சனி, 12 செப்டம்பர், 2009

டெல்லி:வதந்தியால் ஏற்பட்ட நெரிசலில் 5 மாணவிகள் பலி


டெல்லி: டெல்லியில் பள்ளிக் கட்டிடத்தில் மின் கசிவு ஏற்பட்டு சுவர்களில் ஷாக் அடிப்பதாக கிளம்பிய வதந்தியையடுத்து மாணவிகள் அலறியடித்து வெளியேறிதில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 5 மாணவிகள் பலியாயினர்.
மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.டெல்லியில் கன மழை பெய்து வரும் நிலையில், கஜுரிகாஸ் என்னுமிடத்தில் உள்ள அரசு பள்ளியில் இன்று காலை இச் சம்பவம் நடந்தது.
வடகிழக்கு டெல்லியில் உள்ள இந்த பள்ளியின் மின் கசிவு ஏற்பட்டு சுவர்களிலும் தரையிலும் மின்சாரம் பாய்ந்துள்ளதாக வதந்தி பரவியது.இதையடுத்து முதல் மாடி வகுப்பறைகளில் இருந்த மாணவ-மாணவிகள் பீதியடைந்து கீழே இறங்கினர். இந் நிலையில் கீழ் தளத்தில் இருந்த மாணவ, மாணவிகள் படிக்கட்டுகளில் மேலே ஏறினர். மிகக் குறுகலான அந்தப் படிக்கட்டுகள் வழியாக மாணவ-மாணவிகள் மேலே ஏறவும், கீழே இறங்கவும் முயற்சித்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
இதில் பல மாணவ, மாணவிகள் கீழே விழுந்தனர். அவர்கள் மீது பிற மாணவ, மாணவிகள் ஏறி மிதித்துக் கொண்டு ஓடியதில் 5 மாணவிகள் பலியாயினர். 12 வயதான அஃப்ரோஸை காணாமல் தேடி அலைந்த அவருடைய தாயார் ஷம்சாரி "எனது மகள் ரமலான் நோன்பு நோற்றிருந்தாள்.இனி அவள் நோன்பு திறக்க வரமாட்டாள்".என்று கூறி அழுதது காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
மேலும் 32 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 26 பேர் மாணவிகள் ஆவர். அவர்கள் ஜி.டி.பி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் சந்தித்து ஆறுதல் கூறினார். மின் கசிவு ஏற்பட்டதாக வதந்தியை பரப்பியது யார் என்பது குறித்து விசாரணைக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: