செவ்வாய், 21 டிசம்பர், 2010

மக்கா மஸ்ஜித்:முஸ்லிம் சமுதாயத்திடம் ஆந்திர அரசு மன்னிப்புக் கேட்கும் - ஆந்திர மாநில முதல்வர்

ஹைதரபாத்,டிச.16:கடந்த 2007 ஆம் ஆண்டு ஹைதரபாத் மக்கா மஸ்ஜிதில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து முஸ்லிம் இளைஞர்களை போலீசார் வேண்டுமென்றே கொடுமைப்படுத்தியிருந்தால் அதற்காக முஸ்லிம் சமுதாயத்திடம் மன்னிப்புக்கேட்க ஆந்திர அரசு தயார் என அம்மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி சட்டசபையில் அறிவித்தார்.

மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அக்பருத்தீன் உவைஸி எழுப்பிய கேள்விக்கும் பதிலளிக்கையில் முதல்வர் இதனை தெரிவித்தார்.

போலீஸாரால் கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு பொருளாதார உதவி வழங்கப்படும் எனவும் முதல்வர் உறுதி அளித்தார்.

நிரபராதிகளான முஸ்லிம்களை மட்டுமல்ல, எந்த நபர்களையும் கொடுமைப்படுத்தியிருந்தாலும் அரசுக்கு அதுக்குறித்து கவலை உண்டு. ஆனால் பணியின் ஒருபகுதியாக, சூழ்நிலையின் அடிப்படையில் போலீஸ் எவருக்கெதிராகவும் வழக்கு பதிவுச் செய்யும் என முதல்வர் தெரிவித்தார்.

குண்டுவெடிப்புத் தொடர்பான வழக்குகளில் போலீசார் கல்விக் கற்ற முஸ்லிம் இளைஞர்களை தவறாக சேர்த்துள்ளனர் என உவைஸி சுட்டிக்காட்டினார்.

சி.பி.ஐ விசாரணை நடத்தியிருக்காவிட்டால் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை நடத்தியது ஹிந்துத்துவா சக்திகள்தான் என்பது தெரியாமலேயே போயிருக்கும்.100 முஸ்லிம் இளைஞர்களை நிரபராதிகள் என அறிந்து விடுதலைச் செய்தபிறகும் அவர்கள் வேலை வாய்ப்புகளை இழக்க நேரிட்டதால் எதிர்காலம் இருளடைந்துள்ளது என உவைஸி தெரிவித்தார்.

உவைஸியின் கருத்துக்களை எதிர்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆதரித்தார். சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து நடந்த போலீசாரின் துப்பாக்கிச்சூடு பற்றி விசாரணை நடத்தும் பாஸ்கர ராவ் கமிட்டியின் அறிக்கைக்காக அரசு காத்திருப்பதாக உள்துறை அமைச்சர் பி.ஸபீதா ரெட்டி அறிவித்தார். விசாரணையில் குற்றவாளிகள் என கண்டறியப்படும் போலீசார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: