சனி, 6 ஆகஸ்ட், 2011

மாணவி போட்டோவை ஆபாசமாக மார்ஃபிங் செய்த 3 பேர் கைது!

சென்னை: பள்ளி மாணவி ஒருவரை ரகசியமாக செல்போனில் படம் எடுத்து, அதை ஆபாசமாக மார்பிங் செய்து நண்பர்களுக்கு அனுப்பிய பெயின்டர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் அடுத்த சேலையூரை சேர்ந்தவர் குமார் சேலையூர் காவல்நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: எனது மகள் சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்த அவளை சேலையூரை சேர்ந்த பெயின்டர் சந்திரகுமார் (19), அம்சலிங்கம் (39), ஆலப்பாக்கம் ராஜேஷ்குமார் (24) ஆகியோர் செல்போனில் படம் பிடித்து அதை ஆபாசமாக மார்பிங் செய்து நண்பர்களுக்கு அனுப்பி யுள்ளனர்.

இதுபற்றி சந்திரகுமாரிடம் கேட்டபோது உன்னால் எங்களை எதுவும் செய்ய முடியாது. நாங்கள் பல பெண்கள் படத்தை இதுபோன்று மார்பிங் செய்து வைத்துள்ளோம். காவல்துறையில் புகார் செய்தால் மேலும் பலருக்கு அனுப்பி உன்னையும், உனது மகளையும் அவமானப்படுத்துவோம்‘ என்று மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் குமார் கூறியிருந்தார். இதுகுறித்து ஆய்வாளர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து, சந்திரகுமார், அம்சலிங்கம், ராஜேஷ்குமார் ஆகியோரை கைது செய்தார். அம்சலிங்கம் பழ வியாபாரமும், ராஜேஷ்குமார் செல்போன் கடையும் நடத்தி வந்துள்ளனர்.

சந்திரகுமார் கூறுகையில், ‘‘பள்ளிக்கு நடந்து சென்ற குமாரின் மகளை செல்போனில் படம் பிடித்து ராஜேஷ்குமாரிடம் கொடுத்தேன். அவர் கம்ப்யூட்டரில் ஆபாசமாக மார்பிங் செய்து செல்போனில் பதிவு செய்து தந்தார். அதை நண்பர்களுக்கு அனுப்பினேன்‘ என தெரிவித்துள்ளார். இவர்கள் மூவரையும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.