வியாழன், 8 செப்டம்பர், 2011

ஈரானில் போதை மருந்து கடத்திய 184 பேருக்கு மரண தண்டனை!

தெஹ்ரான்: ஈரான் நாட்டில் போதை மருந்து கடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் நான்கு பேருக்கு செவ்வாய்க்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவர்களுடன் சேர்த்து போதை மருந்து கடத்தியமைக்காக இந்த ஆண்டில் மட்டும் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மரணதண்டனைக்கு உள்ளானோரின் பெயர் விவரம் ஹமீத் கே, காசிம் பி, உசைன் ஜே, சியாமக் எம் என்று அரசு தெரிவிக்கிறது. இந்த ஆண்டில் இதுவரை 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானில்தான் அதிகம் பேருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது என்று ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு இது 179 ஆக இருந்தது. ஆனால் இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் உண்மையல்ல இவற்றைவிட அதிகம் பேர் மரண தண்டனைக்கு உள்ளாகின்றனர் என்று மனித உரிமைகள் அமைப்பு கூறுகிறது.

சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட மரண தண்டனை அவசியம், எங்கள் நீதிமன்றங்களில் விரைவாகவும் விரிவாகவும் விசாரணை நடத்திய பிறகே மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது என்று ஈரானிய அரசு விளக்கம் அளிக்கிறது.

கொலை, பாலியல் பலாத்காரம், ஆயுதம் தாங்கியவர்கள் நடத்தும் கொள்ளை, போதை மருந்து கடத்தல், கள்ளத் தொடர்பு ஆகிய குற்றங்கள் புரிந்தால் நீதிமன்றத்தால் நன்கு விசாரிக்கப்பட்டு பிறகே மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்கிறது ஈரான்.