சனி, 8 ஜனவரி, 2011

வக்ஃபு வாரியத்தின் மருத்துவக் கல்லூரி : சந்தேகங்களுக்கு விடைகள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்,,,,

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மருத்துவக்கல்லூரி சம்பந்தமாக சகோதரர் கவுஸ் அவர்களின் பார்வேடு செய்தியை பார்த்தோம். இது விஷயமாக நாங்கள் அறிந்த, சம்பந்தப்பட்ட முக்கியஸ்தர்களிடம் கேட்டுத்தெரிந்த விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்.

இந்த கல்லூரிக்கு தேவையான 50 ஏக்கர் நிலத்தில் 30 ஏக்கர் மிஸ்பாஹுல் ஹுதா மதரஸா, நீடுர். அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. வக்ப் அனுமதியுடன் இந்த கல்லூரி மதரஸாவிற்கு சொந்தமானதும் அல்ல. வக்ப்க்கு சொந்தமானதும் அல்ல. முழுக்க முழுக்க நமது சமுதாய மக்களிடம் பங்கு வாங்கப்பட்டு பங்குதாரர்களை கொண்ட பொதுக்குழு அமைக்கப்பட்டு பொதுக்குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி மன்ற குழுவினரே மேற்படி கல்லூரியை நடத்தப்போகிறார்கள். தற்போது நிலுவையில் உள்ள டிரஸ்டிகளின் விவரங்களை சொல்வதென்றால் நீடுர் மதரஸாவின் தலைவர், வக்ப் போர்டு சேர்மன், அஞ்சுமன் டிரஸ்ட் (பங்களிப்பு ஐந்து கோடி) எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரி (பங்களிப்பு ஐந்து கோடி) நியு காலேஜ்(பங்களிப்பு ஐந்து கோடி) ஆர்காடு நவாப் (பங்களிப்பு ஐந்து கோடி) மேற்படி நண்பர்கள் உத்தேச டிரஸ்டிகளாக அறிவிக்கப்பட உள்ளார்கள். மிகுதியுள்ள டிரஸ்டிகள் அனைவரும் பொதுக்குழு உறுப்பினர்களால் (பங்குதாரர்கள் மட்டும்) தேர்தெடுக்கப்பட உள்ளார்கள். தமிழகம் முழுவதும இதுவரை நடந்த கலந்தாய்வு கூட்டங்கள் அனைத்தையும் வக்ப் சேர்மன் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமை ஏற்று நடத்தி உள்ளார்கள்.

இன்ஷா அல்லாஹ் வரும் 17-1-2011 அன்று சிதம்பரம் பகுதிக்கான கலந்தாய்வு கூட்டம், சிதம்பரம் பைசல் மஹாலில் நடைபெற உள்ளது. அவ்வமயம் சந்தேகங்கள் அனைத்திற்கும் பதில் தரப்படும் என்று கவிக்கோ அவர்கள் கூறியுள்ளார்கள்.

எஸ்கொயர் சாதிக், இஸ்மாயில் நாஜி மற்ற ஒருவர் ஆக மூவரும் தற்காலிக தகவல் தொடர்பாளர்களாக இருப்பது உண்மைதான். இவர்கள் யாரும் தன்னிச்சையாக செயல்படவில்லை. மருத்துவக்கல்லூரி சம்பந்தமான முதல் கலந்தாய்வு கூட்டம் நீடுரில் நடைப்பெற்ற போது மேற்படி மூவரும் நியமிக்கப்பட்டார்கள். மேற்படி நபர்கள் மீதான அவதூறு செய்திகளுக்கு அவர்களின் சார்பில் வழக்கு போடப்பட்டுள்ளதாக அறிகிறோம்.

தற்போது எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு எங்களால் இயன்ற பதிலை தருகிறோம். மற்ற சந்தேகங்களுக்கு வக்ப்வாரியம்தான் பதிலளிக்க வேண்டும். வக்ப் வாரியம் பதில் தந்துவிட்டதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளார்கள். அது பற்றிய விவரங்கள் பெறப்பட்டு குழுமத்தில் வெளியிடப்படும்.

பல கோடிகளுக்கு யார் பொறுப்பு என்கிற கேள்விகளுக்கு பல கோடிகளை கொடுப்பவர்கள்தான் பொறுப்பாக உள்ளார்கள். காரணம் பங்குதாரர்கள் அனைவரும் ஒவ்வொரு பொறுப்பில் உள்ளார்கள். உதாரணத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்களிலிருந்து ஆட்சிமன்ற குழுவரை.

கல்லூரி அங்கீகாரம பற்றிய கேள்வி சிதம்பரத்தில் மருத்துவக்கல்லூரி இருக்கும் போது அருகில் உள்ள நீடுருக்கு அனுமதி தருவார்களா என்கிற கேள்வி பற்றி.

புதுச்சேரியை பாருங்கள். ஐந்து கிலோமிட்டர் இடைவெளிக்குள் இரண்டு மருத்துவக்கல்லூரிகள். (மகாத்மா காந்தி, அறுபடைவீடு) மேலும் ஜிப்மர், ராஜீவ்காந்த, பிம்ப்ஸ், மகாத்மாகாந்தி, அறுபடைவீடு, மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா இன்னும் சில மருத்துக்கல்லூரிகள் உள்ளது. எனவே, அங்கீகாரம் ஒரு பிரச்சனை அல்ல.

முன்னால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், முன்னால் மருத்துவ பல்கலைகழக வேந்தர்கள, என்று தொழில்நுட்ப கமிட்டியில் இடம் பெற்றுள்ளார்கள். எனவே, இடர்பாடுகள் பற்றி அவர்கள் மிக நன்றாகவே அறிந்துள்ளார்கள். இடர்பாடுகளை நீக்குவதற்கான வழிமுறைகளையும் அவர்கள் அறிந்தவர்கள்தான்.

ஐந்து வருடத்திற்கு இவ்வளவு பெரிய தொகையை யார் வைத்துக்கொள்வதென்று ஒரு கேள்வி எந்த பங்குதாரரிடமிருந்தும் ஒரே செக்கில் பத்து லட்சம் தாருங்கள் என்று யாரும் கேட்கவில்லை. முதலில் மருத்துவமனை கட்ட வேண்டும் அதற்கான தொகை மதிப்பீட்டின்படி பங்குதாரர்களிமிருந்து பகுதி பகுதியாக உதாரணத்திற்கு ஒரு லட்சமோ, இரண்டு லட்சமோ தேவைக்கேட்ப பெறப்போகிறார்கள். மேலும் மருத்துவக்கல்லூரி டிரஸ்டின் பெயரிலேயே வங்கி கணக்கு துவக்கப்பட்டு கணக்கு பராமரிக்கப்படும். எனவே, இது குறித்து யாரும் கவலைப்படவேண்டாம். பயப்படவேண்டாம். எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன்.

மேற்கொண்டு விவரங்களை இன்ஷா அல்லாஹ் வரும் 17-ம் தேதி நடைபெறவிருக்கும் கலந்தாய்வு கூட்டத்திற்கு பிறகு குழும சகோதரர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

கலந்தாய்வு கூட்டம் என்றால் என்ன? நமது சந்தேகங்களை கேட்டு பதில் பெற்றுக் கொள்வதுதான். தமிழகம் முழுக்க இதுவரை ஆறு கூட்டங்கள் நடைப்பெற்றுள்ளது. அந்த கூட்டத்திற்கான அழைப்பு பொது அழைப்பாக விடப்படுகிறது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு சம்பந்தப்பட்டவர்கள் சந்தேகங்களை எழுப்புவதுதான் நியாயமானது, ஆக்கப்புர்வமானது. அதை விட்டு விட்டு தேவையற்ற முறையில் சந்தேகங்களை எழுப்புவது எந்த வகையில் நியாயம்? தானும் செய்வதில்லை, செய்பவர்களையும் குறை கூறிக்கொண்டிருப்போம் என்கிற இந்த சமுதாய இழிநிலை என்றுமாறுமோ? தெரியவில்லை. அனைத்தையும் அல்லாஹ் அறிந்தவனாக இருக்கிறான்.

வஸ்ஸலாம.

அன்புடன்

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்

பரங்கிப்பேட்டை

கருத்துகள் இல்லை: