செவ்வாய், 25 மே, 2010

உடைந்து நொறுங்கிய கனவுகள்...

மங்களூரில் ஏற்பட்ட விமான விபத்து இந்தியாவின் இதயத்தையே நொறுங்கச் செய்துவிட்டது.

158 பேரின் உயிரிழப்பும் அதில் 73 பேர் முஸ்லிம்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.
தங்களின் குடும்பத்தை வறுமையின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காக இளம் வயதிலேயே திரைகடல் ஓடி திரவியம் தேடச் சென்ற அவர்கள் இன்று நெருப்பின் பிடியில் சிக்கி மாண்டுவிட்ட துயரம் நிகழ்ந்து விட்டது.

5000 ரூபாய் கட்டணம் குறைகிறதே! என்ற ஆறுதலோடு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சென்றவர்கள் பலியாகி விட்டார்கள்.

இன்னும் சில மணித்துளிகள் தான்; இதோ நம்முடைய அன்புக்குரியவர்களை நாம் பார்க்கப் போகிறோம்? என விமான நிலைய வளாகத்திலேயே காத்திருந்தவர்களுக்கு இடியென அந்தத்தகவல் இறங்கியிருக்கிறது.

விமான ஓட்டியான கேப்டன் குலுசிகா 10 ஆயிரம் மணிநேரம் விமானத்தை வெற்றிகரமாக இயக்கியவர். 19முறை மங்களூர் விமானநிலையத்தில் பத்திரமாக தனது விமானத்தை தரை இறக்கியவர். கடந்த வாரமும் அவர் அற்புதமாகவே தரை இறக்கியிருக்கிறார்.

வானம் தெளிவாகவே இருந்தது. இருந்திருக்கிறது. இருப்பினும் எப்படி இந்த விபத்து நிகழ்ந்தது? விமான ஓடுபாதையின் தரம் என்ன?

இந்திய விமான ஓடுபாதைகள் எந்த அளவிற்கு பாதுகாப்பானதாக இருக்க முடியும்? என்பதை நினைக்கும்போது வேதனை மேலிடுகிறது.

1997லிருந்து உலகில் ஏற்பட்டுள்ள விமான விபத்துப் பேரழிவில் 20வது மோசமான விபத்தாகும். விமான விபத்துக்களில் நான்கில் ஒரு விபத்து விமானம் தரை இறங்கும்போது ஏற்படும் விபத்துக்கள் என்று புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

மங்களூர் விமான விபத்து இந்திய விமான ஓடுதளங்களின் பாதுகாப்பற்ற நிலையை அம்பலப்படுத்தி இருப்பதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

40 ஆண்டுகால பழமைவாய்ந்த இந்த மங்களூர் விமான நிலைய ஓடுபாதையை சீர் செய்யக்கோரி பல பொது நல வழக்குகள் போடப்பட்டும் அது அலட்சியப் படுத்தப்பட்டன போயிங் 737&800 போன்ற விமானங்களின் வகைகள் கார்களில் மாருதியைப் போன்ற மாடலை சார்ந்தவையாக கருதப்படுகிறது.

தரையிறக்குவதற்கு இவை மிக எளிதானவையாம். இருப்பினும் இந்த கோர விபத்து நிகழ்ந்திருக்கிறது.

போயிங் 738-800 வரை விமானங்களின் இறக்கைகளின் தடிமன் 25 சதவீதம் மென்மையாக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தொழில் நுட்ப தகவல்கள் தெரிவிக்கிறது.

2000&ஆம் ஆண்டு இவ்வகையான விமாங்கள் மோசமான உதிரி பாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாக ஸ்கை நியூஸ் ஏஜென்சி அன்றே கூறியது.

நம்முடைய கேள்வி இதுதான். இன்னும் எத்தனைகாலம் மக்களின் உயிர்களோடு ஆளும் சக்திகள் விளையாடுவதாக உத்தேசம்?

பத்திரமான விமானப்பயணம் இந்தியாவில் சாத்தியமே இல்லையா?

இந்தியாவுக்கு கோடிக்கணக்கான அந்நிய செலாவணியை அள்ளித்தரும் உழைக்கும் மக்களின் உயிர்கள் அவ்வளவு மலிவானதா?

மத்திய அரசுநீதி விசாரணைக்கு உத்தரவிடட்டும் நாளைய பயணத்திற்கு உத்தரவாதம் வழங்கட்டும்.

அரசுகள் நிவாரணங்களை வழங்கட்டும். உயிர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இறைவன் ஆறுதலை வழங்கட்டும்.

கருத்துகள் இல்லை: