சனி, 12 பிப்ரவரி, 2011

தீவிரவாதத்​தை இஸ்லாம் உருவாக்கவி​ல்லை - அப்துல் கலீம்

தீவிரவாதத்தை இஸ்லாம் உருவாக்கவில்லை என்னும் செய்தியை மக்களிடம் சேர்ப்பிப்பது தான் தனது முக்கியப் பணி, என 2007 மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பின் உண்மைச் சம்பவங்களை வெளியே கொண்டுவர காரணமாக மாறிய அப்துல் கலீம் கூறினார். கலீமின் மாசற்ற உள்ளத்தையும் நிரபராதி என்பதையும் உணர்ந்து, குண்டு வெடிப்புக்குப் பின்னால் செயல்பட்ட ஆர் எஸ் எஸ் தலைவர் சுவாமி அசிமானந்தா விசாரணைக் குழுவிடம் உண்மையை ஒப்புக் கொண்டார்.

நிரபராதிகளைக் கொலை செய்வதை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்காது. மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பின் பொறுப்பை ஏற்றுக் கொள்ள மிகப்பெரிய துன்புறுத்தல்கள், கொடுமைகள் சகித்துக் கொண்டே மேலே கூறிய வார்த்தைகளை, விசாரணைக் குழுவிடம் கூறினேன். என்று கலீம் தெளிவுபடுத்தினார்.

சாலிடாரிட்டி இளைஞர் இயக்கம், கேரளாவில் ஏற்பாடு செய்த பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த கலீம், கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசும்போது மேற்கண்டவாறு கூறினார்.

குற்ற உணர்வில் சுவாமி அசிமானந்தா தவறை ஒப்புக்கொண்டபோது முஸ்லிம் சமுதாயம் மட்டுமல்ல ஒட்டு மொத்த நாடே தப்பித்துக் கொண்டது. நாட்டின் முக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் சந்தேகப்படுகின்ற நிலைமை நாட்டின் வளர்ச்சியையே பாதித்துள்ளது.

நாட்டின் எந்த பகுதியில் குண்டு வெடிப்பு ஏற்ப்பட்டாலும் அதற்குப்பின்னால் முஸ்லிம் தீவிரவாதிகள்தான் உள்ளனர் என பொய் பிரச்சாரம் செய்கின்ற மிகப்பெரியதொரு குழு நாட்டில் செயல்பட்டு வருகிறது.

நான் மட்டும் சிறையிலிருந்து வெளியே வந்ததில் எந்த பலனும் கிடையாது, செய்யாத குற்றங்களுக்காக நூறுக்கணக்கான நபர்கள் நாட்டின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். கேரளமும் விதிவிலக்கல்ல. செய்யாத குற்றத்துக்காக பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மதானி மீண்டும் சிறைச்சென்றதும் இவ்வாறுதான். மதானியின் விடுதலைக்கான போராட்டத்தில் தன்னால் இயன்ற முறையில் பங்கேற்பேன். சிறையிலுள்ள நிரபராதிகளின் விடுதலைக்காக பாடுபடுவதுதான் மீதமுள்ள வாழ்நாட்களின் எனது லட்சியம் என கலீம் கூறினார்.

மக்கா மஸ்ஜிது குண்டு வெடிப்பின் பெயரால் 2007 ல் கைது செய்யப்பட்டேன். அப்போது எனக்கு வயது 19 . மருத்துவம் படித்துக் கொண்டிருந்தேன் 18 மாதங்கள் சிறைவாசத்திற்குப் பிறகுதான் விடுதலையானேன். மருத்துவப்படிப்பை தொடர்வதற்கான முயற்சியையும் அதிகாரிகள் தடைசெய்தனர். நான் குண்டு வெடிப்புக்காகப் புறப்பட்டவன் என்று கல்லூரி நிர்வாகிகளிடம் போலீசார் கூறினர், அத்தோடு படிப்பு முடங்கிப்போனதால் சட்டக்கல்லூரியில் சேர்ந்தேன். அதற்கிடையில் சிறையிலுள்ள ஒரு சகோதரனை சந்தித்தபோது சிம் கார்டை கொடுத்ததாக ஒரு பொய் வழக்கைச் சுமத்தி மீண்டும் கைது செய்தனர்.

என்னை சிறையில் தள்ளியது மட்டுமல்லாமல் எனது குடும்பத்தை வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றினர். படுத்து உறங்குவதற்கு கூட இடமின்றி தவித்தார் எனது தாய்.
தண்டனை அனுபவிப்பவர்களின் விடுதலைக்காக சட்டப்படிப்பு தொடர்ந்து படிக்கிறேன் எனவும் அப்துல் கலீம் கூறினார்.

கருத்துகள் இல்லை: