சனி, 19 மே, 2012

மாணவர் இந்தியா – முதல் மாவட்ட மாநாடு

இறைவனின் திருப்பெயரால்..



கூத்தாநல்லூர் – நகராட்சி அலுவலகம் முன்பாக 17.5.12 மாலை 4 மணியளவில், மாணவர் இந்தியா அமைப்பின் முதல் மாவட்ட மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நடத்திய வன்முறை, பற்றியெறியும் பாலஸ்தீன விடுதலை களம், ஈராக்கில் அமெரிக்காவின் அட்டூழியம், காஷ்மீர் கண்ணீர் காட்சிகள், குஜராத் கலவரம் ஆகியவற்றின் புகைப்பட கண்காட்சியும், மருத்துவ பரிசோதனை முகாம் மற்றும் மருத்துவ முகாம், கல்வி நிறுவனங்களின் அரங்கம், சட்ட ஆலோசனை அரங்கம் போன்றவைகளும் இடம் பெற்று இருந்தன.
மாவட்ட தலைவர் K.H. நூர்தீன் அவர்கள் தலைமையெற்க, நீதிபோதனை உரையினை S.P யூசுப் அவர்கள் நிகழ்த்த, நிகழ்ச்சி தொகுப்பு உரையினை டாக்டர். முஹம்மது சர்வத்கான் M.B.B.S அவர்களும், சிறப்புரையினை R. பிரபு தாஸ் – மாவட்ட வக்கீல்கள் அணி செயலாளர் அவர்கள் நிகழ்த்தினார்கள். இம்மாநாட்டில், மாநில பொறுப்பு செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் S. முஹம்மது மாலிக், செயற்குழு உறுப்பினர் A. நாச்சிக்குளம் தாஜ்தீன் மற்றும் தமுமுக மமக நகர, கிளை நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர்.
பேராசிரியர் ஜெ. ஹாஜாகனி அவர்களின் உரையின் சில பகுதிகள்..
”தமுமுகவின் வளர்ச்சிப்பாதையினை மாணவர் இந்தியா நன்றாக கவனிக்க வேண்டும். மாணவர் இந்தியாவின் அமைப்பு 2000 ம் ஆண்டில் திட்டமிடப்பட்டது தான். சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அன்று செயல் படுத்த முடியவில்லை. ஆனால் இன்று மாணவர் இந்தியா அமைப்பு நன்றாக செயல்படும் அமைப்பாக உள்ளது.”
மமக மாநில பொது செயலாளர் M. தமீமுன் அன்சாரி உரையின் சாராம்சம்..
”இழந்த உரிமைகளை மீட்க பிறந்தது தான் தமுமுக, அதனை பின்தொடர்ந்து வந்தது மமக. 18 ஆண்டுகள் கடும் உழைப்பு, பல போராட்டங்கள், கடந்த காலத்தில் நாம் ஆற்றிய தியாகங்கள் அடுத்த தலைமுறையினருக்கு நாம் மனதில் பதிவு செய்ய வேண்டும். வரலாற்று சுவடுகளை எடுத்து பார்த்தால் மாணவர்களும், இளைஞர்களும் தான் மாற்றத்தினை ஏற்படுத்தி உள்ளார்கள்”.
தமுமுக மமக மாநில தலைவர் J.S. ரிபாயி அவர்களின் உரையின் சாராம்சம்..
”செல்போன் கலாச்சாரம் நம் சமுதாயத்தை சீரழித்து விட்டது. நம் சமுதாயத்தில் செல்போனால் வேலி தாண்டிய வெள்ளாடாக பல இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மாறி விட்டார்கள்.”
தமுமுகவின் மூத்த தலைவரும், இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினருமாகிய M.H ஜவாஹிருல்லா M.B.A. M.Phil., Ph.D., அவர்களின் உரையிலிருந்து சில பகுதிகள்..
”இருண்ட காலத்தில் இருந்த சமூகத்தில் அனைத்து துறைகளிலும் தனித்தன்மையினை உருவாக்கியவர் நபி (ஸல்) அவர்கள் என்றால் மிகையாகாது. இஸ்லாம் வரலாற்றில் இளம் வயதில் தன்னுயிரினை தந்தவர் அன்னை சுமைய்யா. ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டதில் பலர் இளைஞர்கள் என்பதும் வரலாற்று குறிப்பு தான். இளைய சமுதாயம் நினைத்தால் பலவற்றை சாதிக்கலாம்.
மதுவினால் பல இளைஞர்கள் சீரழிந்து போய் கொண்டு இருக்கிறார்கள். ஓராண்டு கால சாதனையை சிறப்பிக்கும் அதிமுக அரசு வளமான தமிழகமாக மாறுவதற்கு பூரண மதுவிலக்கு அவசியம் என்பதினை பற்றி சட்டமன்றத்தில் 16.5.12 அன்று பேசி இருக்கிறேன்.
இம்மாநாட்டில் முத்துப்பேட்டையை தனித்தாலுக்காகவும், கூத்தாநல்லூரை தனித்தாலுக்காக மாற்றவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 3000 த்துக்கும் மேற்பட்ட கலந்துக்கொண்ட இம்மாநாடு இரவு 11.30 மணிக்கு முடிவடைந்தது.

கருத்துகள் இல்லை: