செவ்வாய், 11 ஜனவரி, 2011

இந்துக்களை பயமுறுத்தவே ஆஜ்மீர் தர்காவில் குண்டுவைக்கப்பட்டது-சாமியார் அசீமானந்த் வாக்குமூலம்


டெல்லி: ஆஜ்மீர் தர்காவுக்கு பெருமளவிலான இந்துக்களும் வருவதால் அதைத் தடுக்க, இந்துக்களைப் பயமுறுத்தும் நோக்கில்தான் தர்காவில் குண்டுவைக்கப்பட்டதாக கைதாகியுள்ள இந்து தீவிரவாத சாமியார் அசீமானந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.

புகழ் பெற்ற ஆஜ்மீர் தர்காவில் கடந்த 2007ம் ஆண்டு குண்டுவெடித்தது. இந்த சம்பவத்திற்கு இந்து தீவிரவாதிகளே காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சாமியார் அசீமானந்த் உள்ளிட்டோர் பிடிபட்டுள்ளனர்.

இவர்களில் அசீமானந்த்துக்கு, பாகிஸ்தானுக்கான சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திலும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆஜ்மீர் குண்டுவெடிப்பு தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளார் அசீமானந்த். அதில், இந்த சம்பவத்தில் பெரும்பான்மையினரும், சிறுபான்மையினரும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

ஆஜ்மீர் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்த 2 நாட்களுக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். பிரசாரகரான சுனில் ஜோஷி என்னை வந்து சந்தித்தார். (இந்த சுனில் ஜோஷி பின்னர் கொல்லப்பட்டு விட்டார்) அவருடன் ராஜ் மற்றும் மெஹல் என்ற இருவரும் வந்திருந்தனர்.

ஜோஷி என்னிடம் கூறுகையில், தனது ஆட்கள்தான் குண்டுவெடிப்பை நடத்தியதாகவும், சம்பவம் நடந்தபோது தான் தர்காவில்தான் இருந்ததாகவும் கூறினார். மேலும், இந்த சம்பவத்தை நடத்துவதற்காக இரண்டு முஸ்லீம் சிறுவர்களை தன்னிடம் இந்திரேஷ் (மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்) அனுப்பி வைத்ததாகவும் ஜோஷி தெரிவித்தார். இந்த சிறுவர்கள்தான் குண்டை உள்ளே போய் வைத்ததாகவும் அவர்கூறினார்.

ஆஜ்மீர் தர்காவுக்கு இந்துக்களும் பெருமளவில் வருவதால் அதைத் தடுக்க, இந்துக்களை பயமுறுத்த இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார் அசீமானந்த்.

கருத்துகள் இல்லை: