், இந்திய மக்களிடையே மதரீதியான எந்தவொரு வேறுபாட்டையும் உருவாக்கக் கூடாது’ என்று கூறியுள்ளார். நான் அதே செய்தியை பா.ஜ.க வின் தலைவர் நிதின் கட்காரிக்கும் கூற விரும்புகிறேன்.கட்காரி தனது தத்துவக்கொள்கையை மாற்றிக் கொள்ளவேண்டும்.

மேலும் பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸும் சாவர்கரின் குழந்தைகளாகும்.காங்கிரஸ் மதசார்பற்றக் கொள்கையில் நம்பிக்கைக் கொண்டுள்ளது. முதன் முதலில் இரு நாட்டுக் கொள்கையை முன்மொழிந்தது முஸ்லிம் லீக் என்பது தவறான கருத்தாகும். இரு ராஷ்ட்ர கொள்கையை முதலில் முன்வைத்தது தாமோதர் வினாயக் சாவர்கர் ஆவார்.பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸும் ஹிந்துத்துவாவைப் பற்றி பேசுகின்றன, ஆனால் அதன் பொருள் அவர்களுக்கு தெரியாது. அவர்கள் விரும்புவதெல்லாம் முஸ்லிம்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்பட வேண்டும் என்பதையே." இவ்வாறு அவர் உரை நிகழ்த்தினார்.


கருத்துகள் இல்லை: