புதன், 5 ஜனவரி, 2011

கர்காரேக்கு மிரட்டல்:ஆதாரங்களை வெளியிட்டார் திக்விஜய்சிங்

புதுடெல்லி,ஜன.5:மும்பைத் தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்பட்ட மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்காரே தான் கொல்லப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தீவிர ஹிந்துத்துவாக்களிடமிருந்து தனது உயிருக்கு மிரட்டல் விடப்பட்டுள்ளதாக தொலைபேசியில் தன்னிடம் தெரிவித்தார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் தகவலை வெளியிட்டிருந்தார்.

இதுத் தொடர்பான ஆதாரங்களை நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார் அவர்.


கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாலை 5.44 மணிக்கு மும்பையில் தீவிரவாத எதிர்ப்புப் படையின் தலைமையகமத்திலிருந்து 022308733 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து தனது மொபைல் எண்ணான 09425015451க்கு கர்காரே அழைத்ததன் ஆவணங்களை திக்விஜய் வெளியிட்டுள்ளார். அதே நாளில் மாலை 8 மணிக்கு மும்பையில் தாக்குதல் நடைபெறுகிறது. சில மணிநேரங்களில் கர்காரே கொல்லப்படுகிறார்.

நான் பொய்க் கூறினேன் என செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மன்னிப்புக் கோரவேண்டும் எனக் கூறிய திக்விஜய்சிங், கர்காரேயும், நானும் தொலைபேசியில் உரையாடியதற்கு ஆதாரமில்லை எனத் தெரிவித்த மஹாராஷ்ட்ரா மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீலும் மன்னிப்புக் கோரவேண்டுமென அவருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.

தொலைபேசி பதிவின் படி 6.21 நிமிடங்கள் இருவரும் உரையாடியுள்ளனர். மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஹிந்துத்துவவாதிகளின் பங்கினை வெளிப்படுத்தியதற்காக தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஹிந்துத்துவ அமைப்புகளின் எதிர்ப்பை எதிர்கொண்டுதான் தான் இவ்வழக்கினைக் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் கர்காரே தன்னிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக திக்விஜய்சிங் தெரிவித்தார்.

உரையாடல்களின் ஆவணங்களை ஒரு வருடத்திற்கு மேலாக பாதுகாப்பதில்லை என பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் தெரிவித்ததாக திக்விஜய் சிங் கூறியிருந்தார்.

தனக்கு விடுக்கப்பட்ட மிரட்டலால் தான் நிம்மதி இழந்திருப்பதாகவும், தொலைபேசியில் மிரட்டல் விடுத்தவரை அடையாளங் காண முயற்சிப்பதாகவும் கர்காரே தெரிவித்ததை திக்விஜய்சிங் வெளியிட்டார்.

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் தனக்கெதிராக வெளியிடப்பட்ட தலையங்கம் வேதனை ஏற்படுத்தியது என கர்காரே தெரிவித்துள்ளார்.

துபாயில் கர்காரேயின் மகன் தவறான வழியில் பணம் சம்பாதிப்பதாக சாம்னாவில் எழுதப்பட்டிருந்தது. ஆனால், உண்மையில் கர்காரேயின் மகன் துபாயில் ஒரு பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறான்.

புனே பேக்கரி குண்டுவெடிப்பு மற்றும் வாரணாசி குண்டு வெடிப்புகளைத் தவிர இந்தியாவில் குண்டுவெடிப்புகள் குறைந்துள்ளதாக திக்விஜய்சிங் பத்திரிகையாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.

"இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு பின்னணியில் ஒரு தனிக்குழு செயல்பட்டு வருகிறது. சபரி கும்பமேளாவில் வைத்துதான் மலேகான் குண்டு வெடிப்பிற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இது மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலீஸ் காவலில் உள்ள சுவாமி அஸிமானந்தாவை விசாரித்தால் எல்லா உண்மைகளும் வெளியாகும். தீவிரவாதத் தாக்குதல்களின் பெயரால் இவர்களை கைதுச் செய்யும்பொழுது பா.ஜ.கவுக்கு ஏன் வேதனையாக இருக்கிறது? ஏன் அவர்களுக்காக இவர்கள் களமிறங்குகிறார்கள்? இந்திரேஷ் குமாரின் நேராக விரல் சுட்டிக் காட்டப்படும் பொழுது ஏன் இவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்?இந்தியாவில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளையும் என்.ஐ.ஏ விசாரிக்கவேண்டும்.

சுனில் ஜோஷியின் கொலை உட்பட தீவிரவாத தாக்குதல் வழக்குகளில் மத்தியபிரதேச அரசு உண்மைகளை மறைத்துவிட்டது. சுனில் ஜோஷியை ரகசியம் வெளியே கசியாமலிருக்க ஆர்.எஸ்.எஸ்தான் கொலைச் செய்துள்ளது. இவ்வகையில் வேறு சிலரும் அச்சுறுத்தப்படுகின்றனர்." என திக்விஜய்சிங் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: