வியாழன், 10 மே, 2012

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்து தர சட்டசபையில் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA கோரிக்கை


முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கையிலே பேசுவதற்கு வாய்ப்பளித்தமைக்காக என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் சமூக நீதி தழைத்தோங்க கூடிய ஒரு மாநிலம். நீதிக்கட்சி தொடங்கி, பெரியார், பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் போட்ட பாட்டையிலே 1994 ஆம் ஆண்டிலே இந்திராசானி வழக்கிலே உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிலே 50 விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது என்று தீர்ப்பு வழங்கியபோது, அந்தத் தீர்ப்பு தமிழகத்தின் பாரம்பரிய சமூக நீதியைப் பாதிக்கக்கூடிய வகையிலே அமைந்தபோது, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மிகச் சிறப்பான ஒரு முடிவை எடுத்து, இந்தப் பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அரசியல் சாசனச் சட்டத்தினுடைய 9 ஆவது அட்டவணையிலே பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுடைய இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்ததை இந்த நேரத்திலே, தொடக்கத்திலே நன்றி கூறி, நினைவுகூற கடமைப்பட்டிருக்கிறேன்.
அதேபோல்தான் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இடையிலே குறுக்கிட்டுப் பேசியபோது, மீண்டும் அந்த இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது, அவசர அரசாணையைப் பிறப்பித்து இன்று பிற்படுத்தப்பட்ட மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் தமிழகத்திலே இடஒதுக்கீட்டின் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு நிச்சயமாக அதிமுக அரசுக்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஒரு மாநிலத்தில் இடஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டிற்கு மேல் செல்லக்கூடாது என்பது ஒரு நீதியான, நேர்மையான வாதம் அல்ல. உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதியரசர் ஓ. சின்னப்பரெட்டி அவர்கள் கூட ஒரு மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் எத்தனை விழுக்காடு இருக்கின்றார்களோ அத்தனை விழுக்காடு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டுமென்று அவருடைய கருத்தினை பதிவு செய்திருக்கின்றார். அந்தப் பாதையிலே தொடர்ச்சியாக இந்த அரசும் நடவடிக்கை எடுத்து, தமிழகத்திலே எத்தனை விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கின்றார்களோ அவர்களுக்கெல்லாம் இடஒதுக்கீடு கொடுக்கக்கூடிய நாள் நிச்சயமாக இந்த ஆட்சியிலே வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நம்முடைய அதிமுக அரசு இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு, தேர்தல் நேரத்திலே கொடுத்த பல வாக்குறுதிகளை அடுக்கடுக்காக தமிழக அரசு நிறைவேற்றி வருகின்றது. விலையில்லா அரிசியாக இருக்கட்டும் அல்லது மிக்சி, கிரைண்டர், பேன் ஆக இருக்கட்டும். அதேபோல சிறுபான்மை கிறிஸ்தவ மக்களுக்கு ஜெருசலேம் செல்வதற்கான மானியமாக இருக்கட்டும், இவை எல்லாவற்றையும் நிறைவேற்றி வந்திருக்கின்றீர்கள். அதற்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

அதே நேரத்திலே, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் நேரத்திலே முஸ்லிம்களுக்காக தமிழகத்திலே இருக்கின்ற 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அதிகரித்துத் தரப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கின்றார்கள். அந்த வாக்குறுதியையும் விரைவிலே நிறைவேற்றி வைக்கப்பட வேண்டுமென்று இந்தத் தருணத்திலே மீண்டும் நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த 3.5 விழுக்காடு என்று இருப்பதனால், Roaster 200 points போட வேண்டிய சூழலிலே, அதிலே பலருக்கும் பல சிக்கல்கள் இருக்கின்றன. எனவே, இந்த fraction ஐ எடுத்து அதை முழுமையாக்கிவிட்டால் Roaster ஐ 100 ஆக்கி விடலாம். அதனால் எல்லோருக்கும் பலன் கிடைக்கும் என்பதை இந்த நேரத்திலே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
சில துறைகளிலே, குறிப்பாக மருத்துவ மேல் படிப்பிலே, அதைபோல பல்கலைக்கலகங்களிலே இருக்கக்கூடிய சில துறைகளிலே பத்துக்கும் குறைவாக அங்கே இருக்கை இருக்கும்போது அந்த roaster முறையை நாம் அமல்படுத்தும்போது சில சமூகத்தினர் 25, 50 ஆண்டுகளுக்கு பிறகுதான் அவர்களுடைய turn வரக்கூடிய ஒரு நிலை இருக்கின்றது. இந்த முரண்பாடுகளையும் களைவதற்கு நிச்சயமாக இந்த அரசு முயற்சி எடுக்க வேண்டுமென்று இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்திலே தலித்-ஆக அல்லது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களாக இருக்கக்கூடியவர்கள் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டால் அவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலே சேர்ப்பதற்கு ஓர் அரசாணை கடந்த காலங்களிலே போடப்பட்டு அது அமலிலே இருக்கின்றது. ஆனால், அதே நேரத்திலே தலித் ஆகவோ அல்லது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களாக இருந்து அரசியல் சாசன சட்டம் தரக்கூடிய உரிமையின் அடிப்படையிலே இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு முஸ்லிமாக மதம் மாறியவர் என்றுதான் சான்றிதல் கொடுக்கிறார்களே தவிர, ஏனென்றால் அவர்கள் S.C. க்கான உரிமையையும் இழந்து விடுகிறார்கள். B.C. க்கான உரிமையையும் இழந்துவிட்ட பிறகு அவர்களுக்கு நியாயப்படி B.C. முஸ்லிம் என்று சான்றிதல் கொடுக்க வேண்டும். அதற்கு வழி இல்லையென்று சொல்கிறார்கள். எனவே, கிறிஸ்தவத்தை தழுவிய தலித்துகளுக்கு இருப்பதுபோன்று ஓர் அரசாணை இந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட வேண்டுமென்று இந்த நேரத்திலே தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சமீபத்திலே தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம், சரியாக சொல்ல வேண்டுமென்றால், கடந்த ஜனவரி 2012 லே 250 சிறுபான்மை மொழி வழி ஆசிரியர்களுக்கான நேர்காணலை நடத்தியது. இதில் உருது வழி பாடங்களுக்காக 20 பணியிடங்களிலே 2 மட்டுமே நிரப்பப்பட்டிருக்கிறது. எஞ்சிய 18 இடங்கள் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு Roaster முறையிலே ஒதுக்கப்பட்டதனால், அந்த வகுப்பார்களிலே உருது படித்தவர்கள் யாரும் இல்லை என்பதன் காரணமாக இந்த 18 பணியிடங்களும் காலியாக இருக்கின்றன. இதுபோன்ற முரண்பாடுகளை களைவதற்கும் இந்த அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

சிறுபான்மை மக்களுக்கென தனியாக மருத்துவக்கல்லூரி தொடங்க சட்டசபையில் மமக ஆலோசனை

முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த அரசு சிறப்பான சாதனையை செய்வதற்கான ஒரு ஆலோசனையை இந்த அவையில் முன் வைக்க விரும்புகிறேன். வக்ப் வாரியத்தின் சார்பாக சிறுபான்மை மக்களுக்கென தனியாக ஒரு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. இஸ்லாமிய சமுதாயத்திற்கு நீண்டகாலமாக இருந்துவரும் இந்த ஆசையை, தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும்.
அதுபோல 'தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், நெல்லிக்குப்பம் மற்றும் கடலூர் Old town, பழைய நகரத்தில் வக்ப் வாரியத்திற்கு சொந்தமான இடங்களிலே புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு அரசாங்கம் வீடு கட்டுவதற்கு முன்வந்தாலும் கூட கட்ட முடியவில்லை. ஏனென்றால் அந்த இடம் வக்ப் - க்கு கீழே இருக்கின்றது. எனவே, அரசாங்கம் வக்ப் வாரியத்திற்கு பணம் கொடுத்து வக்ப் வாரியத்தின் மூலமாக வீடு கட்டி அந்த மக்கள் பயனடைவதற்கு வழிவகை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, முஸ்லிம் மகளிர் உதவி சங்கம் திறப்பதற்கு அரசாங்கம் இணையான நிதியை அரசு தரும் என்ற ஒரு நிலையிலிருந்தது. அது கடந்த திமுக ஆட்சியிலே மாற்றப்பட்டு அதிகபட்சமாக matching grant, இணை நிதியாக 10 இலட்சம்தான் தருவோம் என்று சொன்னார்கள். என்னுடைய கோரிக்கை என்னவென்றால், அந்த மகளிர் சங்கங்கள் வலுவாக அமைவதற்கு இந்த அரசாங்கம் matching grant ஆக பார்க்காமல் 10 இலட்சம் ரூபாயை வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகத்தினுடைய பணிகள் விரிவாக்கப்பட வேண்டும். Co-operative bank இல் ஒழுங்காக லோன் தருவதில்லை. அதனைச் சீர் செய்ய வேண்டும். நான் இந்த ஆட்சியைப் பற்றி சொல்லவில்லை. கடந்த காலங்களிலே Co-operative bank மட்டுமல்லாமல், Nationalized Bank களிலிருந்து அந்த லோன் பெறுவதற்கான வழிவகை செய்ய வேண்டும். TAMCO விற்கும், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்திற்கும் விரைவிலே தலைவர்களும், உறுப்பினர்களும் நியமிக்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, நல்ல வாய்ப்பைதந்த மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து அமர்கிறேன்

புதன், 9 மே, 2012

காஷ்மீர் மாநிலத்திலிருந்து முஸ்லிம் பெண் ஐஏஎஸ்!

காஷ்மீர் மாநிலத்தின் ஈஸ் அஸ்கர் என்ற 25 வயது இள மங்கை ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு

'அகில இந்திய அளவில் நடக்கும் ஒரு தேர்வில் வெற்றி பெறுவது என்பது எவ்வளவு சிரமம் என்பது நமக்கு தெரியும். அதுவும் கடந்த 20 வருடங்களாக முழு காஷ்மீரும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. பெண் என்ற வகையில் பாதுகாப்பும் முக்கியததுவம் பெறுகிறது. எனது பெற்றோரும் எனது உறவினர்களும் நான் இந்த நிலையை அடைய மிகுந்த உறு துணையாக இருந்துள்ளனர்.” என்றார்.

கேள்வி: காஷ்மீரைப் பொறுத்தவரை மேல் படிப்புக்கு செல்வது என்பது மிகுந்த சிரமமான ஒன்று என்று சொல்லப்ட்டு வருகையில் உங்களின் இந்த முன்னேற்றம் எதைக் காட்டுகிறது?

பதில்: “நான் மட்டும் அல்ல. என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் காஷ்மீருக்கும் இந்திய நாட்டுக்கும் திறம்பட பணியாற்றவே விரும்புகின்றனர். லடாக், காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஸ்ரீநகர் என்று அனைத்து பிரதேச மக்களும் தற்போது படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் கொடுத்தால் கண்டிப்பாக தங்களின் திறமையினால் முன்னுக்கு வருவார்கள்.”

திங்கள், 7 மே, 2012

ஆற்காடு: 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த கபரஸ்தான் இடம் ஆக்கிரமிப்பு! தமுமுக முயற்சியால் மீட்பு

வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் மாசாப்பேட்டை பகுதியில் முஸ்லிம்களின் அடக்கஸ்தலம் ஒன்று உள்ளது. சையத் ஷா ஹக்கானி வக்ஃபின் பராமரிப்பின் கீழ் இது உள்ளது. இந்த வக்ஃப் பரம்பரை வகையைச் சார்ந்ததாகும். சையத் ஷரீப் சாஹிப் என்பவர் இதன் பராமரிப்பாளராக உள்ளார். சுமார் 80 வயதைக் கடந்த இவர் தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினர்கள் ஹைதராபாத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டில் ஒருமுறை இப்பகுதிக்கு வந்து தமது முன்னோர்களின் அடக்கஸ்தலங்களைப் பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.
இந்த அடக்கஸ்தலம் 0.47 சென்ட் கொண்டதாகும். இதன் பராமரிப்பாளர்கள் ஹைதராபாத்தில் வசிப்பதாலும், சையத் ஷரீப் சாஹிப் அமெரிக்காவில் வசிப்பதையும் அறிந்து கொண்ட சிலர் இந்த இடத்தை ஆக்கிரமிக்க முயற்சித்துள்ளனர். ஷமீல் அஹமது, சாதிக் பாஷா, படேசாப் (எ) காதர் பாய், பக்ஷு (எ) கரிமுல்லா ஆகியோர் அப்பகுதியின் 18வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருக்கும் சுந்தரம் என்பவரின் துணையுடன் இந்த அடக்கஸ்தல இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். கடந்த 17.03.2012 அன்று ஜே.சி.பி. இயந்திரம் மூலம் சமாதிகளை இடித்து, பிளாட் போடுவதற்கு வசதியாக கபரஸ்தானை சமன் செய்துள்ளனர். தொடர்ந்து பிளாட்டுகள் போட்டு, அதில் 10 பிளாட்டுகளை விற்பனையும் செய்துள்ளனர். இந்த தகவல் அப்பகுதியில் புதிதாக துவங்கப்பட்ட தமுமுக கிளையின் நிர்வாகிகளுக்குத் தெரியவர, மாவட்ட நிர்வாகிகளின் வழிகாட்டுதலின் பேரில், பேராசிரியர் உசேன் உள்ளிட்ட பத்து கல்லூரி பேராசிரியர்கள் துணையுடன் இடத்தை மீட்கும் முயற்சியில் கிளைச் செயலாளர் எச். ஆசாத் இறங்கினார்.
ஹைதராபாத்தில் வசிக்கும் வக்ஃப் பராமரிப்பாளரின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு ஆக்கிரமிப்பு குறித்து விளக்கியுள்ளார். அவர்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் சையத் ஷரீப் சாஹிபிடம் விஷயத்தைக் கூறவே, அவர் அடுத்த சில நாட்களில், கபரஸ்தானை மீட்க, ஆற்காடு வந்துள்ளார். அவரிடம் தமுமுக கிளைச் செயலாளர் ஆசாத், நடந்த சம்பவங்களை விவரித்துள்ளார். இதையடுத்து அவரை அழைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அஜய் யாதவை சந்தித்து, ஆக்கிரமிப்பு குறித்து புகார் தெரிவித்துள்ளனர். அந்த இடம் வக்ஃபிற்குச் சொந்தமானது என்பதை ஆதாரங்களுடன் விளக்கியுள்ளனர்.
ஒரு அடக்கஸ்தலத்தை மீட்பதற்காக அமெரிக்காவிலிருந்து பெரியவர் சையத் ஷரீப் சாஹிப் வந்துள்ளது மாவட்ட ஆட்சியருக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சையத் ஷரீபின் புகாரை கவனமாகக் கேட்டு, உடனடியாக அந்த இடத்தை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். உடனடியாக தாசில்தாருக்கும், சர்வேயருக்கும் உத்தரவுகள் செல்லவே, அவர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்திற்கு வருகைதந்து, இடத்தை அளந்து, இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர்.
இதையடுத்து வேலூர் வக்ஃப் ஆய்வாளர் முஹம்மது இம்ரான், ஆற்காடு டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து தமுமுகவினரும் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து ஷமீல் அஹமது, சாதிக் பாஷா ஆகிய இருவரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை சில மணி நேரங்களில் விடுவித்துவிட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டதாக பத்திரிகைச் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், வக்ஃபுக்குச் சொந்தமான கபரஸ்தானை மீட்பதில் கவனம் செலுத்திய மாவட்ட ஆட்சியர், இதற்கென அமெரிக்காவிலிருந்து வருகைதந்த முதியவர் சையத் ஷரீப் சாஹிபையும், வக்ஃபை மீட்கும் முயற்சியில் பங்கெடுத்த தமுமுகவினரையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தமுமுக கிளைச் செயலாளர் ஆசாத், நூற்றுக்கும் மேற்பட்ட முன்னோர்களின் சமாதிகளை இறைவனின் அச்சம் சிறிதும் இல்லாமல், முஸ்லிம் பெயர்தாங்கிகள் இடித்து, போலி ஆவணங்கள் தயாரித்து அதனை விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர். இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும், ஆற்காடு வந்த பெரியவர் சையத் ஷரீப் சாஹிப் அவர்கள், சம்பவ இடத்தைப் பார்த்ததும் பெரும் கவலையடைந்தார்.
அந்த இடத்தை எப்படியும் மீட்கவேண்டும் என்பதில் நம்மைப் போலவே அவரும் அக்கறையுடன் இருந்தார். நாங்கள் மாவட்ட நிர்வாகிகளின் வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தோம். தமுமுகவின் பெரும் முயற்சியினால் தற்போது அந்த இடம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. ஆற்காட்டில் இ து போல் ஏராளமான வக்ஃபு சொத்துக்கள் ஆக்கிரமிப்பட்டிருந்தாலும், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வக்ஃபு சொத்து மீட்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும்’’ என்று கூறிய ஆசாத், குற்றவாளிகளில் ஓரிருவரை மட்டும் விசாரித்த காவல்துறை, அவர்களை சிறைக்கு அனுப்பாமல் விடுவித்துள்ளதை குறைகூறினார்.


செவ்வாய், 1 மே, 2012

இஸ்லாமிய சிறை வாசிகளை விடுதலை செய்ய கோரி கோவையில் கவன ஈர்ப்பு மாநாடு



இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் ஒருங்கினைக்கும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி தொடர் பொதுக்கூட்டம் ஏப்ரல் 29 கோவையில் நடைபெற்றது.
இதில் சட்ட போராளி ப.பா.மோகன் அவர்கள் தலைமை தாங்கினார். இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய கோரி விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் விடுதலை உரையாற்றினார். அவரை தொடர்ந்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M.பாக்கர் அவர்களும், மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொது செயலாளர் தமீமுன் அன்சாரி அவர்களும், SDPI-ன் மாநில பொது செயலாளர் ரபீக் அஹமத் அவர்களும் விடுதலை உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்களும், சிறைவாசிகளின் குடும்பத்தினர்களும், இஸ்லாமிய இயக்க சகோதரர்களும் கலந்துகொண்டனர்.





தீர்மானங்கள்

1.10ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய இக்கூட்டம் வலியுருத்துகிறது.

2. மத பேதம் பாராமல் இசுலாமிய ஆயுள் சிறைவாசிகளை எதிர்வரும் செப்டம்பர்15 அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்ய கோருகிறோம்.

3. இசுலாமிய சிறைவாசிகள்10 ஆண்டுகள் கழித்து விடுதலைக்கு தகுதியிருந்தும் கடந்த ஆட்சியின் பாரபட்ச போக்கால் விடுதலை செய்யப்படவில்லை கடந்த ஆட்சியின் தவறுகளை கழைந்து இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய இக்கூட்டம் கோருகிறது.

4.சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலையில் மட்டும் பாரபட்சம் ஏன் தமிழக சிறைகளில் உள்ள இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய இக் கூட்டம் கோருகிறது.

5. மற்ற மாநிலங்களில் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் முடிவில்லா சிறைவாசம் இல்லாமல் 7.10, ஆண்டுகளில் விடுதலை செய்வதைப்போல் தமிழகத்திலும் வாழும் உரிமையை ஆயுள் சிறைவாசிகளுக்கு அளிக்கவேண்டும் என இக்கூட்டம் கோரிக்கைவைக்கிறது.

6.அனைது சிறைவாசிகளுக்கும் இருப்பது போல் வழிகாவல் இல்லாமல் இசுலாமிய சிறைவாசிகளுக்கு பரோல் விடுப்பு அளிக்கவேண்டும் என இக்கூட்டம் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

7.இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் முன் விடுதலைக்கு தடையாக முந்தைய ஆட்சியாளர்கள் பாரபட்சத்தோடு பிரப்பித்த அனைத்து அரசானைகளையும் ரத்து செய்ய இக்கூட்டம் தமிழக அரசை வழியுருத்துகிறது.

8.சிறையில் இனம்புரிய சிறைநோயில் தினம் செத்துக்கொண்டிருக்கும் அபுதாஹீரை உடனடியாக விடுதலை செய்து அவருக்கு உரிய மருத்துவ வசதிகள் செய்ய இக்கூட்டம் வளியுருத்துகிறது.

9. சாதிய வண் கொடுமைக்கு எதிராக போராடி சிறைபட்டிருக்கும் தோழர் துரைபாண்டி,ஜோதி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சிறையில் இருக்கும் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட,தமிழ்தேசிய விடுதலைப் போராளிகளை விடுதலை செய்ய இக்கூட்டம் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது

10.சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் தமிழீழ அகதிகளை சிறையைவிடகொடுமையான முகாம்களை அடைத்துவைத்துளதை கைவிட்டு, உடனடியாக விடுதலை செய்ய இக்கூட்டம் வலியுருத்துகிறது. செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்துவரும் ஈழ தமிழர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து அவர்களை அவர்களின் குடும்பத்துடன் சேர்ந்து சுதந்திரமாக வாழ அவர்களை அனுமதிக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுருத்துகிறது.

11.சிறைமாற்றம் என்ற பெயரில் இசுலாமிய சிறைவாசிகளை தங்களது சொந்த ஊரில் சிறையில் இருந்து பிடிங்கி அவர்களுக்கும், குடும்பங்களுக்கும் துன்பம் விளைவிப்பதை கைவிட இக்கூட்டம்தமிழக அரசை கேட்டுகொள்கிறது. சிறைமாற்றம் செய்யப்பட்ட இசுலாமிய சிறைவாசிகளை உடனடியாக கோவை சிறைக்கு மாற்ற வேண்டும் என தமிழக அரசை வேண்டுகிறோம்.

மேற்கண்ட தீர்மாணங்கள் மக்களின் எழுச்சி முழக்கத்துடன் நிறைவேற்றப்பட்டது.

எமது சிறைவாசிகளை மீட்கும் போராட்டம் தொடரும்.

சிறைவாசிகளின் மீட்பு பணியில்
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்.
தமிழ்நாடு

இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம்

இலங்கை தம்புள்ள எனும் இடத்தில் உள்ள 67 ஆண்டுகால பாரம்பரியமிக்க பள்ளிவாசலை சேதப்படுத்தி முற்றிலுமாக தகர்க்க முயலும் சிங்கள புத்த குருமார்களின் செயலைக் கண்டித்தும், அதற்கு துணைபோகும் இனவெறி ராஜபக்ஷே அரசைக் கண்டித்தும் தமுமுக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது தலைமையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
மசூதி அமைந்துள்ள இடம் பௌத்தர்களின் புனித இடம் என்று கூறி அங்குள்ள பள்ளிவாசல் இடிக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்தது. கடந்த 20.04.2012 அன்று முஸ்லிம்கள் வெள்ளிக் கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது சுமார் 2000க்கும் அதிகமான புத்த மதகுருமார்கள் ஆயுதங்களுடன் காவல்துறை துணையோடு அப்பள்ளிவாசலைச் சுற்றி வளைத்துள்ளனர். தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களை பலவந்தமாக வெளியேற்றி, பள்ளிவாசலை சேதப்படுத்தியுள்ளனர். கடும் எதிர்ப்பு காரணமாக அவர்களது வெறித்தனம் முழுமையாக நிறைவேறவில்லை. ஏற்கனவே தமிழர்களின் பாரம்பரிய கோயில்களையும், தேவாலயங்களையும் சேதப்படுத்தி அழித்த சிங்கள வெறியர்கள் இப்போது தமிழ் பேசும் முஸ்லிம்களின் பள்ளிவாசலையும் சேதப்படுத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.
இதை முன்னிட்டு இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமைகளையும் வழிப்பாட்டு உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சிங்கள இனவெறியர்களின் பாசிச போக்கை கண்டித்தும் தமுமுக நடத்திய இப்போராட்டத்தில் தமுமுகவின் மூத்த தலைவர்கள் பேரா.எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ, செ. ஹைதர் அலி, துணைத்தலைவர் குணங்குடி RM ஹனிபா, மமக பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளர் வன்னியரசு, பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், நாம்தமிழர் கட்சி அய்யநாதன்,தமுமுக செயலாளர்கள் பேரா. ஹாஜாகனி, மீரான் மொய்தீன், சேவ் தமிழ் இயக்கத்தின் பரிமளா, காந்திய மக்கள் இயக்க மாநில செயலாளர் குமரய்யா, தலைமை நிலைய செயலாளர் இனியன்ஜான் முஸ்லிம் சமுதாய கூட்டமைப்பு அனிபா, மே 17 இயக்கத்தினர் மற்றும் தமிழ் தேசிய உணர்வாளர்கள், சிறுபான்மை சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர். இப்போராட்டத்தை தென் சென்னை மாவட்ட தமுமுக நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.

















source : tmmki.in