சனி, 19 பிப்ரவரி, 2011

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரா? ஆர்.எஸ்.எஸ் ரவிசங்கரா?


ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குள் போனால் “வன்முறை இல்லாத, மனஇறுக்கம் இல்லாத உலகே எனது லட்சியம்” எனும் வார்த்தைகள் பளிச்சிடுகின்றன. மகாத்மா காந்தி ஆசிரமத்திற்குப் போய் ரவிசங்கர் ராட்டை நூற்கிற படம் இருக்கிறது. பெங்களூரிலிருந்து 36 கி.மீ தூரத்தில் இவரது ஆசிரமம் இருக்கிறது. தமிழகத்தின் பாபநாசத்தில் பிறந்தவராம். அங்கு போய் செட்டில் ஆகியிருக்கிறார். தனது பெயரான ரவிசங்க ரோடு ஸ்ரீஸ்ரீயைச் சேர்த்திருக்கிறார்.

“வாழுங் கலை சர்வதேச மையம்”, “வேத விஞ்ஞான மகாவித்யா பீடம்” இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் இந்தியாவில் மட்டு மல்லாது, பல நாடுகளிலும் விரவிக் கிடப்பதை இணைய தளம் விவரித்துக் கொண்டே போகிறது. இணைய தளத்தைப் பார்க்க பார்க்க, படிக்க படிக்க பிரமிப்பாக இருக்கிறது. தென்னிந்தியா விலிருந்து ஒரு “ மகாகுரு” கிளம்பி சர்வதேசப் புகழ் பெற்றிருக்கிறார். இது அதிகாரப்பூர்வ பிம்பம். நெருங்கிப் பார்த்தால் தெரியும் உண்மை முகம் என்ன?

“ஃபைனான்சியல் டைம்ஸ்” எனும் உலக அளவில் பிரபலமான பத்திரிகையின் தெற்காசியப் பிரிவின் தலைவராக 2001-2005 ல் தில்லியிலிருந்து பணியாற்றியவர் எட்வர்ட் லூசே. இந்தியாவில் தனக்கேற்பட்ட அனுபவத்தை “கடவுளர்கள் இருந்தாலும்” என்று ஒரு நூலாக எழுதியிருக்கிறார். இது 2006 ல் லண்டனில் வெளியானது. இதன் மலிவுப் பதிப்பு 2007ல் வெளியானது. இதில், தான் ரவிசங்கரை சந்தித்தது பற்றியும், அதன் பிறகு நடந்த சில விஷயங்கள் பற்றியும் சொல்லியிருக்கிறார் லூசே. அவை சுவாரசியமானவை மட்டுமல்ல, இந்த நாட்டின் முற்போக்காளர்களால் கவலையோடு கவனத்தில் கொள்ளத் தக்கவை.

ரவிசங்கரின் ஆசிரமம் எப்படி இருக்கிறது தெரியுமா? ஆசிரமம் என்றால் நம் மனதில் ராமாயண காலத்து குடில், அல்லது காந்தி காலத்து எளிய ஓட்டு வீடு எழும். இது அப்படி அல்ல. லூசே கூறுகிறார் “இந்த ஐந்து மாடிக் கட்டடம் முழுக்க முழுக்க மார்பிள் கல்லால் கட்டப்பட்டது, ஒரு தாமரை வடிவில் உள்ளது.” பி.ஜே.பி.யின் தேர்தல் சின்னத்தை இவர் எடுத்துக் கொண்டது யதேச்சையானதாக இருக்க முடியாது என்பதைப் பிந்தைய நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ் பற்றிய ஒரு வலைத்தளச் செய்தியில் பெங்களூரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் அதிகாரிகள் மத்தியில் இது தீவிரமாக இயங்குவதாகவும், வாரம் ஒரு முறை கூடி இந்த அமைப்பின் சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி உற்சாகமாக விவாதித்துக் கொள்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தகையவர்களின் நிதி உதவி ரவிசங்கருக்கு கிடைத்துள்ளது.

நூலாசிரியர் லூசேவுடனான பேட்டி துவங்கியது: அப்போது காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் கைதாகியிருந்தார். இது பற்றிய ரவிசங்கரின் கருத்தைக் நூலாசிரியர் கேட்டார். அதற்கு அவரின் பதில் அதிர்ச்சியாக இருந்தது. இந்துக்கள் பெரிதும் அசமந்தமானவர்கள். நாங்கள் அஹிம்சாவாதிகள் இதனாலேதான் இப்படி நடக்கிறது என்று பதில் சொன்னார். ஓர் இந்து மடாதிபதி கைதானால் இந்து வெகுமக்கள் பொங்கி எழ வேண்டும், கலவரத்தில் ஈடுபட வேண்டும் எனும் உள்ளார்ந்த எதிர்பார்ப்பு இந்த “ஆன்மிகக்” குருவுக்கு இருப்பதைத் தெளிவாக இவரது பதிலில் இருந்து உணரலாம். பாகல்பூர் முதல் பீவாண்டி, மீரட், குஜராத், மும்பை வரை நடத்திய கலவரங்கள் போதாது. இந்துக்கள் அஹிம்சாவாதிகளாக இருக்கிறார்களே என்று ஏகமாயக் கவலை!

இங்குள்ள சாதிப்பிரச்சனையும் இதற்குக் காரணமோ என்று இவர்களுக்குள் குடைகிறது. காஞ்சி மடம் நடைமுறையில் ஓர் உயர்சாதியினரின் மடமாக இருக்க, பிற பகுதி மக்கள் அதன்பால் அக்கறை காட்டாததில் ஆச்சரியம் இல்லை என்றும் படுகிறது. இதை மனதில் கொண்டுதான் ரவிசங்கர் போன்றவர்கள் தியானம், யோகா என்று பல தரப்பாரையும் ஈர்க்கிற புதுவித மடத்தை உருவாக்குகிறார்கள் என்பதும் இதில் நிச்சயமாகிறது. உத்தியை மாற்றிப் பார்க்கிறார்கள்.

இதெல்லாம்கூட பிரச்சனை இல்லை. இந்த நவீன சாமியாரின் சமூக-அரசியல் சிந்தனை மற்றும் புறவுலகத் தொடர்புதான் சிக்கலானது. பாபர் மசூதி-ராமர்கோவில் பற்றி நூலாசிரியர் லூசே கேள்வி கேட்க ரவிசங்கர் சொன்ன பதிலை நோக்குங்கள்- “இயேசு அல்லது முகம்மது பிறந்த இடம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? அந்த இடத்தின் மீது இன்னொரு கட்டுமானம் இருப்பதை நீங்கள் பொறுத்துக் கொள்வீர்களா? ராமருக்கு ஒரு கோவில் கட்டுவோம். ஒரு நல்லெண்ணச் செய்கையாக முஸ்லிம்கள் விட்டுக் கொடுக்கட்டும். அப்போது அந்தக் கோவில் அல்லாவுக்கும், அனைத்து முஸ்லிம்களுக்கும் கூடச் சொந்தமாக இருக்கும்.”

இந்தப் பதிலைக் கேட்டு அசந்து போனார் லூசே. அவர் மட்டுமா நாமும்தான். விஷயத்தையே தலைகீழாக்கி விட்டார். ஆன்மிகக் குரு அல்லவா சித்துவேலை காட்டிவிட்டார். அயோத்தியில் கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்கிறார்கள் சரித்திரஞானிகள். 450 ஆண்டுகளாக இருந்த மசூதிக்குள் 1949 ல் கள்ளத்தனமாக ராமர் சிலையை வைத்துவிட்டு, அது ராமருக்கே சொந்தம் எனச் சொன்னார்கள் இந்துத்துவாவாதிகள். இந்த அடாவடித்தனத்தைக் கண்டிக்காமல் முஸ்லிம்களை விட்டுத்தரச் சொல்கிறார். விட்டுத் தந்தால் ராமர் கோவில் முஸ்லிம் களுக்கும் சொந்தமாக இருக்குமாம்! விக்கிரக ஆராதனை செய்யாத முஸ்லிம்களை இது கேலி செய்கிற வேலை.

நூலாசிரியர் லூசே எழுதுகிறார்- “இது நிறைய ‘இந்து முஸ்லிம்களும் இந்து கிறிஸ்தவர்களும்’ உருவாக வேண்டும் என்கிற அத்வானியின் ஆசையை குருஜியின் வார்த்தைகள் நினைவு படுத்தின. குஜராத்தின் நரேந்திர மோடியோடு நான்கண்ட பேட்டியையும் அவை நினைவுபடுத்தின.” அஹா! ஆன்மிகக் குருவின் வார்த்தைகள் இந்துத்துவா அரசியல் தலைவர்களை நினைவு படுத்தின என்றால் என்ன பொருத்தம் இப் பொருத்தம்!.

எனினும் இது உச்சம் அல்ல. அது அடுத்து வருகிறது. நூலாசிரியர் லூசே முத்தாய்ப்பாக நடந்த அந்த நிகழ்வைக் கூறுகிறார். “சில வாரங்களுக்குப் பிறகு நூலாசிரியர் லூசேக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தேசியச் செய்தித் தொடர்பாளர் ராம்மாதவிடமிருந்து வந்தது. மாதவ் கூறினார் - ‘ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பற்றிப் பேசவே கூப்பிட்டேன். அவரோடு பேசிக் கொண்டிருந்த போது ஃபைனான்சியல் டைம்சில் நீங்கள் எழுதியிருந்த கட்டுரை திருப்தியாக இல்லை என்று அவர் என்னிடம் கூறினார். அரசியல் மற்றும் சங்கராச்சாரியார் பற்றி அவர் கூறிய கருத்துக்களை மட்டுமே நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். சகிப்புத் தன்மை மற்றும் ஆன்மிகம் பற்றிய அவரது கருத்துக்களை நீங்கள் குறிப்பிடு வீர்கள் என்று அவர் நம்பியிருந்ததாக அவர் கூறினார்’. உண்மைதான், இந்த விஷயங்கள் பற்றிய குருஜியின் கருத்துக்களைக் குறிப்பிட எனது கட்டுரையில் இடம் இல்லாமல் போயிருந்தது. ஆனால் என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம், இந்தப் புகாரைச் சொல்ல அவர் இதர அமைப்புகளை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ்.சைத் தேர்ந்தெடுத்தது!”

தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி சொல்லித் தருகிற ஓர் ஆன்மிகக் குரு என்று ரவி சங்கரை நம்பிக் கொண்டிருக்கிறோம். அவரோ ஆர்.எஸ்.எஸ்.சின் கோட்பாடுகளை எதிரொலிக்கிறார். அயோத்தி விவகாரத்தில் என்பது மட்டு மல்லாது, அந்த அமைப்பின் தலைவர்களோடு நெருங்கிய உறவு கொண்டிருக்கிறார். எந்த அளவுக்கு என்றால் இவருக்காக அவர்கள் பத்திரிகையாளர்களோடு பேசுகிற அளவுக்கு அல்லது மறைமுகமாக மிரட்டுகிற அளவுக்கு! “ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு யோகி தாராள சித்தம் கொண்டவர் எனும் பிம்பம் இருக்கிறது. ஆனால் அதிகம் அறியப்படாத விஷயம் என்னவென்றால் ஆர்.எஸ்.எஸ்.சோடு குருஜிக்கு உள்ள நெருங்கிய தொடர்பு மற்றும் பொது மேடைகளில் வி.எச்.பி தலைவர்களோடு அவர் இடம் பெறுவது.”

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரா? ஆர்.எஸ்.எஸ் ரவிசங்கரா?- என்பதுதான் இவற்றிலிருந்து எழுப்பப்பட வேண்டிய கேள்வி. யோகா-மூச்சுப் பயிற்சி என்பது இந்தியர்கள் வளர்த்த ஒரு நல்ல உடல்கலை. ஆனால், அதைச் சொல்லிக் கொண்டு சில குருமார் களை ஆர்.எஸ்..எஸ் உருவாக்கி உலாவவிடக் கூடும். அவர்களை அடையாளங்கண்டு மக்களுக்குச் சொல்லுகிற வேலையும் முற்போக்காளர்களுக்கு உண்டு.

நன்றி : அருணன். நன்றி: கீற்று.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

முஸ்லிம்கள் சம்மந்த மான மற்றும் சமுதாய நடுநிலையான செய்திகளை தொடர்ந்து வெளி இட்டு கொண்டு இருக்கும் KNR Times பொது செயலாளர் அண்ணன் சாதிக் அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்