புதன், 5 ஜனவரி, 2011

ஈரானின் அணுசக்தி நிலையங்களை பார்வையிட வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு அழைப்பு

தெஹ்ரான்,ஜன.5:ஈரானின் அணுசக்தி நிலையங்களை பார்வையிட வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது.

தங்களின் அணுசக்தித் திட்டங்களைக் குறித்து உலக வல்லரசுகளுடன் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னோடியாக இந்நடவடிக்கையை ஈரான் மேற்கொண்டுள்ளது.

ரஷ்யா, சீனா, ஐரோப்பிய நாடுகளில் சில, அணிசேரா நாடுகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்குத்தான் ஈரான் அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்காவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? என்பதுக் குறித்து தெரியவில்லை. ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ராமின் மெஹ்மான் பரஸ்த் இதனை பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார்.

இம்மாதம் துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லில் ஈரான் பிரதிநிதிகளுக்கும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடன் ஜெர்மனியின் பிரதிநிதிகளுடனும் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையின் முன்னோடியாக இவ்வழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் ஜெனீவாவிலும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறவுள்ளது. ஏற்கனவே ஈரானின் அணுசக்தி குறித்து சர்வதேச அணுசக்தி நிலையம் பரிசோதனை நடத்தியிருந்தது. ஆனால், இம்முறை தூதரக ரீதியிலான வருகைதான் எனவும், பரிசோதனை அல்ல எனவும் பி.பி.சியின் ஈரான் செய்தியாளர் ஜெயிம்ஸ் ரினோல்ட் தெரிவிக்கிறார்.

அணுசக்தித் திட்டங்களை நிறுத்தவேண்டுமெனக் கோரி ஈரானின் மீது ஐ.நா நான்கு முறை தடை ஏற்படுத்தியிருந்தது. புஷ்ஹர், நதான்ஸ் ஆகிய இடங்கலிலுள்ள அணுசக்தி நிலையங்களை வெளிநாட்டு பிரதிநிதிக்குழு பார்வையிடும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: