ஞாயிறு, 13 மார்ச், 2011

ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவை தடை செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு

மும்பை,மார்ச்.12:மலேகான் குண்டுவெடிப்பு போன்ற நாட்டின் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவை தடை செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "பல்வேறு சட்ட விரோத தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சனாதன் சன்ஸ்தாவை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு தொடங்கி இருக்கிறது. இது தொடர்பான திட்டம் மத்திய அரசுக்கு விரைவில் அனுப்பப்படும் என்றார்.

கடந்த 2008ம் ஆண்டு, தானே மாவட்டத்தில் மராத்தி நாடகம் நடந்து கொண்டிருந்த தியேட்டரில் குண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக சன்ஸ்தாவை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போதே இந்த அமைப்பை தடை செய்யும்படி மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படை கோரியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில் பர்பானி, ஜல்னா, புர்னா, ஜல்காவ் ஆகிய இடங்களிலும் கோவா மற்றும் ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவிலும் நடந்த குண்டு வெடிப்புகளிலும் இந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

2009ம் ஆண்டு மார்கோவாவில் தீபாவளி தினத்தில் நடந்த குண்டு வெடிப்பில் மூவர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் சன்ஸ்தாவை சேர்ந்த இருவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

மகாராஷ்டிராவிலும் அண்டை மாநிலங்களிலும் உள்ள சில இந்து அமைப்புகள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதை தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே அம்பலப்படுத்தினார்.

மேலும் அந்த அதிகாரி தெரிவிக்கையில் " 'சனாதன் பிரபாத்' என்ற பத்திரிகை ஒன்றை சனாதன் சன்ஸ்தா அமைப்பு நடத்தி வருகிறது. ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை பற்றி ஆத்திரமூட்டும் வகையிலான கட்டுரைகள் இந்த பத்திரிகையில் வெளியாகி வருகின்றன இதையும் அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது" என்றார்.
source :