திங்கள், 30 நவம்பர், 2009

பாலஸ்தீனம் இறையாண்மை கொண்ட தனி நாடாக வேண்டும்- பான் கி மூன்

Ban Ki-moon

ஐ.நா.: மத்திய கிழக்கு ஆசியாவில் அமைதி நிரந்தரமாக வேண்டும் என்றால் பாலஸ்தீனம் சுயாட்சி கொண்ட சுதந்திர இறையாண்மை உள்ள நாடாக உருவாக வேண்டியது அவசியம் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் சர்வதேச தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பான் கி மூன் பேசுகையில், இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாடுகள், உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கேற்ப தனி சுதந்திர பாலஸ்தீனம் உருவாக்கப்பட வேண்டும்.

கடந்த 40 ஆண்டுகளாக இரு தரப்பிலும் நிலவி வரும் பேரழிவுகளும், உயிரிழப்புகளும் அடியோடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கு இரு தரப்பும் மீணடும் ஆக்கப்பூர்வமான பேச்சுக்களில் ஈடுபட வேண்டும்.

சுதந்திர பாலஸ்தீன நாடு உருவாக்கப்பட வேண்டியது முக்கியமானது, அவசியமானது. 1967ம் ஆண்டு ஏற்படுத்ப்பட்ட நில மாற்ற உடன்பாடுகளின் கீழ் இது நடைபெற வேண்டும். அதேபோல அகதிகள் பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுடன் இஸ்ரேலும், பாலஸ்தீனமும் கை கோர்த்து நடை போட்டால் இப்பிராந்தியத்தில் நிச்சயம் அமைதி நிரந்தரமாகும்.

அதேபோல காஸா முனையில் இஸ்ரேலின் ஆதிக்கம், ஆக்கிரமிப்பு முடிவுக்கு வர வேண்டும். அங்கு உணவு உள்ளிட்ட பொருட்களின் சப்ளை துண்டிக்கப்பட்டிருப்பதாலும், அதில் இஸ்ரேல் தலையிடுவதாலும், அப்பாவி பாலஸ்தீனியர்கள் பெரும் மனிதாபிமான நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர் என்றார் மூன்.

கருத்துகள் இல்லை: