திங்கள், 5 செப்டம்பர், 2011

இஸ்ரேல் தூதர், அதிகாரிகள் வெளியேற்றம், ஒப்பந்தங்கள் ரத்து : துருக்கி அதிரடி

அங்காரா : காஸா முற்றுகையைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் காஸாவுக்கு நிவாரண பொருட்களை எடுத்துச் சென்ற கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய மிருகத்தனமான தாக்குதலில் 9 துருக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். அதை பற்றி ஐ.நா குழு விசாரணை நடத்தியது. இன்று வெளியிடப்பட்டுள்ள அவ்வறிக்கையில் இஸ்ரேல் அதீத பலத்தைத் தேவையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐ,நாவின் அறிக்கையைத் தொடர்ந்து துருக்கி இஸ்ரேலின் தூதர், முக்கிய இஸ்ரேல் அதிகாரிகளை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதோடு ராணுவ ஒப்பந்தங்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. இஸ்ரேல் முறைப்படி மன்னிப்பு கேட்காததாலும் இறந்தவர்களுக்கு இழப்பீடு தராததாலும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துருக்கி வெளியுறவு துறை அமைச்சர் அஹ்மத் தவுடோக்லு கூறினார்.

"இரண்டாம் செயலாளர் அந்தஸ்துக்கு மேலுள்ள அனைத்து இஸ்ரேல் அதிகாரிகளும் புதன்கிழமைக்குள் துருக்கியை விட்டு வெளியேற்றப்படுவார்கள்" என்றும் கூறினார். காஸா பகுதிக்குள் யாரும் செல்ல முடியாமல் மூடியுள்ள இஸ்ரேலின் செயலைச் சரியானது என கூறியுள்ள ஐ,நாவின் கூற்றைத் தாம் ஏற்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். "அதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையில் இப்பிரச்னை எழுப்பப்படும்" என்றும் கூறினார்.