செவ்வாய், 8 செப்டம்பர், 2009

இனவெறி தாக்குதல்:லண்டனில் இந்தியர் பலி-ஸ்காட்லாந்து யார்டு விசாரணை

லண்டன்: லண்டனில் இனவெறி தாக்குதலுக்கு ஆளான இந்தியர் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் பலியானார். இது தொடர்பாக ஐந்து பேரை கைது செய்து ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொல்கத்தாவை சேர்ந்தவர் எக்ரம் உல் ஹாக். 67 வயதான இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இளம் வயதிலே குடியேறி சுகாதார துறையில் வேலைபார்த்து வந்தார்.

அவர் கடந்த மாதம் 31ம் தேதி லண்டன், ச்ர்ச் லேன் டூடிங் பகுதியில் இருக்கும் மசூதி ஒன்றுக்கு சென்றுவிட்ட தனது நான்கு வயது பேத்தியுடன் திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த 12 முதல் 15 வரையிலான நான்கு சிறுவர்கள் எக்ரம் உல் ஹாக்கை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த இனவெறி தாக்குதலில் பலத்த காயமடைந்த எக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையி்ல் நேற்று அவரது நிலைமை மோசமைடந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் பொறுத்தப்பட்டது. என்றாலும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு மரணமடைந்தார்.

இது குறித்து ஸ்காட்லாந்து யார்டு போலீசார் விசராணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

இந்த தாக்குதல் சம்பவத்தை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை விரைவில் கிடைத்துவிடும்.

இந்த வழக்கு தொடர்பாக ஐந்து இளைஞர்களை கைது செய்து விசாரித்து வருகிறோம். அவர்கள் சுட்டான் இளம்சிறார்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்றார்.

கருத்துகள் இல்லை: