சனி, 12 பிப்ரவரி, 2011

வெளியேறினார் முபாரக்...

அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக)...

------------
எகிப்து புரட்சி வென்றதற்கு பின்பான தகவல்கள் இந்த பகுதியில் தொடர்ந்து update செய்யப்படும், இன்ஷா அல்லாஹ்.
-----------

எகிப்து மக்களின் அமைதி புரட்சி வென்றது....அதிபர் பதவியிலிருந்து விலகினார் முபாரக்....அல்லாஹு அக்பர் என்ற கோஷங்கள் வானை பிளக்கின்றன...



அதிபர் முபாரக் பதவி விலகியதாக சில நிமிடங்களுக்கு (11/02/2011, 7 PM local) முன் துணை அதிபர் சுலைமான் அறிவித்தார். Supreme Council of Armed Forces முபாரக்கின் அதிகாரங்களை கவனிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இறுதியாக, இறைவன் மக்களுக்கு அருள் புரியட்டும் என்பதோடு அவரது பேச்சு முடிந்தது.

----------
துணை அதிபரின் உரை:

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்,

நாடு தற்போது சந்தித்து கொண்டிருக்கும் கடுமையாக சூழ்நிலைகளை மனதில் கொண்டு அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக ஹோஸ்னி முபாரக் முடிவெடுத்திருக்கின்றார். உயர் இராணுவ மன்றத்திடம் (Higher Council of the armed forces) நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை அவர் ஒப்படைத்துள்ளார்.

இறைவன் மக்களுக்கு அருள் புரிவானாக..
-----------

காசாவில் கொண்டாட்டங்கள் நடைபெறுவதாக பி.பி.சி தெரிவிக்கின்றது. ஆயிரகணக்கான பாலஸ்தீனியர்கள் எகிப்து வெற்றியை பிரதிபலிக்கும் விதமாக பேரணியும் நடத்தியுள்ளனர்.

இந்த புரட்சியின் வெற்றிக்கு பின்னணியில் பேஸ்புக் சமூக தளத்திற்கு மிகப்பெரிய பங்குள்ளது. அதுபோலவே அல்ஜசீராவிற்கும். எப்படி துனிசிய புரட்சிக்கு பின்னணியில் அல்ஜசீரா உறுதுணையாக நின்றதோ அதுபோலவே இந்த புரட்சியிலும் மிகப்பெரிய பங்கை அது ஆற்றியுள்ளது.

கடந்த மூன்று வாரங்களாக இராணுவம் நடந்து கொண்ட விதம் எகிப்து மக்களிடையே பெரும் வரப்பேற்பை பெற்றிருக்கின்றது. முஸ்லிம் சகோதரத்துவ கட்சி இராணுவத்தின் பங்கை பாராட்டியுள்ளது. பொறுப்போடும், விவேகத்துடனும் இராணுவம் நடந்து கொண்டதாக எகிப்து மக்களின் நன்மதிப்பை பெற்ற இஸ்லாமிய அறிஞரான மாவொஹ் மசூத் தெரிவித்துள்ளார்.

"அபார வெற்றி" என்று புரட்சியின் முடிவை வர்ணித்துள்ளது ஈரான்.

முபாரக்கின் முடிவை நம் நாடு வரவேற்றுள்ளது.

புரட்சியின் வெற்றி குறித்து இதுவரை இஸ்ரேல் எந்த அறிக்கையும் விடவில்லை. இது, இஸ்ரேலின் மனநிலையை நன்கு பிரதிபலிப்பதாக பி.பி.சி தெரிவிக்கின்றது.

தற்காலிக கட்டத்திற்கான நடவடிக்கைகளை விரையில் அறிவிக்க போவதாக உயர் இராணுவ மன்றம் அறிவித்துள்ளது.

பேஸ்புக் பற்றிய ஒரு நகைச்சுவை உலாவுவதாக அல்ஜசீராவின் வலைப்பூ கூறுவது,
மறுமையில், முன்னாள் அதிபர்களான அன்வர் சாடத் மற்றும் கமல் அப்தல் நாசரை சந்திக்கின்றாராம் முபாரக். அப்போது அவ்விருவரும் முபாரக்கை பார்த்து கேட்டார்களாம், "படுகொலை செய்யப்பட்டீர்களா அல்லது விஷம் வைக்கப்பட்டீர்களா?" என்று. அதற்கு முபாரக் சொன்ன பதில், "இல்லை, பேஸ்புக்".

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

கருத்துகள் இல்லை: