திங்கள், 28 செப்டம்பர், 2009

உன்னைப்போல் ஒருவன் - விடுபட்டவை

ஒருவழியாக யாரோ ஒரு புண்ணியவான் தயவில் உன்னைப் போல் ஒருவன் இணையத்திலிருந்து தரவிறக்கி பார்த்தாகிவிட்டது. தொழில்நுட்பம், இசை என்கிற பல கோணங்களில் இந்த திரைப்படம் தமிழ் திரையுலகில் சந்தேகமேயில்லாமல் ஒரு மைல்கல். ஆனால் அற்புதமான ஒரு மேஜையமைத்து, அதில் உயர்தரமான ஒரு பட்டுத்துணியை விரித்து, அதன் மேல் கலைவேலைப்பாடு மிகுந்த தங்கத் தட்டில் வைத்து நரகலை வைத்து பரிமாறியது போல இத்தனை சிறப்பான ஒரு படத்தின் மூலம் இந்துத்துவா என்கிற விஷத்தை பரிமாறியிருக்கிறார் கமல்.

உன்னைப் போல் ஒருவன் படத்தை இந்துத்துவா குப்பை என்று பலரும் விமரித்திருந்தாலும் அவர்களால் கவனிக்கப்படாத பல முக்கிய sub text கள் என் அவதானிப்பிற்கு கிடைத்தன. திரைப்படத்தில் இந்துத்துவா விஷத்தை கலப்பதற்காகவே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பாத்திரம்தான் கரம்சந்த் லாலா என்கிற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. படம் பார்க்கும் முன்புவரை (நான் படித்த விமரிசனங்களில் இருந்து) சந்தானபாரதியின் பாத்திரத்திற்கும் இந்துத்துவா தீவிரவாததிற்கும் தொடர்பு இருக்கும் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் படத்தை பார்த்த பிறகு கரம்சந்த் லாலா என்கிற கதாபாத்திரம் மற்ற மூன்று தீவிரவாதிகளுக்கும் ஆயுதம் கடத்தி உதவி செய்த ஒரு ஆயுத வியாபாரி. அதாவது தீவிரவாதிகள் என்றால் முஸ்லிம்கள்தானா என்கிற கேள்வி எழுந்தால் அதுதான் ஒரு கரம்சந்த் லாலா என்கிற இந்து கதாபாத்திரத்தை தீவிரவாதிகளுக்கு உதவி செய்வதாக காட்டியிருந்தோமே என்று சப்பைக் கட்டுவதற்காகதான் சந்தானபாரதி. அதுபோக “ஒன்னு போனா என்ன? அதான் மிச்சம் இரண்டு இருக்கே” என்று சொந்த வாழ்வின் சோகத்தை பகடி செய்தாலும் ஆத்திரப்படாத அளவிற்கு தீவிரவாதியும் கரம்சந்த்லாலாவும் நண்பர்கள். சந்தானபாரதியின் கதாபாத்திரமே பார்ப்பனீய கருத்தாக்கத்தை படத்தில் புகுத்த திணிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது.

இன்னுமொரு உள்குத்தை எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. சந்தானபாரதியின் குற்ற வரலாற்றை விளக்கும்போது Community and Currency - Agnostic என்று ஒரு வசனம் வரும். நானறிந்தவரை Agnostic என்கிற ஆங்கில சொல்லுக்கு கடவுள் நம்பிக்கையில்லாதவன் என்று அர்த்தம். அதாவது கரம்சந்த் லாலா ஒரு உண்மையான சனாதானவாதி இல்லை. இதில் யாரை ஏமாற்ற நெற்றியில் திலகம் என்று தெரியவில்லை. இது யாருக்கு வைக்கப்பட்ட ஆப்பு என்றும் புரியவில்லை.

மேலும் அப்துல்லா, இனாயத்துல்லா என்ற பெயர்களைக் கொண்டவர்கள் மட்டும்தான் தீவிரவாதிகள். பிரக்யா சிங் தாகூர், ஸ்ரீகாந்த் புரோகித் என்று பெயர் வைத்தவர்கள் குண்டு வைத்தாலும் அவர்கள் தேசபக்தர்கள். மும்பையிலும், டெல்லியிலும் குண்டுவைத்தவர்கள் மட்டும்தான் தீவிரவாதிகள். மாலேகானில் குண்டுவைத்தவர்கள், நான்டேட்- கான்பூர்- தென்காசி ஆகிய இடங்களில் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டவர்கள் எல்லாம் மகாத்மாக்கள். இதையும் மீறி கரம்சந்த் லாலா என்ற பெயர்களை உடையவர்கள்களுக்கு தீவிரவாதி பட்டம் கொடுக்க வேண்டுமென்றால் அவர்கள் அப்துல்லாவிற்கும், இனாயத்துல்லாவிற்கும் உதவியிருக்க வேண்டும். மற்றபடி ஸ்ரீகாந்த் புரோகித் என்கிற பெயர்களை உடையவர்கள் எல்லாம் தீவிரவாத பட்டியலிலே இடம்பெற முடியாது. இராமகோபாலன், அர்ஜூன் சம்பத் போன்றவர்களை எல்லாம் மிஞ்சிவிட்டார் கமல்.

இஸ்லாமிய தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பற்றிய வசனங்களில் மட்டும் மும்பை, டெல்லி, கோவை என இடங்களின் பெயரைக் குறிப்பிட்டு சொல்லத் தெரிந்தவர்களுக்கு, முஸ்லிம் பெண்ணை கருவறுத்த கதையில் மட்டும் North India என்று பொத்தாம் பொதுவாக சொல்லுவது ஏனோ?. குஜராத் என்கிற் சொல் கெட்டவார்த்தையா என்ன சென்சாரில் வெட்டி விடுவார்கள் என பயப்பட? இங்கு குஜராத் என்கிற சொல்லை மட்டுறுத்த தெரிந்த கமலுக்கு “ குஜராத்ல மோதிப்பார், மோதிப் பார்த்தா தெரியும்” என்கிற வசனத்தில் மட்டும் குஜராத் என்கிற சொல்லை பயன்படுத்த முடிகிறது. இவையெல்லாம் யாரை திருப்தி படுத்த என்று தெரியவில்லை.

கரப்பான்பூச்சிகள் வீட்டுக்குள் வந்தால் அடித்துக் கொல்லச் சொன்னவர்கள், விஷப் பாம்புகள் வீட்டிற்குள் வந்தால் என்ன செய்வது என்று சொல்லவில்லையே? சிலருக்கு அது விஷப் பாம்பு சிலருக்கு அது நாகராஜன். இதில் கமல் இரண்டாம் வகைப் போல இருக்கிறது, அதனால்தான் பாம்புகளை கண்டுக்காமலே விட்டுவிட்டார்.

என்னதான் மிகச்சிறந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எடுக்கப்பட்டிருந்தாலும் அந்நியன், எவனோ ஒருவன் போல உன்னைப் போல் ஒருவனும் ஒரு இந்துத்துவா குப்பைதான்.

thanks to :

கருத்துகள் இல்லை: