செவ்வாய், 8 மார்ச், 2011

முஸ்லிம்களுக்கு 10 தொகுதி!! இல்லையேல் கூட்டணி இல்லை!!

சென்னை, மார்ச்.7: சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகபடுத்தும் கோரிக்கையை ஏற்காவிட்டால் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் பத்து இடங்களில் எஸ்.டி.பி.ஐ. தேர்தல் களம் காணும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

எஸ்.டி.பி.ஐ -இன் மாநில பொதுக்குழு சென்னை இம்பீரியல் ஹோட்டலில் மார்ச 5-ஆம் தேதி நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் தெஹ்லான் பாகவி எஸ். டி. பி. ஐ -இன் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்துல் ஹமீது (எ) ஹாஜி பிலால் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நெல்லை முபாரக், முஹம்மது ரபீக் பொதுச் செயலாளர்களாகவும் அப்துல் சத்தரா, அபூபக்கர் சித்திக் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். A.அஹ்மது பாஷா பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முஹம்மது முபாரக்(திருச்சி), அபுதாகிர்(கோவை), அப்துல் சலாம்(ராமநாதபுரம்), முஹம்மது பஷீர்(திருப்பூர்), நிசார்(தூத்துக்குடி) மற்றும் செய்யது அலி(நாகர்கோவில்) ஆகியோர் மாநில செயற்குழு உறுபினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பின்னர் கட்சியின் தேசிய அளவிலான வளர்ச்சி குறித்து அக்கட்சியின் தேர்தல் குழு கண்காணிப்பாளர்கள் அப்துல் மஜீத் மற்றும் அப்ஸர் பாஷா அறிக்கை சமர்ப்பித்தனர். பின்னர் மாநில உறுப்பினர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு நிர்வாகம் பதில் அளித்ததைத் தொடர்ந்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. எஸ்.டி.பி.ஐ. தொடங்கி ஒன்றரை ஆண்டுகளில் மாநில தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முஸ்லீம்களுக்கு 5 சதவீத இடஓதுக்கீடு அளித்து உயர்கல்வியில் உரிய பிரதிநிதித்துவம் மற்றும் வக்பு வாரிய சொத்துகளை பராமரிப்பது ஆகிய வாக்குறுதிகளை அளிக்கும் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் எஸ்.டி.பி.ஐ வரும் சட்டமன்றத் தேர்தலில் பத்து இடங்களில் போட்டியிடும்.

2. அனைத்து கட்சிகளும் முஸ்லிம் சமுதாயத்துக்கு குறைந்தபட்சம் பத்து இடங்களாவது ஒதுக்க வேண்டும்.

3. எஸ்.டி.பி.ஐ அப்பாவி மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படையின் செயலை வன்மையாக கண்டிப்பதுடன் மீனவர்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசை வலியுறுத்துகிறது.

4. சேது சமுத்திர திட்டத்தை உடனே நிறைவேற்றல்.

5. ஐ. பி. சி. பிரிவு-4 ஐ பயன்படுத்தி மாநில அரசு மது விளக்கை அமல்படுத்த வேண்டும்.

6. வேலை இழந்த லட்சகணக்கான நெசவாளர்களுக்கு நிரந்தர தீர்வுகாணல்.

7. அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் எழுபத்தி இரண்டு லட்சம் கோடி ருபாய் கருப்பு பணத்தை திரும்ப கொண்டுவந்து இந்திய மக்களின் மேம்பாடிற்கு பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8. 2002 கோவை குண்டு வெடிப்பில் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று முத்திரைகுத்த முயன்ற கோவை குண்டுவெடிப்பு கதாநாயகன் உளவுத்துறை அதிகாரி ரத்னசபாபதிக்கு அளிக்கப்பட்ட பதவி உயர்வை ரத்து செய்ய மாநில அரசை வலியுறுத்துகிறது.

போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நன்றி : புதியதென்றல்