திங்கள், 7 பிப்ரவரி, 2011

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் மோடி குற்றவாளி - சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை

புதுடெல்லி,பிப்.5:2002 ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு தெளிவான பங்கிருப்பதாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) கண்டறிந்துள்ளது. பாரபட்சமாக நடந்துக் கொண்டும், நடவடிக்கைகள் மேற்கொள்ளாமலும், பாதிக்கப்பட்டவர்களை புறக்கணித்தும் கலவரத்திற்கு உதவியதாக மோடி மீது குற்றஞ்சாட்டி எஸ்.ஐ.டி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

2010 ஆம் ஆண்டு மே மாதம் 12-ஆம் தேதி விசாரணையை பூர்த்திச் செய்து முத்திரை வைக்கப்பட்ட உறையில் வைத்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.ஐ.டி சமர்ப்பித்த அறிக்கையை டெஹல்கா பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதிலும், வகுப்புவெறியை தூண்டிவிட்ட பத்திரிகைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலும் மோடி தோல்வியடைந்தார் என அவ்வறிக்கை கூறுகிறது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோடியாக 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாநிலத்தில் சட்ட-ஒழுங்கு பிரச்சனை திருப்தியாக உள்ளதாக குஜராத் அரசு தவறான அறிக்கை வெளியிட்டதையும் இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

மோடியை குற்றமற்றவராக்கி எஸ்.ஐ.டி அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. மோடியின் மீதான நம்பிக்கையை தகர்ப்பதற்கான முயற்சிகளுக்கு கிடைத்த பதிலடி இவ்வறிக்கை என அப்பொழுது அத்வானி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

பா.ஜ.கவின் எதிர்பார்ப்புகளுக்கு கடுமையான பதிலடி தரும்விதத்தில் முஸ்லிம் இனப்படுகொலையில் மோடியின் பங்கைக் குறித்து எஸ்.ஐ.டியின் அறிக்கை விரிவாக கூறுகிறது.

வகுப்புவாத சிந்தனையோடு செயல்பட்டார், உணர்ச்சியைத் தூண்டும் உரைகளை நிகழ்த்தினார், முக்கியமான ஆதாரங்களை அழித்தார், சங்க்பரிவார உறுப்பினர்களை அரசு தரப்பு வழக்கறிஞராக நியமித்தார், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை மறுத்தார், இனப்படுகொலை நிகழும் வேளையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைகளில் சட்ட விரோதமாக அமைச்சர்களை நியமித்தார். பாரபட்சமின்றி நடந்துக்கொண்ட அதிகாரிகளை தொந்தரவுச் செய்தார் ஆகிய காரியங்களில் மோடி குற்றவாளி என எஸ்.ஐ.டியின் அறிக்கை தெளிவுப்படுத்துகிறது.

அரசுத்துறைகள் ஒன்று செயலிழந்து போனது அல்லது கலவரத்தை மேலும் கொளுந்துவிட்டெரியும் விதத்தில் செயல்பட்டது என அறிக்கை விரிவாக கூறுகிறது.

தீங்கு விளைவிக்கக்கூடிய, குற்றகரமான விமர்சனங்களை முஸ்லிம்களுக்கு எதிராக தெரிவித்த மோடி உயர்ந்த பதவியிலிருந்துக் கொண்டு சிந்தனையற்ற பொறுப்பற்ற முறையில் நடந்துக் கொண்டார் என எஸ்.ஐ.டியின் அறிக்கை கூறுகிறது.

எஸ்.ஐ.டியின் அறிக்கையில் முக்கிய பகுதிகள்:
1.குல்பர்க் சொசைட்டி, நரோடா பாட்டியா உள்பட மாநிலம் முழுவதும் முஸ்லிம்கள் கொடூரமாக தாக்கப்பட்ட பொழுது யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல்வரும், அரசும் நடந்துக்கொண்டது. எல்லா வினைகளுக்கும் எதிர்வினைகள் உண்டு என்று கூறி முஸ்லிம்களுக்கெதிரான கலவரத்தை நியாயப்படுத்தினார் மோடி. கோத்ராவிலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் குற்ற வாசனையுடையவர்கள் இருக்கின்றார்கள் என மோடி குற்றஞ்சாட்டியது ஹிந்து-முஸ்லிம் பிரிவினரிடையே மேலும் உணர்ச்சியை தூண்டிவிட்டது.

2.அசோக் பட், ஐ.கே.ஜடேஜா ஆகிய அமைச்சர்களை அஹமதாபாத் நகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலும், மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலும் நியமித்தார். இனப்படுகொலை நடைபெறும் பொழுது போலீஸ் நடவடிக்கைகளை இவர்கள் சீர்குலைத்ததற்கு காரணம் உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருந்த மோடியின் ஆசீர்வாதத்தோடுதான். அசோக் பட் தொடர்ந்து வி.ஹெச்.பி தலைவர்களுடன் தொடர்புக் கொண்டிருந்தார் என்பதை அவரது மொபைல் ஃபோன் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

3.இனப் படுகொலைகள் நடைபெறும் வேளையில் பாரபட்சமற்ற முறையில் செயல்பட்ட நேர்மையான அதிகாரிகளை முக்கியத்துவம் இல்லாத துறைகளுக்கு மாற்றம் செய்தார். பா.ஜ.க தலைவர்களின் சொல்லுக்கு கீழ்படியாததால்தான் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இந்த இடமாற்றங்கள் நடந்தேறின.

4.இனப்படுகொலை நடந்த வேளையில் பரிமாறப்பட்ட வயர்லெஸ் செய்திகள் அழிக்கப்பட்டன. இக்காலக்கட்டத்தில் சட்டம் ஒழுங்கைக் குறித்து ஒரு ஆவணமும் மீதம் வைக்காமல் அழிக்கப்பட்டன.

5.தலைநகரான அஹ்மதாபாத்தில் ஏராளமான முஸ்லிம்கள் கூட்டுப் படுகொலைச் செய்யப்பட்ட பகுதிகளுக்கு செல்லாமல், ஒரேநாளில் 300 கி.மீ பயணம் செய்து ரெயில் எரிக்கப்பட்ட கோத்ராவுக்கு சென்று பாரபட்சமாக நடந்துக் கொண்டார். இந்த செயலுக்கு மோடி எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை.

6.வி.ஹெச்.பி, ஆர்.எஸ்.எஸ் தொடர்புடையவர்களை அரசுதரப்பு வழக்கறிஞர்களாக நியமித்தார். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களெல்லாம் ஏதேனும் வகையில் சங்க்பரிவார்களுடன் தொடர்புடையவர்கள்.

7.2002 பிப்ரவரி 28-ஆம் தேதி வி.ஹெச்.பி அறிவித்த சட்டவிரோத முழு அடைப்பினை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. முழு அடைப்பிற்கு பா.ஜ.க ஆதரவு தெரிவித்தது.

8.பிப்ரவரி 28-ஆம் தேதி நரோடாவில் மதியம் 12 மணி தாண்டிய பிறகும், மேகானி நகரில் மதியம் இரண்டு மணிவரையும் போலீஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை. அப்பொழுது நிலைமை கைநழுவிப் போனது.

9.நரோடா, குல்பர்க் சொசைட்டி கூட்டுப் படுகொலைகளில் போலீஸ் ஆழமாக விசாரிக்கவில்லை. வி.ஹெச்.பி, பா.ஜ.க தலைவர்களின் ஃபோன் ஆவணங்களை பரிசோதிக்கவில்லை.

10.அமைச்சர்களான கோர்தான் ஸதாஃபியா, மாயாபென் கோட்னானி ஆகியோருக்கு எதிராக தெளிவான ஆதாரங்கள் உள்ளன.

ரெய்டுகள் நடத்துவதற்கும், கைதுச் செய்வதற்கும் அதிகாரமில்லாததால் மோடி உள்ளிட்டவர்களின் வாக்குமூலத்தை பதிவுச்செய்து, ஆவணங்களை பரிசோதித்தும் அறிக்கை தயார் செய்ததாக எஸ்.ஐ.டி தெரிவித்துள்ளது.

இனப்படுகொலையை நடத்த மோடியின் வீட்டில் ரகசியக் கூட்டம்.

கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து 2002 பிப்ரவரி 27-ஆம் தேதி இரவு முதல்வரின் வீட்டில் வைத்து குஜராத் மூத்த அரசு அதிகாரிகளின் கூட்டம் நடத்தப்பட்டதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு ((SIT Report)) உறுதிச் செய்துள்ளது.

இந்த ரகசியக் கூட்டத்தில் வைத்துதான் முஸ்லிம்களை அதிகமாக கொலைச் செய்வதற்கும், அதற்காக அரசு துறைகளை செயலிழக்க வைக்கவும் நரேந்திர மோடியும் அவரது கும்பலும் தீர்மானித்தது என குல்பர் சொசைட்டியில் கொடூரமாக் கொலைச் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், இதனை மோடி மறுத்து வந்தார்.

27.02.02 அன்று கோத்ராவுக்கு சென்று அஹ்மதாபாத் திரும்பிய பிறகு ரகசியக் கூட்டத்தை கூட்டினார் என ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கை கூறுகிறது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் நடத்திய விசாரணை விபரங்கள் இவ்வறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன.

மோடி, முதன்மைச் செயலாளரின் பொறுப்புவகித்த ஸ்வர்ணகாந்த்வர்மா, உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பேற்றிருந்த கூடுதல் முதன்மைச் செயலாளர் அசோக் நாராயணன், டி.ஜி.பி.கே.சதுர்வேதி, அஹ்மதாபாத் போலீஸ் கமிஷனர் பி.சி.பாண்டே, உள்துறைச் செயலாளர் கெ.நித்யானந்தம், முதல்வரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஷ்ரா, மோடியின் செயலாளர் அனில் முகிம் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஸ்வர்ணகாந்த் வர்மா, அசோக் நாராயணன் ஆகியோரை விசாரித்த பொழுது கேட்கப்பட்ட, ஹிந்துக்களுக்கு தங்களது கோபத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டுமென முதல்வர் கட்டளையிட்டாரா? என்ற கேள்வியை ஒப்புக்கொள்ளவோ, மறுக்கவோ இருவரும் தயாராக இல்லை என எஸ்.ஐ.டியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு மிஷ்ராவை குஜராத் மின்சாரா வாரிய ஒழுங்குமுறை கமிஷனின் செயலாளராகவும், பி.சி.பாண்டேயை போலீஸ் வீட்டுவசதி வாரியத்தின் தலைவராகவும் குஜராத் மோடி அரசு நியமித்தது.

தற்போதைய குஜராத் மாநில போலீஸ் வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநராக செயல்படுகிறார் நித்யானந்தம். முஸ்லிம் இனப்படுகொலைக்கு பிறகு அசோக் நாராயணன் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார். மோடி மற்றும் குஜராத் அரசுக்கெதிராக எதுவும் பேசாமலிருக்கத்தான் பாண்டே, மிஷ்ரா, அசோக் நாராயணன் ஆகியோருக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டன.

இனப்படுகொலையில் மோடியின் பங்கினைக் குறித்து குஜராத் ரெவனியூ அமைச்சராக இருந்த ஹரண் பாண்டியா, நீதிபதி ஹோஸ்பேட் சுரேஷ், நீதிபதி பி.பி.சாவந்த் ஆகியோர் சுதந்திர தீர்ப்பாயத்திடம் வாக்குமூலம் அளித்தையும் எஸ்.ஐ.டியின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு மர்மமான முறையில் பாண்டே கொல்லப்பட்டிருந்தார்.

விசாரணையின் போது மோடி கூறியதெல்லாம் பொய்
முஸ்லிம் இனப்படுகொலையில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட குற்றங்களில் பங்குள்ளதாக கண்டறியப்பட்ட குஜராத் முதல்வர் மோடி; விசாரணையின்போது தெரிவித்ததெல்லாம் பொய் என எஸ்.ஐ.டி தனது அறிக்கையில் (SIT Report) கூறியுள்ளது.

ஆதாரங்களை முன்வைத்து கடந்த மார்ச் 28-ஆம் தேதி எஸ்.ஐ.டி காந்திநகர் அலுவலகத்தில் வைத்து விசாரணை அதிகாரி எ.கெ.மல்கோத்ரா கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறாமல் மழுப்பியும், மறந்துவிட்டதாக நடித்தும், பொய்களைக் கூறியும் நழுவினார் என எஸ்.ஐ.டி தெரிவித்துள்ளது.

கவ்ரவ் யாத்திரையின் ஒருபகுதியாக கடந்த 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்பதாம் தேதி மெஹ்ஸானா மாவட்டத்தில் பெச்சாரியில் மோடி நிகழ்த்திய உணர்ச்சியைத் தூண்டும் உரையின் ஆவணத்தை மேஜையின் வைத்துவிட்டு இதனைக் குறித்து மோடியிடம் மல்கோத்ரா கேள்வி எழுப்பினார்.

"ஏன் சகோதரர்களே நாம் அகதி முகாம்களை திறக்கிறோம்?குழந்தைகளை உற்பத்திச் செய்யும் மையங்களை திறக்கத்தான் வேண்டுமா? நாம் முன்னேற்றமடைய குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாமா? நமக்கு ஐந்து அவர்களுக்கு இருபத்தி ஐந்தாகும். அவர்களை இதிலிருந்து விலக்கவேண்டும். அந்த மதத்தினரை நம்முடைய வழியில் கொண்டுவர வேண்டும். ஏன் ஏழைகளுக்கு பணம் சென்று சேரவில்லை?" -இந்த உரையின் பகுதியைத்தான் மோடியின் முன்னால் வைத்துவிட்டு இந்த உரை முஸ்லிம்களுக்கு எதிரானது அல்லவா? என்பது மல்கோத்ராவின் கேள்வியாகும். இது அரசியல் ரீதியான உரை என மோடி மழுப்பியுள்ளார்.

கோத்ரா கலவரத்தில் தேசம் நடுங்கி நிற்கும் வேளையில் அடிக்கு பதிலடி உண்டாகும் என 2002 மார்ச் ஒன்றாம் தேதி 'ஸீ' டி.விக்கு அளித்த பேட்டியில் மோடி கூறியதைக் குறித்து அடுத்த வினா தொடுக்கப்பட்டது.

கோத்ரா பகுதியிலுள்ளவர்கள் கிரிமினல் குணத்தைக் கொண்டவர்கள். ஏற்கனவே அவர்கள் ஒரு டீச்சரை கொலைச் செய்துள்ளனர். அதற்கு பதிலடிதான் அவர்கள் அனுபவிக்கிறார்கள் என தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மோடி, தொலைக்காட்சிக்கு பேட்டியளித்து எட்டு ஆண்டுகள் கழிந்துள்ளதால் அன்று உபயோகித்த வார்த்தைகள் ஞாபகத்தில் இல்லை என தெரிவித்துள்ளார்.

கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மழுப்பலான நழுவும் விதமான பதில்களை கூறியுள்ளார் மோடி.

மோடிக்கு எதிராக ஒரு எஃப்.ஐ.ஆர் கூட பதிவுச் செய்ய எஸ்.ஐ.டியால் முடியவில்லை.

கோத்ரா கலவரத்தில் அமைச்சர்களின் பங்கு, சில போலீஸ் அதிகாரிகளின் தலையீடு, வி.ஹெச்.பி, பா.ஜ.க தலைவர்களுடன் மோடி நடத்திய உரையாடல், குல்பர்க் சொசைட்டி கொடூர கூட்டுப் படுகொலையின் வேளையில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரி மோடியை அழைத்து உதவித் தேடியது உள்பட பல்வேறு கேள்விகளுக்கு மோடி தவறான பதில்களை அளித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

கருத்துகள் இல்லை: