சனி, 7 பிப்ரவரி, 2009

பாபரி மஸ்ஜித் வழக்கு: வெற்றியை எதிர்நோக்கும் முஸ்லிம்கள்

எதிர்வரும் பிப் 9 அன்று அல்லாஹ்ஆபாத் (அலஹாபாத்) ஸ்பெஷல் பெஞ்ச் விசாரித்து வரும் பாபரி மஸ்ஜித் வழக்கில் முஸ்லிம் தரப்பு வாதங்கள் லக்னோவில் முடிவடைய உள்ளது. அதனைத் தொடர்ந் ஹிந்துக்கள் தரப்பிலான வாதம் துவங்கும். ஹிந்துக்களைப் போல் வெறுமனே நம்பிக்கையையும், உணர்ச்சிகளையும் மட்டுமல்லாமல், ஏராளமான அத்தாட்சிகளையும் சமர்ப்பித்துள்ள காரணத்தால் 100 சதம் வெற்றி கிட்டும் என முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

அயோத்தியைச் சேர்ந்த, முஹம்மது ஹாஷிம் அன்ஸாரி என்பவர், 'அரசியல் பலமும், அதிகார பலமும் மட்டுமே இவ்வழக்கில் முஸ்லிம்கள் வெற்றி பெறுவதை தடுக்க முயற்சிக்கும். நாங்கள் அங்கு 550 வருடங்களாக பள்ளி இருந்துள்ளதற்கான வலுவான சமர்ப்பித்துள்ளோம்' என தெரிவித்தார். இவர் 1949 ம் ஆண்டு வழக்கின் மனுதாரராவார். 90 வயதாகும் அன்ஸாரி, 'சட்டம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு எதிராக தீர்ப்பளிக்க முடியாது' என நம்பிக்கை தெரிவித்தார்.

முதலாவதாக கோபால் சிங் பிஷாரத் என்பவர் முறையான அறிவிக்கை இல்லாமல் வழக்குத் தொடுத்தார். எனவே அது நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டாவதாக, ராம் சந்திர ப்ரம்ஹான்ஸ் என்பவர் ஒரு வழக்குத் தொடுத்தார். அதில் 5 முஸ்லிம்களை பிரதிவாதியாக இணைத்திருந்தார். பாபரி மஸ்ஜித் என்பது அந்த 5 முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. எனவே இதுவும் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அடுத்ததாக நார்மோகி அக்காராவின் வழக்கு. இவரது வழக்கு 1885,86 இலேயே தோல்வியில் முடிந்த ஒரு வழக்கு. இதனை மறுபடியும் எடுத்தது நீதித்துறையை கேலிக்குரியதாக்குவதாகும்.

நீதிபதிகள், செய்யது ரஃபாத் ஆலம், சுதிர் குமார் அகர்வால், டி.வி.ஷர்மா ஆகியோர் அங்கம் வகிக்கும் விசேஷ பெஞ்ச் பாபரி மஸ்ஜித் யாருக்கு சொந்தம் என்ற 67 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கை விசாரித்து வருகிறது.

1989 இல் லக்னோவிலுள்ள இந்த பெஞ்ச் விசாரிப்பதற்கு முன், ஃபைஸாபாத் மாவட்ட நீதிமன்றம் இதனை விசாரித்து வந்தது. உ.பி.மாநில அரசின் பரிந்துரையை அல்லாஹ்ஆபாத் உயர்நீதி மன்றம் ஏற்றுக் கொண்டதை அடுத்து வழக்கை விரைந்து முடிப்பதற்காக லக்னோ பெஞ்ச்சுக்கு மாற்றப்பட்டது. இதுவரை 12 தடவைகளுக்கு மேல் இதிலுள்ள நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக இவ்வழக்கு நடைபெற்று வருகிறது.

அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக ஹாஷிம் அன்ஸாரி குறிப்பிடுகின்றார். ஹாஜி மெஹபூப் அஹமது, அன்ஸாரியின் கருத்தை மறுபதிவு செய்கிறார். 'இத்தனை வருட தாமதத்திற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அரசியல் ரீதியாக தாமதம் தூண்டப்படுகிறது'.

'இவ்வழக்கைப் பொறுத்தவரை, நமது நிலை மிகவும் உறுதியானது. ஆதாரங்களைப் பொறுத்தவரை வி.ஹெச்.பி. தலைவர்கள் உள்ளிட்ட அனைவருமே, முஸ்லிம்களின் நிலை வலுவாக உள்ளதென அறிவர். அதனால் தான், உறுதியாக நமக்கு வெற்றி கிடைக்குமென நான் நம்புகிறேன். அவர்களைப் பொறுத்தவரை வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாதிடுகின்றனர். ஆனால் நீதிமன்றங்களுக்கு ஆதாரம் தேவை. அவை முஸ்லிம்களிடம் மாத்திரமே உள்ளது' என்றும் அவர் கூறியுள்ளார். இவர் பாபரி பள்ளிக்கு வசித்து வருகிறார் என்பதும், 1992 இல் கரசேவகர்கள் இவரை பயங்கரமாக தாக்கினார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பல மாமங்களுக்குப் பிறகும், ஆதாரங்களின் அடிப்படையில், விசேஷ அமர்வு நீதிமன்றம் இவ்விஷயத்தில் முஸ்லிம்களுக்கு சார்பாக தீர்ப்பளித்தால் அதனை ஹிந்துக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற கேள்விக்கு, 'நிச்சயமாக மாட்டார்கள், அதன் வெளிப்பாடாகத்தான் உச்ச நீதிமன்றத்தை அவர்கள் நாடியுள்ளனர்' என்றும் அவர் கூறினார்.

நீதிமன்றங்களுக்கு வெளியேயான சமரசத்தீர்வு குறித்து வினவியபோது, 'நாங்கள் இப்போதும் எப்போதும் அதற்கு தயாராகவே உள்ளோம். ராமர் கோயில் அயோத்தியில் கட்டுவது குறித்து எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. எங்களது மார்க்கத்திற்கு முரணில்லாத எவ்வித சமரசத்திற்கும் நாங்கள் தயார். ஆனால் அவர்கள் இதனை இழுத்தடிக்கவே விரும்புகின்றனர். எனவே தான் உயர்நீதிமன்றத்தில் தோற்கும் நிலையில் உச்சநீதிமன்றத்தை அணுக முயற்சிக்கின்றனர்' என்றும் குறிப்பிட்டார்.

ஹாஜி மஹபூபின் தந்தை ஹாஜி முஹம்மது பெக்கூ இவ்வழக்கின் முதன்மையான வாதிகளில் ஒருவர். பாபரி மஸ்ஜிதில் சிலை வைக்கப்பட்ட விவகாரத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்தவர். 1960,61 இல் அவரது மறைவுக்குப்பின் மத்திய சன்னி வக்ஃப் போர்டு இவ்வழக்கை ஏற்று நடத்தி வருகிறது. முஸ்லிம்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ஸஃபரியாப் ஜிலானி, 'எதிர் தரப்பைச் சேர்ந்த நமோஹி அகாதா கூட டிசம்பர் 23, 1949 க்கு முன் அங்கு சிலைகள் இருந்ததில்லை என்றும் அதற்கு முந்தய இரவில் தான் வைக்கப்பட்டது என வாக்குமூலம் அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இவ்விஷயத்தில் முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்துள்ளதாக குறிப்பிடும் அன்ஸாரி, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இவ்வழக்கில் காட்டிவரும் பாராமுகத்தை கடுமையாக சாடுகிறார்.

இத்தலைவர்கள் பாபரி மஸ்ஜித் இயக்கத்திற்கு ஊறுதான் விளைத்துள்ளனர். ராமஜென்மபூமி இயக்கத்தைப் பொறுத்தவரை, அவர்களுக்கு செல்வந்தர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் அரவணைப்பு கிடைக்கிறது. ஆனால் பள்ளிக்காக இதுவரை நாம் எந்த வசூலையும் செய்யவில்லை. காங்கிரஸ், சமாஜ்வாதி ஏன் பிஜேபியிலும் கூட முஸ்லிம் தலைவர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் முஸ்லிம்களை முட்டாளாக்குகின்றனர்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை 1949 முதல் நான் போராடி வருகிறேன். 1954 இல் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திய போது 100 முஸ்லிம்களுடன் நான் கைது செய்யப்பட்டேன். மீண்டும் மிசாவில் நான் கைது செய்யப்பட்ட போது காங்கிரஸ் தான் மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சி செய்தது. இப்படியாக இந்த வழக்கிலிருந்து நான் விலகிக் கொள்ள வேண்டுமென்பதற்காக பல நெருக்கடிகள் எனக்குத் தரப்பட்டன.

நன்றி: டூசர்க்கில்ஸ் டாட் நெட்

கருத்துகள் இல்லை: