ஞாயிறு, 30 ஜனவரி, 2011

மனிதநேய மக்கள் கட்சி பொதுக்குழு தீர்மானங்கள்

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு 29.01.2011 அன்று தாம்பரத்தில் கூடியது. ம.ம.க. பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்குழுவில் தமிழகம் முழுவதிலிருந்தும் இருந்தும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



தீர்மானம் 1 : அதிமுக கூட்டணி வெற்றிபெற பாடுபடுவோம்


தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு பல்வேறு அம்சங்களில் மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருகின்றது. இந்த அரசை வீழ்த்த அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அக்கூட்டணி வெற்றிபெற பாடுபடுவது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் 2 : ஜனநாயகத்தைக் காப்பாற்றுக

தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும் வாக்காளர்களுக்கு பணமும், அன்பளிப்பும் லஞ்சமாக வழங்கப்பட்ட இழிசெயல் எல்லா ஊடகங்களாலும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. ஜனநாயகத்தைப் பணநாயகமாக்கும் இந்த ஈனச் செயலை தேர்தல் ஆணையம் இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 3: கச்சத்தீவை மீட்க வேண்டும்

தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் படுகொலை செய்வது தொடர்கதையாகி வருகிறது. மத்திய அரசு இந்தக் கொடுமையை மிக அலட்சியமாகக் கருதுகிறது. மத்திய அரசின் பொறுப்பற்றத் தன்மையே தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் தொடர்ந்து படுகொலை செய்யப்படக் காரணமாகும். தமிழக மீனவர்களின் உயிர் காக்கவும், அவர்களது உரிமைக் காக்கவும் கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கையால் மத்திய அரசு உடனடியாக இறங்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

இலங்கையிலும், தமிழகத்திலும் அப்பாவித் தமிழர்களைப் படுகொலை செய்துவரும் இலங்கை இன வெறி அரசின் மீது இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4: இலங்கைத் தமிழர் பிரச்சினை


இலங்கையில் வாழும் தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு இழைத்துவரும் கொடுமைகளை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. முஸ்லிம்கள், ஈழவர்கள் உள்ளிட்ட இலங்கை தமிழ் பேசும் அனைத்து சமுதாய மக்களும் சமஉரிமை, சமநீதியோடு வாழ இந்திய அரசு உரிய முயற்சிகளை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5 : நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை தேவை

இந்தியாவையே அதிர வைத்துள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழலில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை தேவை என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. தலைமை கணக்கு தணிக்கைத் துறை நாட்டிற்கு 1,76,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதைத் தெளிவாகக் கூறிய பிறகு, தொலைத் தொடர்புத் துறையை கவனித்துவரும் அமைச்சர் கபில்சிபல் நாட்டிற்கு இழப்பு ஏற்படவில்லை என மழுப்பி இருப்பது கண்டனத்திற்குரியது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் நடைபெற்றுள்ள திரைமறைவு நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டு மக்களுக்குத் தெரியவர வேண்டும். எனவே சி.பி.ஐ. விசாரணையோடு நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணையும் நடத்தப்பட வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 6 : பசுமை வேட்டையை நிறுத்துக

பச்சை வேட்டை என்ற பெயரில் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீஹார் மாநிலங்களின் வனப்பகுதியை உள்ளடக்கிய ‘தண்ட காரண்யா’ வனப்பகுதியின் பழங்குடி இன மக்கள் மீது நடத்தப்பட்டுவரும் அரச பயங்கரவாதத்தை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்திய நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கத் துடிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உதவி செய்வதற்காக, மண்ணின் மைந்தர்களை பழங்குடி மக்களை வனப்பகுதிகளிலிருந்து வெளியேற்றுவதும், வெளியேற மறுப்பவர்களை மாவோயிஸ்டுகள் என்று முத்திரைக் குத்தி படுகொலை செய்வதும் மனிதாபிமானமற்ற செயலாகும். பசுமை வேட்டை நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிறுத்துவதோடு, இனி ஒருபோதும் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கக்கூடாது என இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.

தீர்மானம் 7 : மனித உரிமை மீறல்கள்


காஷ்மீர், மணிப்பூர், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் அரசாங்கமும், ராணுவமும் நடத்தி வரும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

சந்தேகப் படுபவர்களையெல்லாம் சுட்டுக் கொல்கிற உரிமையை ராணுவத்திற்கு வழங்கும் சிறப்பு ஆயுதப்படை சட்டத்தை காஷ்மீரில் உடனடியாக ரத்து செய்வதோடு, அம்மாநில மக்களின் வாழ்வுரிமையை நசுக்கும் வகையில் அங்கே முகாமிலுள்ள அளவுக்கதிகமான ராணுவம் திரும்பப் பெறப்பட வேண்டும் எனவும், காஷ்மீருக்கு இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள சிறப்புரிமைகள் நிலைநாட்டப்படுவதோடு, அம்மாநில மக்கள் மனமுவந்து இந்தியாவோடு இணைந்திருக்கும் வகையில் அக்கறையுள்ள முன்முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் எனவும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 8 : விலைவாசி உயர்வுக்கு கண்டனம்

முன்னெப்போதுமில்லாத அளவில் விலைவாசி விஷம் போல் ஏறியுள்ளது. ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கையை இந்த விலையேற்றங்கள் கேள்விக்குறியாக்கியுள்ளன. 2009ம் ஆண்டை விட 2010ம் ஆண்டில் வெங்காய விளைச்சலும், சந்தைக்கான விநியோகமும் அதிகமாக இருந்தும், வெங்காயத்தின் விலை மிகக் கடுமையாக உயர்ந்தது. மற்ற காய்கறிகளின் விலையும் மக்களின் வாங்கும் சக்தியை விஞ்சி உயர்ந்தன. உபரியான சாகுபடியினால் தக்காளிக்கு உரிய விலை இல்லை எனக்கூறி ஜார்க்கண்டில் விவசாயிகள் தக்காளியை வீதியில் கொட்டி சில நாட்கள் கழிந்து தக்காளி விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுகள் செயற்கையாக உருவாக்கப்பட்டவை. இதன் பின்னணியில் பன்னாட்டு நிறுவனங்களின் பயங்கர சதி இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அமெரிக்கா, பிரான்சு, இங்கிலாந்து நாட்டு அதிபர்கள் மற்றும் அந்நாட்டு வர்த்தகப் பிரதிநிதிகளின் வருகைக்குப் பிறகு தான் நம் நாட்டில் விலைவாசி விஷம்போல் ஏறத் துவங்கியது. விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில் வால்மார்ட், கேரிஃபோர் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களை சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் ஆனந்த சர்மாவின் கருத்து பன்னாட்டு நிறுவனங்களின் சதியை உறுதிபடுத்தியுள்ளது. நாட்டு மக்களின் நலன்களைக் கருதாமல் பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் என்ற பெயரில் கூட்டுசதி செய்யும் மத்திய அரசை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம் 9 : சட்டம் ஒழுங்கு சீர்குலைவு&கண்டனம்


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பெரும் சீர்குலைவுக்கு உள்ளாகியுள்ளது. காவல்துறை உதவி ஆய்வாளரை, அமைச்சர்கள் முன்னிலையில் படுகொலை செய்யும் அளவுக்கு சமூக விரோதிகள் ஊக்கம் பெற்றுள்ளனர். கொலை, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிவேகமாய் அதிகரித்து வருகின்றன.
சமூக விரோதிகள் அச்சமற்றும், சாதாரண மக்கள் அஞ்சி அஞ்சியும் வாழக்கூடிய அவலநிலையை காவல்துறையின் அலட்சியப்போக்கு உருவாக்கியுள்ளது. இதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. ஆளுங்கட்சியினிரின் தலையீடுகளால், காவல்துறையின் சுதந்திரமான செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை சுதந்திரமாகச் செயல்படவும் அதில் ஆளுங்கட்சித் தலையீடுகள் இருக்கக் கூடாதெனவும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 10 : மணல் கொள்ளை


தமிழகத்தில் அரசு ஒத்துழைப்போடு பெருகிவரும் மணற்கொள்ளையை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. ஆற்று நீர் ஆதாரங்களைப் பாதிக்கும் வகையில், வரைமுறையில்லாமல் ஆற்று மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளிகள் இதன் பின்னணியில் உள்ளதையும் ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. ஆற்றுமணல் கொள்ளையையும், அதற்கு துணை போகும் அரசையும் இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம் 11 : தேனி மாவட்டம் கால்வாய் திட்டம்

தமிழக அரசு தேனி மாவட்டத்தில் 5 லட்சம் மக்கள் பயன்பெற உள்ள 18&ம் கால்வாய் திட்டத்தை, செயல்படுத்தி வருடம் முழுவதும் தண்ணீர் திறப்பதற்கென வேலைகளில் அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 12 :

இந்திய கடல் எல்லைக்குள் மீனவர்கள் கடல் அட்டை எனும் கடல் உயிரினத்தை பிடிக்க மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை உடனெ நீக்கி கடல் அட்டையை பிடிக்க மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் 13 :

இந்தியாவில் வாழும் பல்வேறு சமூகங்களுக்கு அரசியலில் அங்கீகாரம் வழங்கும் விதமாக இந்திய தேர்தல் முறையில் விகிதாச்சார தேர்தல் முறையை உடனே அமல்படுத்த மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.

கருத்துகள் இல்லை: