திங்கள், 20 டிசம்பர், 2010

எல்லா தீவிரவாத செயல்களில் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு: விசாரணை தேவை?

தீவிரவாத செயல்களில் ஆர்.எஸ்.எஸ்., அதன் சகோதர அமைப்புகளுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் சுமார் 15 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ள 2 நாள் மாநாடு புது தில்லியின் புறநகர்ப் பகுதியான புராரியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இந்த மாநாட்டின் தலைமை உரையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:

வகுப்புவாத செயல்களிலும், தீவிரவாத செயல்களிலும் ஈடுபட்டுவரும் அமைப்புகள் பெரும்பான்மைச் சமூகமா அல்லது சிறுபான்மைச் சமூகமா என காங்கிரஸ் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் அமைப்பு எந்த மதத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் அது அபாயகரமானது. அத்தகைய சக்திகள் அனைத்தும் தோற்கடிக்கப்பட வேண்டும். வகுப்புவாதம் எந்த உருவத்தில் வந்தாலும் அதை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. குறுகிய அரசியல் லாபங்களுக்காக வகுப்புவாதச் செயல்களில் ஈடுபடுவதும், வெறுப்புணர்வைப் பரப்புவதும், மதவெறியைத் தூண்டுவதும் மதத்தை அவமதிக்கும் செயலாகும்.

மதத்தை கேடயமாகப் பயன்படுத்தி மக்களை வன்முறையில் ஈடுபடத் தூண்டுவது, மற்ற மதங்களைப் பற்றி அவதூறுப் பிரசாரம் செய்வது, வரலாற்றைத் திரித்து மக்கள் மனங்களில் கேடு விளைவிக்கும் தனிநபர்கள், அமைப்புகள், கொள்கைகளை புறந்தள்ள முடியாது.
ஊழலைக் களைய 5 அம்சத் திட்டம்: ஊழல் ஒரு நோய் போல சமூகத்தின் எல்லாநிலைகளிலும் பரவியுள்ளது. அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகள் உள்பட அனைத்து வழக்குகளும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விரைவாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நிரபராதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

2-வதாக, வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்கு அரசே நிதி அளிக்க வேண்டும்.

ஊழலுக்கு மிக முக்கிய ஊற்றாக விளங்குவது நில ஒதுக்கீடு செய்வதற்கு உள்ள அதிகாரம். இத்தகைய அதிகாரத்தை எல்லா முதல்வர்களும், அமைச்சர்களும் கைவிட வேண்டும்.
மாநில அரசுகள் கொள்முதல் செய்யும் அனைத்தும் வெளிப்படையாக நடைபெறுவதற்கான தெளிவான வரைமுறைகள் வகுக்கப்பட வேண்டும். இயற்கை வளங்களை சுரண்டுவதைத் தடுக்க தகுந்த வெளிப்படையான நடைமுறை உருவாக்கப்பட வேண்டும். தங்களது நேர்மை மீது எந்தவிதமான சந்தேகத்தின் நிழலும் விழாதவகையில் காங்கிரஸ் நிர்வாகிகள் செயல்பட வேண்டும். எளிமை, பொறுமை, சிக்கனம் போன்றவையே நமது தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமுறையாக இருக்க வேண்டும். இதை நாம் சட்டமாகக் கொண்டு வரமுடியாது. வறுமை நிறைந்திருக்கும் நாட்டில், நமது வளத்தை கூச்சமில்லாமல் வெளிப்படுத்துவதைத் தவிர்க்கும் சமூக உணர்வு நமக்கு இருக்க வேண்டும்.

பா.ஜ.க.வுக்கு சவால்: எந்தவிதமான குற்றச்சாட்டும் உறுதி செய்யப்படாத நிலையிலும், விசாரணை மட்டுமே நடைபெறும் நிலையிலும் நமது முதல்வர்கள், அமைச்சர்களை பதவி விலக ஆணையிட்டுள்ளோம். இதுபோன்று எத்தனைக் கட்சிகள் உரிமை கோர இயலும்? கர்நாடகத்தில் ஊழல் புகார் எழுந்துள்ள நிலையில், முதல்வரையோ, அமைச்சர்களையோ பாரதிய ஜனதா கட்சியால் விலகச் சொல்ல முடியுமா? நாடாளுமன்ற முடக்கம் குறித்து...: நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கியதற்கு எப்படி நியாயம் கற்பிக்கப் போகின்றன? அரசியல் காரணங்களுக்காக நாடாளுமன்றத்தை பிணைக் கைதியாக எதிர்க்கட்சிகள் பயன்படுத்தக் கூடாது. மிக முக்கியமான பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும், முடிவு எடுக்கவும் நாடாளுமன்றமே மிகச் சரியான இடமாகும்

கருத்துகள் இல்லை: