வியாழன், 10 மார்ச், 2011

தன்மானம் காக்குமா தாய்ச்சபை...?

அரசியல் களத்தில் முஸ்லிம்கள் இன்னும் எடுப்பார் கைபிள்ளைகள்தான்
என்பதை மீண்டுமொருமுறை நிருபித்துள்ளது தமிழகத்தின் தற்போதைய
சட்டப்பேரவை தேர்தல்களம்.
திமுக கூட்டணியில் அங்கம்வகிக்கும் முஸ்லிம்களின் தாய்ச்சபை எனும்
பெருமைக்குரிய இந்திய யூனியன் முஸ்லிம்லீக் அக்கூட்டணியில் தனக்கு
ஒதுக்கப்பட்ட மூன்று தொகுதிகளிலும் திமுக சின்னமான உதயசூரியன்
சின்னத்திலேயே போட்டியிடுமென அறிவிக்கப்பட்டது.
மீண்டும் மீண்டும் தாய்ச்சபை தனது தனித்துவத்தை இழந்துவருவதை கண்டு
அரசியல் சார்பற்ற சமுதாய சொந்தங்களுமே சோகத்திலும் கோபத்திலும்
இருந்துவரும் வேளையில் மேலும் ஒரு இனிப்பான செய்தி வெளியாகி உள்ளது.
ஆம் "அல்வா" இனிப்பாகதானே இருக்கும்...
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட தொகுதி உடன்பாடு பிணக்கை
சரிசெய்ய முஸ்லிம்லீக் தனக்கு ஒதுக்கப்பட்ட மூன்றில் ஒரு தொகுதியை தாறைவார்த்துவிட்டதாம்...
கூட்டணிதர்மம் பார்ப்பது அரசியலில் நல்ல விசயம்தான் ஆனால்
"ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் மடத்து ஆண்டி" எனும் கிராமப்புற பழமொழிக்கு ஏற்ப
ஏற்கனவே மூன்று என நாமம் போடப்பட்ட முஸ்லிம்லீக்கின் தலையில்தான்
பெரியவர் கலைஞர் கைவைக்க வேண்டுமா...?
இதில் என்ன கொடுமை என்றால் முஸ்லிம்லீக்கிற்கு ஒதுக்கப்பட்ட மூன்றிலும்
வெற்றி பெற்றாலும் அவைகள் சட்டப்படி திமுகவின் வெற்றி தொகுதியாகவே
கணக்கிடப்படும். காரணம் முஸ்லிம்லீக் போட்டியிடுவது திமுக சின்னம்.
அப்படி இருக்கையில் ஏன் அதிலும் ஒன்றை பிடுங்கி காங்கிரசுக்கு கொடுக்க வேண்டும்.
கடந்த கால சில சம்பவங்களை பார்ப்போம். மறைந்த அப்துல் சமது சாஹிப் அவர்கள் இருந்தவரை
திமுகவிற்கும் முஸ்லிம்லீக்கிர்க்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்துவந்தது.
அந்த காலகட்டத்தில் கருத்து வேறுபாட்டால் தேசியலீக்கின் தலைமை பொறுப்பை ஏற்ற
மறைந்த அப்துல்லத்தீப் சாஹிப் அவர்கள் திமுகவுடன் இணக்கமானார். அந்த சூழலில்
நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் திமுக தேசியலீக்கிற்கு ஐந்து தொகுதிகள்
ஒதுக்கும் அதேபோல அதிமுக முஸ்லிம்லீக்கிற்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கும் ஏறக்குறைய
அந்த ஐந்து தொகுதிகளிலும் முஸ்லிம்லீக்கும் தேசியலீக்கும் நேரடியாகவே மோதிக்கொள்ளும்
அந்த காட்சியை திமுக தலைமையும் அதிமுக தலைமையும் கண்டு ரசிக்கும்.
இவற்றை ஏன் சுட்டிக்காட்டுகிறோம் என்றால் எவ்வளவு வரலாற்று பின்பலம்கொண்ட
கட்சி இன்றைக்கு அரசியலில் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து பார்க்கவேண்டும்.
கண்ணியதலைவர் காயிதேமில்லத் அவர்களின் கட்டமைப்பில் பல பெரிய அரசியல்கட்சிகளுக்கு
சவால்விடுக்கும் வண்ணம் தோன்றிய முஸ்லிம்லீக் ஏன் இன்று இத்தகைய பின்னடைவுக்கு
ஆளாகியது...?
எந்த ஒரு சூழ்நிலைகளிலும் முஸ்லிம்களின் அரசியல் மரியாதையை விட்டுகொடுக்காத
கண்ணியதலைவர் காயிதேமில்லத் அவர்களின் வழிதோன்றல்கள் என சொல்லிகொள்ளும்
முஸ்லிம்லீக்கர்கள் ஏன் இந்த அவல நிலைக்கு ஆளானார்கள்...? அரசியலின் சமயோசிதை
தீர்க்கமான திட்டமிடல் இவைகளை அவர்கள் இழந்தார்கள்... கண்ணியத்தையும் மரியாதையையும்
துறந்தார்கள்...
1971 தமிழக சட்டமற்ற தேர்தல்களம் கண்ணியதலைவர் காயிதேமில்லத் அவர்கள் இறுதியாக
பங்கேற்ற தேர்தல்களம். இதே திமுக கூட்டணியில் முஸ்லிம்லீக் அன்றைக்கு ஏழு தொகுதிகளை
பெற்றிருந்தது. திமுக தலைமை முஸ்லிம்லீக்கை தனது சின்னமான உதயசூரியனில் போட்டியிட
வலியுறுத்தியது. காயிதேமில்லத் திடமாக மறுத்தார். அத்தேர்தலில் புவனகிரி தொகுதி வேட்பாளராக
அறிவிக்கப்பட்டிருந்த ஜனாப்.அபுஸாலிஹ் அவர்கள் கண்ணியதலைவர் காயிதேமில்லத் அவர்களிடம்
திமுக சொல்வதை கேட்டு நாம் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடலாமே என சொன்னார்.
அதை கேட்டு சினம்கொண்டாலும் அமைதியாக கண்ணியதலைவர் சொன்னார் அப்படி திமுகவின்
சின்னத்தில் போட்டியிடுவதைவிட முஸ்லிம்லீக்கை கலைத்துவிட்டு திமுகவிலேயே இணைந்துவிடலாம்
என...
அத்தகைய கொள்கை உறுதிகொண்ட தலைவன் கண்ட மாபெரும் இயக்கம் ஏன் இன்று அரசியலில்
தல்லாடும்நிலைக்கு தள்ளப்பட்டது...?
இன்று அல்ல என்று முஸ்லிம்களின் தாய்ச்சபை தனது சொந்த அடையாளமான ஏணி சின்னத்தை
துறந்து இரவல் சின்னங்களில் போட்டியிட துவங்கியதோ அன்றே தனது தனித்துவத்தை இழந்துவிட்டது...
ஏறக்குறைய திமுகவின் சிறுபான்மை பிரிவாகவே தன்னை மாற்றிகொண்ட முஸ்லிம்லீக்கை
சாமானிய முஸ்லிம்கள் தங்களின் அரசியல் அடையாளமாகவே இன்றுவரை நினைதுவருகிறார்கள்
என்பது நிதர்சனம். அதை மெய்பிக்கும்வகையில் சில மாறுதல்கள் முஸ்லிம்லீக்கின் தலைமைத்துவத்தில்
கொண்டுவரப்பட்டபோது சமுதாயமே சந்தோசமடைந்தது. ஆனால் அந்த சந்தோசம் மீண்டும்
சள்ளடையாக்கபட்டுவிட்டது.
முஸ்லிம்லீக்கின் தலைமை நிர்வாகிகளை சமுதாயம் கேட்க நினைப்பது இதுதான்...
எது நடந்தாலும் சமுதாயமே ஓன்று திரண்டு எதிர்த்தாலும் பெரியவர் கலைஞரை விட்டுகொடுக்காமல்
பயணிதீர்களே... அதற்க்கான விலைதான் இந்த அவமானமா...? இரவல் சின்னத்தில் நின்று வென்று
சட்டசபைக்குள் சென்றாலும் திமுகவின் கண்ணசைவுக்குதானே கட்டுப்பட்டாக வேண்டும்...
இப்போதும் அதேபோல உங்களிடம் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் கடந்த
ஐந்தாண்டு காலமாக அவர்கள் சமுதாய பிரச்சனைகள் குறித்து சட்டமன்றத்தில் என்ன விவாதித்து
இருக்கிறார்கள்...?!!! ஒரு வேலை அவர்களோ உங்கள் தலைமையோ நினைத்தாலும்
சகோ.அப்துல் பாசித் அவர்களாலும் சகோ.கலீலுர்ரஹ்மான் அவர்களாலும் தன்னிச்சையாக
எதாவது செயல்பட முடியுமா...?
ஆக சமுதாயத்திற்கு எந்த நன்மையையுமே தராத இந்த பதவிக்களுக்காக ஏன் தன்மானத்தை இழக்க வேண்டும்.?
நேற்று வரை எந்த வகையிலுமே திமுகவிற்கு ஆதரவு அளிக்காத கொமுகவிற்க்கு
கலைஞர் ஏழு தொகுதிகளை அதுவும் சொந்த சின்னத்தில் கொடுத்துள்ளாரே... இது உங்களுக்கு
உறுத்தலாக இல்லையா...? இப்போது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான காரணத்தை சொல்லி
திமுக சின்னத்திலேயே உங்களுக்கு ஒதுக்கப்பட்ட மூன்றில் ஒன்றை பிடுங்கிகொண்டாரே
இது அரசியல் அவமானமில்லையா...?
சமுதாய மக்களின் நன்மதிப்பை மீண்டும் தாய்ச்சபை பெறவேண்டியே அல்லாஹ் இந்த தருணத்தை
முஸ்லிம்லீக்கிற்கு தந்துள்ளான்...
ஆம் திமுகவின் அவமானத்திற்கு பதிலடிகொடுக்க உங்களுக்கு துணிவு இருக்குமேயானால்
திமுக அவமானத்தின் அங்கீகாரமாக கொடுத்துள்ள இரண்டு தொகுதிகளையும் தூக்கி எறியுங்கள்...
சமுதாயம் உங்களுக்கான சிவப்புகம்பளத்தை தயாராகவே வைத்துள்ளது... இல்லை... இல்லை...
இதுவே நாங்கள் பெற்ற பாக்கியம் என்பீர்களானால் அதற்கும் பதிலை சமுதாயம் இந்த தேர்தல்களத்தில்
உங்களுக்கு சொல்லும்...!!!

நன்றி : வேங்கை.சு.செ.இப்ராஹீம்