ஞாயிறு, 27 ஜூலை, 2014

முஸ்லிம் மாணவிகள் இருவரைச் சேர்த்துக் கொள்ள அனுமதி மறுத்த டெல்லி அரசுப் பள்ளி

                                                     (தந்தை இர்ஷாத்துடன் இரண்டு மகள்கள்.)

டெல்லி அரசுப் பள்ளி ஒன்றில் இரண்டு முஸ்லிம் மாணவிகளுக்கு இடமில்லை என்று அனுமதி மறுத்திருப்பது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

டெல்லியில் வசித்து வருபவர் இர்ஷாத், இவர் டெய்லர் தொழில் பார்த்து வருபவர். இவருக்கு குல்சும் மற்றும் யாஸ்மின் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவர்களை முறையே 9 மற்றும் 11ஆம் வகுப்பில் சேர்க்க தந்தை இர்ஷாத் டெல்லி ரகுவீர் நகரில் உள்ள அரசு பெண்கள் மேனிலைப்பள்ளியை அணுகியுள்ளார். பலமுறை அணுகிவிட்டார். ஆனாலும் பெண்களுக்கு கல்விபெற அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.

இதனையடுத்து தந்தை இர்ஷாத், கல்வியுரிமை புலத்தில் சேவையாற்றி வரும் அசோக் அகர்வால் என்ற வழக்கறிஞரை அணுகியுள்ளார். அவர் பள்ளிக் கல்வி இயக்குனரகத்திற்கு இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பள்ளியில் ஏற்கனவே நிறைய நெரிசல் உள்ளது என்று அந்த அரசுப் பள்ளி தட்டிக் கழித்து வந்துள்ளது. ஆனால் கல்வியுரிமைச் சட்டப்படி யாருக்கும் கல்வி அனுமதி மறுக்க முடியாது என்கிறார் வழக்கறிஞர் அகர்வால்.

மேலும் சமூகத்தின் ஏழ்மையான பிரிவிலிருந்து வரும் இவர்களுக்கு அனுமதியளிக்க தாமதம் செய்வது அநீதியாகும் என்கிறார் அகர்வால்.

ஒரு பள்ளி மட்டுமல்ல, 3 அரசுப் பள்ளிகள் இந்த இரண்டு மாணவிகளுக்கும் தொடர்ந்து அனுமதி மறுத்துள்ளது. அதாவது ஏப்ரல் மாதம் முதல் இந்த ஏழை முஸ்லிம் தந்தை மகள்களை பள்ளியில் சேர்க்கப் போராடி வருகிறார்.

அனுமதிக்கான ஆவணங்கள் சரியாக உள்ள நிலையில், பலமுறை இர்ஷாத் கடிதம் எழுதியும் இந்தப் பள்ளிகளிலிருந்து ஒரு பதிலும் வரவில்லை. பள்ளியின் இத்தகைய செயல் அநீதியானது என்று கூறும் இர்ஷாத், இது இவர்கள் இருவரது வாழ்வையும் சீர்குலைக்கும் முயற்சி என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

டெல்லி அரசு அதிகாரிகள் இதில் தலையிட்டு இந்த இரு மாணவிகளுக்கும் அனுமதி அளிக்க உத்தரவிட்டும் பள்ளித் தலைமை மௌனம் சாதிப்பது ஏன் என்ற கேள்வியைத்தான் இப்போது அகர்வால் நோட்டீஸ் மூலம் கேட்டுள்ளார். 
source :-
 http://tamil.thehindu.com/india/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/article6252474.ece

கருத்துகள் இல்லை: