திங்கள், 13 டிசம்பர், 2010

இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - எடிசலாத்

துபாய்,டிச.13:ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வாய்ஸ் ஆஃப் இண்டெர்நெட் ப்ரோட்டோகால்(வாய்ப்) என்ற இணையதளம் வழியான தொலைத்தொடர்பு வசதி அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து செயல்படத் துவங்கும் என ஐக்கிய அரபு அமீரகத்தின் தொலைத்தொடர்பு சேவையாளரான எடிசலாத் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுத் தொடர்பான நடவடிக்கைகள் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டதாக எடிசலாத்தின் சீனியர் துணைத்தலைவர் அப்துல்லாஹ் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட வாய்ப் கால் கட்டமைப்பை துவக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கனவே அனுமதியளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு சேவையாளர்களான எடிசலாத்தும் டூவும் கடந்த ஜூலை மாதம் வாய்ப் கால் வசதியை துவக்கப்போவதாக அறிவித்திருந்தன. ஆனால், தொழில்நுட்ப காரணங்களால் இத்திட்டம் காலதாமதமானது. அதிகாரப்பூர்வ இண்டெர்நெட் கால் வசதி நடைமுறைக்கு வருவதன்மூலம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு சொந்த நாட்டில் தங்களது குடும்பத்தினருடன் அதிகநேரம் பேசும் வாய்ப்பு ஏற்படும்.

தற்பொழுது அனுமதி பெறாத இண்டெர்நெட் வாய்ப் கால் சேவையாளர்களின் மூலம் பலர் தொடர்புக்கொண்டு வந்தாலும், ஒருவித அச்சத்துடனே அதனை பயன்படுத்துகின்றனர். இனி, அதிகாரப்பூர்வ இண்டெர்நெட் கால் வசதி கிடைப்பதால் பயமின்றி உரையாடலாம்.

இந்தியாவிற்கான மொபைல், தொலைபேசி கட்டணங்களை எடிசலாத்தும், டூவும் குறைத்த பொழுதிலும் சாதாரண மக்களுக்கு பொருளாதார சிக்கலையே ஏற்படுத்தி வந்தது.

பிரபல வாய்ப் கால் சேவை நிறுவனமான ஸ்கைப் யு.ஏ.இ மார்க்கெட்டில் நுழைய முயற்சிச்செய்து வருகிறது. ஆனால் எடிசலாத்திற்கும், டூவிற்கும் மட்டுமே அனுமதியுள்ளது என யு.ஏ.இ தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

செய்தி:மாத்யமம்

கருத்துகள் இல்லை: