செவ்வாய், 6 செப்டம்பர், 2011

புது மணப்பெண் மர்மமான முறையில் உடல் கருகி சாவு!

மன்னார்குடி: மன்னார்குடியில் திருமணமான ஓராண்டிற்குள் மணப்பெண் மர்மமான முறையில் தீயில் கருகி இறந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் நூர் முகம்மது (68). இவர் நூர் என்ற பெயரில் மளிகை கடை மற்றும் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். மூத்த மகன் ஜாபர் அலிக்கு கடந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். திருமணம் ஆன 15 நாட்களில் அந்த பெண் ஜாபரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

இதனையடுத்து கடந்த ஓராண்டுக்கு முன் ஒரத்தநாட்டை சேர்ந்த ஷேக் அலாவுதின் என்பவரின் மகளான நஜிதாபேகம் (16) என்ற பெண்னை ஜாபர் அலிக்கு திருமணம் செய்து வைத்தனர். நேற்று காலை எட்டு மணியளவில் நஜீதாபேகம் பாத்ரூமில் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடப்பதாக மாமனார் நூர் முகம்மது மன்னார்குடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக மன்னார்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசரணை நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு திருமணமாகி ஓரு வருடமே ஆவதால் மன்னார்குடி ஆர்.டி .ஓ., சவுந்திரராஜன் இது குறித்து விசாரணை மேற்கொண்டார்.அப்போது நஜிதாபேகத்தின் தந்தை ஷேக்அலாவுதின், எனது மகளை அடித்து உதைத்து தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் எனது மகளின் மாமனார் நூர்முகம்மது ஈடுபட்டுள்ளார். தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கதறினார். இந்த வழக்கு குறித்து காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.