வியாழன், 30 டிசம்பர், 2010

ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது

டெஹ்ரான்,டிச.29:இஸ்ரேல் உளவு நிறுவனமான மொசாதிற்காக பணியாற்றிய இளைஞர் ஒருவருக்கு ஈரான் மரணத் தண்டனையை நிறைவேற்றியது.

டெஹ்ரானில் எவின் சிறையில்வைத்து அலி அக்பர் ஸியாதத் என்ற மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல வருடங்களாக மொசாதிற்காக பணிபுரிந்த ஸியாதத் முக்கிய விபரங்களை மொசாதிற்கு அளித்துள்ளார். ஈரானை விட்டு வெளியேற முயன்றபொழுது கடந்த 2008 ஆம் ஆண்டு கைதுச் செய்யப்பட்டார் ஸியாதத்.

ஈரானின் ராணுவ ரகசியங்களைக் குறித்த செய்திகளை இவர் மொசாதிற்கு அளித்ததை விசாரணையின் போது ஒப்புக்கொண்டார் என இர்னா செய்தி நிறுவனம் கூறுகிறது.

இதற்கு கூலியாக மொசாதிடமிருந்து ஸியாதத்திற்கு 60 ஆயிரம் டாலர் பணம் கிடைத்தது என இவர் புலனாய்வு அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.

ராணுவ மையங்கள், போர் விமானங்கள், பயிற்சி விமானங்கள், ஏவுகணைகள் ஆகியன தொடர்பான விபரங்களை இவர் இஸ்ரேலுக்கு அளித்துள்ளார். ராணுவ ரகசியங்கள் இவருக்கு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து இர்னா தெரிவிக்கவில்லை.

துருக்கி, தாய்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வைத்து இவர் மொசாத் ஏஜண்டுகளுடன் சந்திப்பை நடத்தியுள்ளார். தேசத்தை காட்டிக்கொடுப்பது ஈரானின் சட்டப்படி மரணத் தண்டனை விதிக்கும் குற்றமாகும்.

மொசாதிற்காக பணியாற்றிய டெலிகாம் பொறியாளர் அலி அஷ்தரிக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு ஈரான் மரணத்தண்டனை விதித்திருந்தது.

ஈரான் பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்திய பீப்பிள்ஸ் முஜாஹிதீன் ஆர்கனைசேசன் ஆஃப் ஈரான்(பி.எம்.ஒ.ஐ) உறுப்பினர் அலி ஸரேமிக்கும் நேற்று மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: